அரும்வாழ்வு  வாழ்ந்திட்ட  தாத்தா  பாட்டி

            அருகருகே  அமர்ந்துபேசி  காவல்  காத்த

ஒருகுடும்பம்  குடியிருக்கும்  அளவில்  வீட்டை

            ஒட்டியன்று  இருந்ததுவே  பெரிய  திண்ணை !

வருவோரும்  போவோரும்  ஓய்வெ  டுக்க

            வாஞ்சையுடன்  இடமளித்துத்  திகழ்ந்த  தன்று

விருந்தினர்கள்  மகிழ்ச்சியுடன்   பாக்கை  மென்று

            வீதியுள்ளோர்  நலம்கேட்க  ஒளிர்ந்த  தன்று !

 

நகரத்தில்  மட்டுமன்றிக்  கிராமத்  துள்ளும்

            நாகரிகம்  மாறியதால்  திண்ணை  யெல்லாம்

தகர்ந்தின்று   போனதுவே  மனிதர்க்  குள்ளே

            தரைமட்டம்  ஆகிவிட்ட   நேயம்  போன்றே !

முகம்விரிந்த  ஆசைகளாய்  முகப்பு  மாறி

            முந்தைவீடு  அடுக்ககமாய்  உயர்ந்த  போதும்

அகம்சுருங்கிப்  போனதுபோல்  பெரிய  வீட்டின்

            அறைகளெல்லாம்  தனிவீடாய்  ஆன  தின்று !

 

கூட்டாக  இருந்தவர்கள்  மறைந்து  போன

            குருவிகளாய்த்  தனித்தனியாய்ப்  பிரிந்து  போனார்

காட்டாக  இருந்தநல்ல  உறவெல்  லாமே

            காணாமல்  சந்ததியர்  மறந்து  போனார் !

வேட்டிகளும்  சேலைகளும்  உடலில்  மாறி

            வேறுஉடை  போர்த்தியது  போல  இன்று

வீட்டிற்குள்  செல்பேசி  கணினி  யாலே

            வீற்றிருந்தும்  வேறுவேறாய்த்  தனித்துப்  போனார் !

Pin It