கொல்லப்பட்டவனுக்கும்
கொலை செய்தவனுக்கும்
ஒரே கடவுள்..!

கூர்வாளில் சொட்டும்
குருதிப்பெருக்கு தாங்காமல்
குரல்வளை நெரிபட
கூக்குரல் எழுப்புகிறான்
ஒருவன்..!

கொலை செய்வதன்
குற்றவுணர்ச்சி ஏதுமின்றி
புனிதத்தின் போதை
உச்சந்தலைக்கேறி
வெற்றியில் களிக்கிறான்
இன்னொருவன்..!

இதைச் சகிக்க முடியாமல்
சாத்தானை அடக்கும்
சாத்தியங்கள் ஏதுமின்றி
தவிக்கும் வேளையில்

கொலையுண்டவன்
கொலை செய்தவன்
இருவரின் பிரார்த்தனைகளும்
ஒருசேர ஒலிக்க
தப்பி ஓடுகிறான் கடவுள்..!

- அமீர் அப்பாஸ்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.