பிரயத்தனப்பாடுகளின்
நோவினையில்
வழிந்தோடும்
கண்ணீர்
துடைக்க கெதியற்று
பொட்டைக் கேட்டது
புருஷனை காவாக்கியதொரு
தினக்குடித்தலில்.
இனியொரு விதி செய்யலாம்தான்
புதுக்கோலம் பூண்டு.
கற்பு விற்பனைக்கென
கண்கள் அலைவதைப்
பார்க்கும் பொழுது.
என்
சீதைப் பாடுகளில்
ராவணன் மிகைத்துவிடும்போது
இங்கெவரும்
இராமனாகாத
துயர்
துக்கிக்கிறதென்
அன்றாடங்களில்
காவியப் பொய்யுடுத்த
மறுத்து.
***
நீல வானத்தில் நீந்த...
ஆராவாரக் கூச்சல்
அடங்கிய
தனிமையில்
உன் பரிபாசைகளை
அறியேன்
ஆழ்கிணறுக்குள்
துழாவும்
கைகளென
வீழ்கிறது
பொழுது
வீணச்சமேறி
யுகாந்திர துயரமாக.
பிறகானதொரு நாளில்
வாய்த்துவிடும்
வானவில்லின்
தரிசன கோணம்
துலங்கும் வேளை
பரிதவிக்குமென்
அதரங்கள்
பாதம் பற்றி
ஒத்திவிடும் பொழுது
நீ
உச்சி முகர வேண்டும்
நாம்
ஓருயிராய்த் துடித்துவிட.
***
மௌனமென்றான பின்...
அசலற்று
பேசப்படுகிறது
நெடு நாளைய
பிரயத்தனமாக
மௌனத்தைச் சொல்லிவிட
முயன்று.
பேரமைதி
அழைக்கிறது
பெரு முயற்சியின்
தோல்வியாக
பிதற்றலுக்குப் பின்
மௌனத்தைச் சுவைக்க.
சில்லறைகள்
சிதறுகிறது ஒலிகளில்
செவிப்பறை கிழிப்பதாக.
இலையாக விழும்
தாளின் மதிப்பறியாது
மௌனப்போக்கை
புரியாமலும்.
உச்சாடன ஓலங்கள்
அறியவில்லை
வேடமிடும் கைங்கரியத்திலிருந்து
விடுபட வேண்டுமென
ஒரு பொழுதும்.
யுக யுகமாகத்
தொடர்கிறது
பேரவலம்
மௌனமென்றான
பின்
பேசச் சொல்லும்
அறியாமையாக
இயல் நகர்வின்
அசௌகரியத்தைக்
கெடுத்து.
- ரவி அல்லது