beggarகடந்து போகும் மனிதர்களின்
தன்னலக் கூச்சல்களில்
கரைந்து போய்க்கொண்டிருக்கிறது
அவளின் விசும்பல்கள்...
 
பாத்திரம் நெளிந்திருப்பதால்
தானும் நெளிந்திருப்பதாய்
காரணம் சொல்லிக்கொண்டிருந்தன
வழக்கொழிந்த காசுகள்...
 
பழுப்பேறி நிறம் மாறிய
தலைமுடி, பிச்சைக்காரிகளுள்
அழகானவளாய் அவளைக்
காட்டுவதற்காய் இருந்திருக்கலாம்...
 
இவைகூட எனக்குச் சொந்தமில்லை
என்பதாய்த்தானோ அவள்
தலைகவிழ்ந்து கிடந்திருந்தாள்?...
 
விசும்பல்கள் விட்டுச்சென்ற
அவளின் உப்பு நீர்த்துளிகள்
அவளுக்கு இரண்டு பிரம்படிகளைப்
பெற்றுத்தரலாம்...
 
 - ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It