ஆதிமனத்தின் புனைவாக
அக்குரல்
சன்னமாக புறப்பட்டு
பின் காற்றின் நாவால் துலக்கமடைகிறது

யுகம் யுகமாய் பயணப்பட்டும்
நீர்த்துப் போகாமல்
உயிர்த்திருக்கிறது
செதிலேரிய தொண்டையின்
அவலஒலி

மீளாவலியுற்று
நடுகைப்பொழுதில்
அலறும்
துணையற்ற ஆணொருவனின்
பரிச்சயமான குரல் போலவே
எனக்குத் தெரிகிறது
காற்றில்
அவ்வளவு வெம்மை ...

அத்தனித்த இதயத்தின்
துயர கானம்
நீண்டு நீண்டு நீளும்
மகாகாலத்தின் சுவர்களில்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது
உங்கள் செவிகளோ
மூடியே கிடக்கின்றன

உதிரத்தின் புளித்த சுவை
உங்களுக்கும் பிடிக்குமென்றால்
அநாதிகாலமாக நீளும்
அந்நெடுங்குரலின் மிகுதுயரள்ளி
மிடறு மிடறாய்
பருகிக் களிப்போம்
என்னோடு வருகிறீரா ?

- க.உதயகுமார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.