burning cab"பாய் என்ன பாய் நடக்குது ? CAB - NRC அப்படின்னா என்ன? நாம இந்தியாவுல இருக்க முடியுமா?"

"பாய் எங்க அம்மாவுக்கு பிறந்த நாள் சான்றிதழ் கிடையாது. சின்ன வயசுலேயே அவங்க பெற்றோர் இறந்துட்டாங்க. பள்ளிக்குப் போகல. கவர்மெண்ட்டுல பதிவு பண்ணல. அவங்க இந்தியாவுல இருக்க முடியாதா பாய்?"

"பாய்... எங்க அப்பாவோட சான்றிதழ் எல்லாம் தொலைஞ்சு போச்சு. பின்ன எப்படி கொடுக்கிறதாம்?"

இப்படி நிறைய நிறை கேள்விகள் பயத்தில் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இத்தனை வருடங்கள் இந்தியாவிலேயே வாழ்ந்து வருகிறோம். திடீரென்று நீங்கள் இந்தியர்தானா என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் என்ன ?

சட்டென்று இந்தியா அந்நிய தேசம் போல இருக்கிறது என்று மக்களை புலம்ப வைத்துவிட்டு வெகு சாதாரணமாக இருக்கிறார்கள் இந்தப் பாசிச பயங்கரவாதிகள்.

நடப்பது நடக்கட்டும், தாம் சாவதற்குள் இந்தியாவை சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டு, இந்துத்துவ நாடாக்கி விட்டு செல்வதே இவர்களின் நோக்கம்.

சிறுபான்மையினர்களை, இஸ்ரேலின் வழிகாட்டுதல் படி அகதிகளாக்கி, இரண்டாம் தர குடிமக்களாக்கி சிறையில் அடைத்து, சித்தரவதைப் படுத்தி ஹிட்லர் யூதர்களுக்கு செய்த அந்தக் கொடுமையை, ஹிட்லரால் கொடுமைப்படுத்தப்பட்ட யூதர்களால், இஸ்லாமியர்களுக்குத் தர வேண்டுமென நினைக்கிறார்கள்.

மதம் பார்க்காமால் இணைந்து இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்தவன் எல்லாம், போராடியவர்களை தரம் பிரித்து நாட்டில் அகதிகளாக்கத் துணிகிறார்கள்.

'இஸ்லாமியர்கள் எல்லாம் சான்றிதழை ஒழுங்காக வைத்துக் கொள்ளுங்கள். இந்த ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள், அந்த ஆதாரம் வைத்துக் கொள்ளுங்கள் 'என்றெல்லாம் தகவல்கள்.

தயவு செய்து அப்படிப்பட்ட முட்டாள்தனத்தை மட்டும் செய்யாதீர்கள். அது உங்களின் போராட்டக் குணத்தையே சிதைத்து விடும்.

எந்த சான்றிதழையும் நிரூபிக்க முடியாது. வேட்டியை அவிழ்த்துப் பார்த்துதான் குடிமக்களா இல்லையா என முடிவு செய்வது என்று இவர்கள் தீர்மானித்த பிறகு, இவர்களை நாம் அலட்சியப்படுத்த வேண்டும்.

எதுவுமே இல்லாம வர்றவனுக்கு இந்தியக் குடியுரிமை. தலைமுறை தலைமுறையாய் இங்கு வாழ்ந்தவனுக்கோ இந்தியன் என்பதை நிருபிக்கும் கட்டாயம். இதிலிருந்தே தெரிகிறது, இவர்களின் இஸ்லாமிய வெறுப்புணர்வு.

இந்தியனிடம் 'நீ இந்தியன் என்பதை நிரூபி' என்று கேட்கும் மாட்டு மந்தைக் கூட்டங்களை ஆட்சியில் அமர்த்தி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

பாபர் மசூதியை இடித்து கூட்டு மனசாட்சியின் படி தீர்ப்பு என்று இஸ்லாமியர்களை ஏமாற்றி விட்டோம். அதுபோல இந்த சட்டங்களையும் எளிதாக இயற்றி விடலாம் என்று தவறாக நினைத்து விட்டார்கள்.

