எத்தனை ஆயிரம் இட்டிலி,
எத்தனை ஆயிரம் தோசை..
லட்சமெல்லாம்
லட்சுமிக்கும் தெரியாது
அவள் மாக்குவளைக்கும் ..
கிருஷ்ணவிலாசில் சரியான அளவில்
எவர்சில்வர் குவளை வாங்கிய புராணம்
அரிசி ஊறும்போதெல்லாம் சொல்லிச் சொல்லி
அக்கம் பக்கத்துக்கே மனப்பாடம்.
அமாவாசை கார்த்திகை ஆட்டுக்கல்
காத்திருப்பு
எரிச்சல் இருந்தால்
நங்கென்று வைக்கவும்
கரகரவென மேலும் கீழும் இடித்து
சாய்த்துக் கரைக்கவும் தோது.
பக்கத்தில் நிற்கும் வானொலிப்பாடலை
முணுமுணுத்தபடி
மாவு அள்ளும்போது
குவளையும் குழந்தை..

புழக்கடை ஆட்டுக்கல்
புழுதியோடு கிடக்கிறது
பொங்கும் மாவின் புளித்த வாசமற்று
குவளை பரணில்
எலிப்புழுக்கையின் வீச்சத்தோடு
எந்தப் பாத்திரமும் பேசாது
எனவே நம்பிக்கை
மணிரத்னம் ரசிகர்களுக்கு.

உமாமோகன்

Pin It