இயல்பாய்
ஒரு சொல்லை
எனக்களித்தாய்
ஆரவாரமின்றி
இரண்டு சொற்களாக
திருப்பித் தந்தேன்
அவற்றிலிருந்து
அறுவடை செய்து
நான்கு சொற்களை
வழங்கினாய்
அந்த நான்கு சொற்களையும்
செதுக்கி அலங்கரித்து
உன் வீட்டு முற்றத்தில்
வைத்துச் சென்றேன்..
மறுநாள் காலையில்
என் சன்னலோரத்தில்
பதினாறு சொற்கள்
குவியலாயிருந்தன..
அன்றிரவு
அந்த பதினாறையும்
ஒருவழியாக்கி
உன் வயலில் விதைத்து திரும்பினேன்
அதிகாலையில்
என் மாந்தோப்பில்
160 மூட்டை சொற்கள்
கிடத்தப்பட்டிருந்தன..
அவற்றை சுமந்து வந்து
பதினாறாயிரம் மூட்டைகளாக
உன் முல்லைக்காட்டில்
இறக்கித் திரும்பினேன்..
திணறியபடி வந்து
முன்னர் அளித்த
ஒற்றைச் சொல்லைத்
திரும்பக் கேட்டாய்..
எடுத்துக் கொள்ளென
எனதறையின் வாசலைத்
திறந்துவிட்டேன்..
உன் சொல்லிலிருந்து
பல்கிப் பெருகிய
கோடானுகோடி சொற்கள்
அடைபட்டிருந்தன..
அதிலிருந்து
உன் சொல்லைப்
பிரித்தெடுத்து
வெளியேறினாய்..
சில நொடிகளில்
வெடித்து சிதறி
பால் வெளிமுழுதும்
பரவிக் கிடந்தது
உன் ஒற்றைச் சொல்.
- இசை ப்ரியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Is it LOVE ??
Kadhala ??
RSS feed for comments to this post