Loversபூவுலகிற்கு வெப்பம் சிந்தாத
அந்தியொன்றின் வெயில்
பகல் முழுதும் வெக்கையில் காய்ந்த
மாலைச் சூரியன் மெல்ல மெல்ல
நீரில் குளிக்கவென இறங்கும்வரை
பரந்த கடல்வழி நீரின் மேல் மிதக்கும்
ஒற்றைப் படகொன்றில் நீயும் நானும் மட்டும்
இருள் வந்த பின்
பகலில் பெருவெப்பம் தந்து
வெயிலலையும் பொழுதுகளில் கானல் நீர் காட்டியபடி
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
மேடுகளிலிருந்து மணல் சரியும்
அழகிய பனிக்காலப் பாலைவனம்
நடுவிலொரு மெழுகுதுணிக் கூடாரம்
இரவின் இருளகற்ற நிலவு
உயிர் நெருக்கும் குளிர்
உன்னிலும் என்னிலும் குளிரகற்ற
விறகுத் தீ போதவில்லையென
நாற் கைகளும் கோர்த்து
சுவாசங்களால் ஒருவரையொருவர்
உஷ்ணப்படுத்தியபடி நீயும் நானும் மட்டும்

இப்படியெல்லாம்
ஒரு கோடி எண்ணங்கள்
நாமிருவரும் பல்லாண்டுகளொன்றாய்
வாழ்ந்திடத் தூண்டும்படியான
ஆசையைத் தோற்றுவித்துப் பின்
தனிமையைச் சுட்டுகிறது நிஜம்
அறிவாயா பெண்ணே


எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It