krishnaveni_282பூத்துக் காய்த்து சிலிர்த்து
கோடையில் சாய்ந்து விழும்
சிறு மரம், செடி உவமையாகா
ஆழத்தில் ஊடுறுவி
இறுக்கமாய் பற்றியிருக்கும்
ஆணிவேருனக்கு

தாழையூத்து பஞ்சாயத்துயுனை
தலைவியாய் அடைந்தது வரம்
யாருன்னை அடித்துப் போட்டாலும்
பட்டுப்போக நீயொன்றும் சிறுகொடி கிடையா

அச்சமில்லையுனக்கு
எழுந்துநில் துணிந்துபோராடு
துச்சம் உனக்கெல்லாம்
சிறுபுழுக்களும் விட்டில்களும்
வீழ்த்தாதெம்மை

மேட்டு நீர் தாழ்வாரத்தெம்மடியில்தான்
வீழ்ந்தாகவேணும்,
ஆழ்வதற்கு வசதியாய்
அகழியை அகலப்படுத்த வந்தவள் நீ

வெட்டிய வீச்சறுவாள்
உறைக்குள் கிடந்து கதறும் ஒரு நாள்
இரத்தம் சிந்திய உனை கூப்புமது
தூரமில்லை நிகழும் பார்

தாழ்ந்தோரென எமை
வீழ்ந்து கிடக்கும் விதிசெய்தோரை
வாழ்ந்தே வெல்லும் உன் திறனை
வணங்காதிருப்பது நலமில்லைகாண்

ஆதலால், கிருஷ்வேணியுனை
வணங்குகிறேன் தாயே,
சூரியன் உன் திசையில்
புலரும் நாள் தூரமில்லை
துச்சம் உனக்கெல்லாம் துணிந்து போராடு…

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.