வெயிலோ மழையோ
கையேந்த வைப்பதில் ஆனந்தம்
அதுவும் எட்டி எட்டி பார்ப்பது
மற்றும் பரிதாபமாய் பார்ப்பது
ரெம்ப பிடிக்கும் போல
யாருக்கிருக்கோ இல்லையோ
தட்டை நீட்டி
எதையாவது பிடுங்குவது நோக்கம்
எல்லாவற்றுக்கும் கெஞ்ச வேண்டும்
அழ விட்டு அரற்ற விட்டு காண்பது
பேரானந்தம்
நேரம் குறித்து முன் பின்
காக்க வைப்பதில் உள்ளார்ந்த
குதூகலம் வேறு
எல்லாம் தாண்டி காசுள்ளவனுக்கு
தனி வரிசை
இல்லாதவனுக்கு மூச்சடைத்து
முதுகு வேர்க்கும் மூன்றாவது வரிசை
கடவுளே நீ ஒரு மேட்டுக்குடி வம்சம்
என்று எங்களோடு இருந்திருக்கிறாய்
பார் கைகூப்பி இத்தனை புலம்பியும்
கண்டும் காணாத காதோடு ஜம்பமாய்
எங்களுக்கு எதிரே தானே
அமர்ந்திருக்கிறாய்....!

- கவிஜி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.