cindrella 300வானத்தின் இருளில் மெல்ல இறங்கிய தேவதை
அந்த பெருநகரத்தின் புறவழிச்சாலை மரத்தின் கீழ்
தினமும் இந்நேரத்தில் வருகிறாள் என்ற விஷயம்
மெல்ல பனி போல் படர்ந்தது நகரத்தில் !

ஒருவர் இன்னொருவருக்கு தெரியாமல்
ஒவ்வொருவராய் அவள் தரும் வரத்திற்கென
வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்
தினமும் இந்நேரத்தில் யாரும் அறியாமல் !

அவர்கள் கேட்பதை எல்லாம் கொடுத்தபடி
தேவதையும் கணக்கெடுத்தாள் வந்த ஜனத்தொகை
சரிபார்க்க இரட்டிப்புத் தொகை வந்து போயுள்ளது
தெரிய வந்ததும் சிரித்துக் கொள்கிறாள்..தனக்குள்ளே !

புகழும், பணமும், பதவியும், போகமும், இச்சையும்
கௌரவமும், என வந்தவர்கள் பெற்று சென்றது
எல்லாமே ஏறக்குறைய எதிர்மறை விஷயங்களே
என்பதை அறிந்தவள் சிரித்துக் கொள்கிறாள்..தனக்குள்ளே !

ஒரு கனவின் மயக்க நிலையில் அரை உறக்கத்தில்
வந்து பெற்ற அத்தனையும் அவர்களிடம்
நிற்காது என்பதையோ ..நின்றாலும் அனுபவிக்க
நிரந்தரமாய் இல்லாது போவார்கள் என்பதை மட்டும்

அறிந்த அந்த தேவதை ..சிரித்துக் கொள்கிறாள்..தனக்குள்ளே !
இதோ..விஷயம் காட்டுத் தீயாகப் பரவி
அடுத்த அடுத்த நகரங்களில் இருந்து அலைமோதியபடி
வந்து கொண்டே இருக்கிறது பெருங்கூட்டம்!

Pin It