ஆயிற்று..
ஆயத்தங்கள் முடிந்தன
அனாதைப் பிணத்தை
வெள்ளைத் துணியின்
கிழிசல் தெரியாமல்
லாவகமாகப்
போர்த்திக் கிடத்தியாச்சு..

தலைமாட்டில் வாழைப்பழம்
செருகிய வத்திகள்
நெடியைக் கிளப்பும்
வத்திக் கங்கும்
மண்டிய புகையும்..

வக்கிரமும் குரூரமும்
மறைத்துக் குந்திய
நாலைந்து சோக முகங்கள்
பிணத்தைச் சுற்றி..

முன் யோசனையோடு
சில்லறை ரூபாய் நோட்டுக்களைக்
கொஞ்சமாய்ச் சிதறவிட்ட
துண்டு விரிப்பு..
பறந்துவிடாதபடி
நாலுபக்கமும் கனத்த கற்களோடு..

ஒப்பிக்கும் பாணியில்
கனத்த சோக மிரட்டலுடன்
பிணத்தின்முன்
பிச்சை வேண்டி யாசிப்பு

பலரும்
அனிச்சையாய்
வீசியெறிந்த
சில்லறைக் குவியலில்
மூச்சுத் திணறியது பணவேட்கை
நல்ல வேட்டைதான்..

பணத் துண்டை
முடித்துக் கிளம்பையில்..

அனாதைப் பிணத்தை
என்ன செய்வது?

மரணமும் பிணங்களும்
இயற்கையின் நியதி
அவற்றோடே
வாழப் பழகுங்கள்

வருங்காலம் நிச்சயமில்லை
மரணத்தோடு வாழும்
மனப்பக்குவம் வாய்த்துவிட்டால்
எதுவும் துன்பமில்லை.
ஊருக்கு உபதேசம்.

- மலையருவி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.