ஓங்கி உயர்ந்த மரங்கள்
இச்சாலைகளை போர்த்தி இருக்கிறது
கூடடைந்த பறவைகளின்
குதூகல குரல்
அமைதியை விடவும்
அழகாக இருக்கிறது

நாயினை
மடியில் ஏந்தி நடக்கும்
இக்கரை தாயொருத்தியின்
விலையுயர்ந்த கைநுனி கயிற்றில்
சிரித்துக் கொண்டே கடக்கிறது குழந்தை
எப்படியான வாழ்க்கையிலும்
சிரிக்கத் தவறுவதில்லை
குழந்தைகள்

அருவியைப் போல
சதா புகைந்து கொண்டே இருக்கிற
விடைத்த மூக்கு தாத்தாவின்
முகமன்
எப்போதும்போல் வரவேற்கிறது
குடியிருப்பின் வாசலில்
நீண்டு விரியும்
புல்தரையில்
தங்கமென ஜொலிக்கிறது
மீதமிருக்கும் பகல்

மழைக்கு முன்னதாக
தாழப் பறக்கும்
தும்பியினை போலொருத்தி
இன்றும் பெயர் சொல்லி அழைக்கிறாள்
திரும்பிச் சிரிக்கையில்
இன்றைய நாள் எப்படியென கேட்டு
புருவம் வளைக்கிறாள்
சொல்லும்படியான நாளில்லாத பொழுதும்
அவள் எதிர்பார்த்த பதிலுரைக்கிறேன்
ரசிக்கத்தகுந்ததாய் இருக்கிறது
அவளுதிர்த்த முத்து

கதவடைத்து
உள்நுழைகையில்
இன்றும் அமர்ந்திருக்கிறது
அறையினுள் நடுநாயகமாய்
எனக்கெனவே காத்திருக்கும்
தனித்த அந்தி

இன்றும் மழை வந்தால்
நன்றாக இருக்கும்

- க.உதயகுமார்

Comments

1 comment

1
[email protected]
Kavithai,kavithayaai kedaku..

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.