தொழுவதற்கு அத்தனை மசூதிகள் இருக்கும்போது அந்த மசூதியை இந்திய ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து விடலாம் என்கிற இஸ்லாமியர்களின் பொறுமையை அவர்கள் கோழைத்தனமாக நினைத்து விட்டார்களோ என்னவோ?

இஸ்லாமியர்கள் இந்த மண்ணில்தான் பிறந்தான்கள் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று சட்டமியற்றி, அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கி, அவர்களுக்குண்டான உரிமையைப் பறித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவனுடைய வாழ்வாதாரத்திற்கே பிரச்சனை என்கிறபொழுது, அவனுக்கு எதைப் பற்றியும் கவலையிருக்காது.

'இந்தியாவுக்காகப் போராடியவர்கள் எல்லாம் இந்தியர்கள். ஆங்கிலேயர்களின் பூட்ஸை நக்கியவர்கள், மன்னிப்பு கேட்டவர்கள், ஆங்கிலேயனுக்கு சாமரம் வீசியவர்கள் எல்லாம் அகதிகள்' என்று புதிய சட்டத்தை இயற்றினால் ஒட்டுமொத்த பாஜக, ஆர்எஸ்எஸ் கோஷ்டிகள் எல்லாம் அகதிகள்தான். அந்த முழக்கத்தைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும்.

தகப்பன் பெயரைச் சொல்லத் தடுமாறுகிறவன் எல்லாம் நம் வீட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி கேட்கிறார்கள். எவன் அப்பன் வீட்டுக்கு எவன் வந்து வழி மறிப்பது? சான்றிதழ்கள் தர முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும் என்று எல்லாருமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய நேரமிது.

அத்தனை கோடி மக்களையும் அகதி முகாமில் அடைத்துவிட்டு, முகாமிற்கு வெளியே இருப்பவர்கள் மட்டும் நிம்மதியாய் வாழ்ந்துவிட முடியுமா என்ன?

கடைசி மூச்சு இருக்கும் வரையிலும் ஒவ்வொருவனும் போராடுவான். கள்ள மௌனிகளாக இருக்கும் எல்லாருமே வெளியே வாருங்கள்.

CWGC (Commonwealth War Graves Commission) இணையதளத்தில் சென்று டெல்லியில் உள்ள இந்தியா கேட் நினைவகத்தில் பொறிக்கப்பட்டிருக்கும், விடுதலைப் போரில் இறந்து போனவர்களின் பட்டியலைச் சென்று பாருங்கள், எத்தனை இஸ்லாமியப் பெயர்கள் இருக்கிறதென்று. 

அங்கிருந்து நாடாளுமன்றத்திற்கான நில வழித் தொலைவு 4 கிமீ தான், ஆனால் நிலத்திற்கான போராட்டத் தொலைவு 100 வருடங்கள்.

அந்த 4 கிமீ தொலைவில் இருந்து கொண்டு சுதந்திரமென்றால் என்னவென்று தெரியாதவர்கள்தான் மசோதாக்களை இயற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இஸ்லாமியர்கள் இந்தியர்கள்தான் என்று எவரிடமும் நிரூபிக்கத் தேவையில்லை. அது மட்டுமல்ல நமக்கான இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க சான்றிதழ் தேவையில்லை, விடுதலைப் போராட்டமே நமது சான்றிதழ். அதனை அவர்கள் மறந்திருந்தால் மறுபடியும் ஞாபகப்படுத்த வேண்டும்.

நசுங்கிச் செத்து விடுவோம் எனத் தெரிந்தும், தைரியமாய் தோல் மீதேறி இரத்தம் குடிக்கும் ஈக்களை விடவுமா கேவலமாகப் போய்விட்டது உங்கள் வாழ்க்கை?

"Disobedience is the true foundation of liberty. The obedient must be slaves. - Henry"

- ரசிகவ் ஞானியார்

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.