உச்சி வெயில் பாறையென
வரண்டுக் கிடக்கிறது மனம்

போட்டிகளில் கலந்து கொண்டு
போராடும் பிள்ளைகளுக்குப்
பறவையின் சுதந்திரப் பறத்தலை
முடியவில்லை புரிய வைக்க.

ஒழுங்கின் கோடுகளில் நூல் பிசகாமல்
பயணப்படும் இவர்கள்
மனவெளியெங்கும் உச்சத்தில் வன்மம்

விழுந்த பழமாக அழுகி
மண் தேடும் விதை வேர்கள்

கிளைகளும் நிழல் தர மறுத்து விட்டதால்
நீர் நிறைந்த நிலத்தில்
அழுகத் தொடங்கி விட்டன

கிளைத்து பூத்து காய்த்து
காற்றோடு மகிழும்
ஒவ்வொரு மரத்திற்கும்
தெரிவிக்கப்படாமல் போய்விட்டது
வேர்களும் அதன் அழுகையும்

காய்ந்து விழும் சருகின் ஓசை
சுய நல ஆரவாரத்தில் திசை
தெரியாமல் எங்கோ
மெளன ஓலத்தில்
வந்து விழப்போகும் மற்றொரு
சருகுக்காகக் காத்திருக்கிறது.

- முனைவர் ம இராமச்சந்திரன்

More articles by முனைவர் ம இராமச்சந்திரன்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.