கருகும் உடலின் வாடையை

இன்ஹேலரில் அடைத்து சுவாசிக்கும்

அரசனை உங்களுக்கு தெரிந்திருக்ககூடும்


பால்நிற உடைமேல்

குருதியை மாலைப்போல அணிந்திருக்குமவன்

சித்திர விரும்பியும் கூட

மஞ்சள்கருப்பு நிறங்களை

வரைந்து கொன்றோ

கொன்று வரைந்தோ கொண்டிருந்தவனிடம்

யாரோ சொன்னார்களாம்


வண்ணங்களின் கரைசலை

குடிக்கவைத்துவிட்டால் வரையாமலே

உடலில் கோடுகள் தோன்றுமென


மிச்சம் மிகுந்து

பட்டியில் அடைக்கப்பட்டஇருப்பவர்களுக்கு

இறக்குமதி செய்யப்பட்ட வண்ணக்கரைசலை

நேரிடையாக

இரைப்பையில் புகட்ட

முளைக்கலானது

கோடுகளோடு வாலும்

வழிந்தோடிய வண்ணக்கரைசலை

கூரிய ஆயுதமாக்கினர் சிறார்கள்


பதறியோடிய அரசனை நிறுத்தி

புத்தன் சொன்னான்


"வென்றுவிடுதலென்பது

வீழ்த்திவிடுவதாகாது"


- விஷ்ணுபுரம் சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.