1)

பனிமழை பொழிந்திடும் பொழுதொன்றையொத்த
குளிர்ந்த கானமொன்றை இசைத்தபடி
நீயனுப்பிய செய்தியினைக் காண்கிறேன்
தேவதை விரல்களின் மந்திரக்கோல்
ஆகாயத்திலிருந்து
மயில்நீல வண்ணத்தை மட்டும் காத்திருந்து பெற்று
வெண்பஞ்சு மேகங்களில் எழுதியனுப்பியது போல
என் கைகளில் எடையின்றிக் கனக்கும் அச் சுபசெய்தி
இரவுகளிலும் எனது வாழ்வின் அத்தனை இருள்களிலும்
பல ஒளி மின்னல்களாக ஊடுருவி வெளிச்சம் பாய்ச்சுகையில்
நரம்புகளில் இனிமையாய் அதிர்கிறது

இப்பொழுதெல்லாம்
எனைச் சூழ உள்ள எல்லா மூலைகளிலும்
பூவினை அணைத்தபடி நீயே நிற்கிறாய்
என்றுமே வாடாப் பூவொன்று
வாசனை மிக்க தன் மனதோடு அணைத்தபடி
இக்காதல் பூவினைக் கொண்டாடுவதை
எண்ணி எண்ணித் திளைக்கிறதென் மனது
மலர்க்காடே எப்பொழுதில், எந்தச் செடியில்
பூத்ததிந்த முதல் பூ
காதல் பூ


- எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

 

Pin It