துயரங்களின் புன்னகையில்
புத்தர் இருப்பதை
கண்டு கொள்ளும் போது
நாம் சருகுகளை முத்தமிடுவது
மரத்திற்காக அல்ல

மதகு திறந்து விட்ட குளத்தைப் போல
வற்றி விட்ட இதயத்தில்
புரையோடி கிடக்கும் மௌனம்

எண்ணத்திற்கும் எண்ணத்திற்கும் இடையில்
கடக்க முடியாத தூரம்

ஒரு நட்சத்திரத்தை
பூவைப் போல
கையில் ஏந்திக் கொள்ள
இந்த இரவு
தரும் வாய்ப்பை
நான் நிராகரிக்கிறேன்

துயரப்பட்ட இதயங்கள்
ஒவ்வொன்றையும்
நட்சத்திரங்களாக்கி
சபிக்கும் இரவை
நாம் எவ்விதம்
அணைத்துக் கொள்வது ?

ஒளியின் வாலை கவ்வும்
இருள் தான்
மெல்ல மெல்ல
ஜீவன்களின் வாழ்க்கையையும்
விழுங்குவது

துயரங்களின் முகவரி தேடிச் செல்ல
நாம் ஒன்றும் சித்தார்த்தர்கள் அல்லவே

இன்றைய இலைகள்
நாளைய சருகுகள்
உதிர்தலைப் பற்றி கவலைப்படுவதில்லை
காற்றடித்தால் நடனமிடுகின்றன
கடைசி இலை உள்ள வரையிலும்

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.