Manசெம்பூக்கள் அற்றுப்போன
பாலைவெளிப் பொழுதுகளில்
சிறகுகளை
எரித்துக் கொண்டிருப்பவன் நான்

உன் மின்மினிக் கண்கள் வைத்த
நெருப்பினில் மிச்சமின்றித்
தீய்ந்து புகைகிறதொரு பெருங்காடு

தனிமைக் கிணற்றினில் செத்து மிதக்குமொரு
தவளையின் பிரேதமென் கனவு

‘ஓ’வென விழுமிள மரக்கிளை பற்றியே
தவிக்கிறது சிறு உயிர்க்கூடு
சுழித்துக் கிளம்பிய புயலின் இதழ் கொண்டு
முத்தமிட்டு துவைத்தவள் நீ

உடைந்து சிதறிய வளையோடு
சேர்த்தொரு
மனசைச் சிதைத்தவன் நான்

காலம் கொத்தியது
யாரின் கண்களை

உன் பனிக்கரம் தொடாத தூரத்தில் எனை
வாரி எறிந்தது எவரின் கரங்கள்

நள்ளிராப் பொழுதொன்றில்
பிர்கையில் தழுவிய
கதகதப்பில் உயிர்க்கிறது மூச்சு

நாமிட்ட மாலைகள்
பிரிவுக்காக அல்லவே

இரவு கழிந்தும் எரிகிறது விளக்கு
நீ சொன்ன காலம் கழிந்தது போலவே


பச்சியப்பன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.