வெளியில் இருக்கும் மனது
எப்படி உள்ளே வருகிறது
என்று கேட்டால்
நான் என்ன பதில் சொல்வது?
உள்ளேயிருக்கும் ஒன்று
காலியாகிக் கொண்டிருக்கிறதென்று
வேண்டுமானால் சொல்லலாம்

ஒரு பறவையின் வசிப்பிடத்தை
திறந்த கூடென்றும் அழைக்கலாம்
ஆனாலும் அது அவ்வளவு
பொருத்தமாக இராது

கூட்டுக்குள் நுழைந்து
வெளியேறும் பறவை
ஒரு இறகோ
ஒரு மின்மினியோ
சிறுதானியமோ
என்று ஏதாவதொரு பிரியத்தை
மிச்சம் வைத்து விட்டுத் தானே
செல்கிறது

நீங்கள் எவ்வளவு தேடினாலும்
அங்கே
ஒரு கபட புன்னகையைக்
காண முடியாது
வேண்டுமானால்
வெதுவெதுப்பாக உருளும்
ஒரு வெண்முட்டையை
உள்ளங்கையில் ஏந்தி
உருட்டி விளையாடலாம்

- தங்கேஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.