மெல்ல
அருகழைத்து
ஆசையாய்த் தலைகோதி
கருணை விழிதேக்கி
இதழ்விரித்துப்
புன்னகையால்
மௌனம் பேசம்
நன்மைகளும்
தொலைந்தனவோ

தலை சிலுப்பி
இரத்தம் இதழ்வடிய
கைகளில்
சூலும் வாளும் ஏந்தி
கூடிக் கூடிக்
குதித்து ஆர்ப்பரித்துக்
கூக்குரலால் வான்பிளக்கும்
தீமைகளின் களமாக
திசையெட்டும்
ஆயினவோ

பொய்களைப் படையலிட்டு
அதிகாரச் சூடமேந்தி
கோஷங்களின் மணியோசையில்
இரத்தம் தெறிக்கும்
பூஜைகள் யாருக்காக?

நாளை
பூஜைகளின் உச்சத்தில்
வாளேந்தி
தன்குடுமிக் கைபிடித்து
நவகண்டம் யாராவார்?

- மலையருவி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.