(1)

கருவேலங் காட்டிற்குள் மயிலின் கேவல்
அர்த்த ராத்திரியில் ஆந்தையின் அலறல்
நனைந்த முந்தானையாய் அவள்.
வன்மத்தின் கூக்குரல் வீறிட்டெழுகிறது
நீரற்ற பூமியின் துக்கம் வெடிக்கிறது
கடைசி நிமிடங்கள் படபடக்கின்றன.
நாலா புறங்களிலும் பறவைகள் பறக்கின்றன
குளம் நிறைய அல்லிகள் பூத்திருக்கின்றன
அதிகாலைச் சூரியன் சிரித்தபடி அங்கு வருகிறான்.
பசித்தவன் புத்தர் ஆனான்
நதியாய் பெருக்கெடுத்தோடியது பசி
உடல் உணவுக்காக ஏங்கியது.
விளக்கைப் பொருத்து ஒளிரட்டும்
இருதயம் முழுக்க இருள்
உன் கண்ணீரை விற்க வழியில்லைை
காலடித் தடங்கள் முன்னோக்கி செல்கின்றன
மனது பின்னால் திரும்பிப் பார்க்கிறது
நகர்வுகளில் நிலை குலைகின்றன யாவும்.

(2)

எனக்குள் ஒரு போராடுகிற மனிதன் இருக்கிறான்
ஒவ்வொரு நொடியும் கனவுகளுக்குள் இழுத்தடிக்கிறான்
தினமும் கோபத் தீச்சட்டியை சுமந்தலைகிறேன்
புற்றை அடித்து நொறுக்குகிறேன்
பாம்புகளெல்லாம் வெளியே வந்தன
பயந்து கொண்டிருந்தால் இறக்க நேரிடலாம்
என் உடலை மீட்க நான் போராடுகிறேன்
கண்ணீரும் துயரமும் கசப்பும் கசிகின்றன
கனவுகள் பற்றியெரியும் தேசம் மெளனமாயிருக்கிறது
துக்கத்தினைபொதிந்துவைக்க கோணிய கண்டுபிடிக்க முடியவில்லை
கவலையை போட்டு வைக்க பெட்டி அகப்படவில்லை
கண்ணீர் பிடித்து வைக்க பாத்திரத்தக் காணாம்
ஆங்கார வெறியோடு ஆடுகிறது தனிமைப் பேய்
உடுக்கையடித்து பிரம்படித்து அடங்கவில்லை
வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறொன்னும் செய்ய முடியவில்லை
காலம் களுக்கென்று சிரித்தபடி போகிறது.

- வசந்ததீபன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.