death man 316என் சாம்பல் என்னுடனே இருக்கட்டும்
அதிலிருந்து பூக்கள் பூக்கட்டும்
அது வாசமற்றோ
அதீத வாசனையுடனோ இருக்கட்டும்
என் சாம்பலில்
உன்னைத் தேடாதே
உன் போதனைகளைத் தேடாதே
உன் மந்திரக்கதைகளை கேட்டு
இந்த உடல் வளர்ந்திருக்கலாம்
அதெல்லாம் காற்று
வீசும் போது உதிர்ந்து விட்டன
நான் தனியாகத்தான் அழுதுகொண்டிருந்தேன்
நான் தனியாகத்தான் உழைத்துக்கொண்டிருந்தேன்
நான் தனியாகத்தான் மலை உச்சிக்கு ஏறிக்கொண்டிருந்தேன்
நான் தனியாகத்தான் போராடிக்கொண்டிருந்தேன்
அப்பொழுதெல்லாம் நீ வரவில்லை
நான் பெரும் பள்ளத்தில் உருண்டு விழுந்த போது
நீ வரவில்லை
என்னை தூக்கிவிட ஏதோவொரு கரத்தை
எதிர்பார்க்கும் போதும் வரவில்லை
இப்பொழுது வந்திருக்கிறாய்
உன் கடவுளோடு
எனக்குத் தெரியும்
இந்த பூனைக்குட்டிக்கு
என் வீட்டில் என்ன வேலையென்று.

Pin It