கன்னட எழுத்தாளர் கல்புர்கி அவர்கள் தார்வாட்டில் உள்ள தனது வீட்டில் நேற்று முன் தினம் (30/08/2015) காலை இந்துமத வெறியர்களால் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். தான் வாழ்நாளில் மிகச் சிறந்த பகுத்தறிவாதியாகவும் இடதுசாரி சிந்தனையாளராகவும் வாழ்ந்தவர். தன்னுடைய பேச்சுகளுக்காக இந்துமத வெறியர்களால் பல முறை மிரட்டப்பட்டவர்.

kalburgi கன்னட சாகித்திய அகாடமி ஆலோசனை குழு உறுப்பினராக இருந்தவர். தன்னுடைய ஆராய்ச்சி நூலான மார்கா 4 என்ற நூலுக்காக சாகித்திய அகாடமி விருதை வாங்கியவர். கடந்த ஆண்டு ஜீன் மாதம் நடந்த ஒரு மூடநம்பிக்கை எதிர்ப்புக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய கல்புர்கி அவர்கள் சாமி சிலைகளின் மீது சிறுநீர் கழிப்பது தவறல்ல என்று மறைந்த எழுத்தாளர் ஆனந்தமூர்த்தியின் கருத்தை ஆதரித்துப் பேசி இருந்தார். இதற்காக பஜ்ரங்தள் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா போன்ற இந்துமதவெறி அமைப்புகள் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தன.

 ஏற்கெனவே தனது முதல் மார்காவில் கர்நாடகத்தில் உள்ள வீரசைவ அமைப்பின் நிறுவனர் பாசவண்ணா, அவரது மனைவி, அவரது சகோதரி போன்றோரை விமர்சித்ததற்காக லிங்காயத் சாதி வெறியர்களால் கடுமையாக மிரட்டுப்பட்டு பின்பு அவர் அந்த குறிப்பிட்ட பகுதியை திரும்பபெறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

 கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்ற பிற்போக்கு கோழைகள், மக்களிடம் தாங்கள் அம்பலப்படுவதைத் தடுக்க இது போன்ற கொலை செயல்களில் ஈடுபடுகின்றனர். 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கோவிந்த் பன்சாரே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழ்நாட்டில் ‘மாதொருபாகன்’ என்ற நூலை எழுதியதற்காக பெருமாள் முருகனும், ‘எனக்கு பால குமாரன் என்றொரு பெயரும் உண்டு’ என்ற நூலை எழுதியதற்காக புலியூர் முருகேசனும் கடுமையாக மிரட்டப்பட்டனர். இதில் புலியூர் முருகேசன் சாதி வெறியர்களால் தாக்கவும் பட்டார்.

 நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே போன்றவர்களை சுட்டுக் கொன்ற கொலையாளிகள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதில் இருந்தே அரசு எவ்வாறு இந்து பாசிசமயமாகி உள்ளது என்பதை அறியலாம். அதேபோல கல்புர்கி அவர்களைக் கொலை செய்தவர்களையும் போலீஸ் கண்டுபிடிக்காது என்று நாம் உறுதியாக நம்பலாம்!.

 வரலாறு முழுவதுமே மத வெறியர்கள் தங்களையும், தங்களுடைய கருத்துக்களையும் ஏற்றுக் கொள்ளாதவர்களை அழித்தொழிப்பதையே தங்கள் குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றார்கள். பார்ப்பனியத்தின் குரல்வளையை சமணம் நெறித்ததற்காக அன்று சமணர்களைக் கழுவேற்ற ஒரு கூன்பாண்டியன் தேவைப்பட்டான். இன்று முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக மோடி தேவைப்பட்டார்.

 இந்துமதத்தைக் காப்பாற்ற வந்த புனிதர்களாக தங்களைத் தாங்களே அறிவித்துக்கொள்ளும் இந்த அயோக்கியர்கள் அதற்கான அதிகாரத்தை கடவுள் தமக்கு வழங்கி உள்ளதாக நினைத்துக் கொள்கின்றார்கள். மக்களை மூட நம்பிக்கையில் தொடர்ந்து இருத்திவைத்து அவர்களை சிந்திக்கும் திறனற்ற ஆன்மீக அடிமைகளாக மாற்றும் இந்த மதவெறியர்கள் பெரும் தொழில் நிறுவனங்களின் கூலிப்படையாகவும் செயல்படுகின்றனர்.

 இந்தியா என்பது இந்துமத வெறியர்களின் சொல்பேச்சு படி நடப்பவர்களுக்கு மட்டுமே என்ற சூழ்நிலையை ஏற்படுத்தி வருகின்றார்கள். ஆனால் இந்தியா, வரலாற்றில் தன்னை எப்போதும் அப்படி அடையாளப்படுத்திக்கொண்டது கிடையாது. இந்தியாவில் தோன்றிய பார்ப்பன வேதத்தைத் தவிர மற்ற அனைத்து தத்துவங்களும் உருவ வழிபாட்டை கடுமையாக விமர்சனம் செய்துள்ளன. அவை கடவுளை ஏற்றுக்கொள்வது கிடையாது. கல்புர்கியின் மூட நம்பிக்கை எதிர்ப்பு என்பதும் உருவ வழிபாட்டு எதிர்ப்பு என்பதும் வரலாற்றுத் தொடர்ச்சியே ஒழிய புதிய கண்டுபிடிப்பு அல்ல. ஆனால் சகிப்புத்தன்மையற்ற பார்ப்பனியம், அனைத்து ஆபாசங்களையும், வக்கிரங்களையும் தன்னுள்ளே முழுமையாக வைத்துள்ள பார்ப்பனியம், தனக்கு எதிரான கருத்துக்களை அன்றில் இருந்து இன்றுவரை வன்முறை மூலமே ஒழித்துக்கட்டி வருகின்றது.

 குஜராத்தில் முஸ்லிம்களை சகவாசமாக கொல்வதற்கு நாள் ஒதுக்கிக் கொடுத்து அதற்குப் பாதுகாப்பும் கொடுத்த மோடி பகுத்தறிவாதிகளையும், முற்போக்குவாதிகளையும் முழுவதுமாக கொன்றொழிப்பதற்கு தன்னுடைய ஐந்தாண்டு பதவிக்காலம் முழுவதையும் கொடுத்திருக்கின்றார்.

 மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பரப்புரை என்பது எந்தக் காலத்தையும் விட இந்தக் காலத்தில்தான் மிக அதிகமாக தேவைப்படுகின்றது. சாமானிய மக்களை இந்து பாசிஸ்ட்டுகள் எளிதில் வீழ்த்தும் களமாக மூட நம்பிக்கையே இருக்கின்றது. அதன்வழியாகவே பார்ப்பனியம் தன்னுடைய ஆன்மாவான சாதியையும் கட்டமைத்து வைத்திருக்கின்றது. சொர்கம், நரகம், கர்மவினை, மறுபிறப்பு, ஆன்மா, பிரம்மம், சோதிடம், சடங்குகள், பரிகாரம் இப்படி பார்ப்பனியம் பல வழிகளிலும் மக்களை ஏமாற்றி சாதிய ரீதியில் மேலாதிக்கம் செய்துகொண்டுள்ளது. மூட நம்பிக்கைகளை ஒழித்தல் என்பது பார்ப்பனியத்தை ஒழிப்பதாகும். பார்ப்பனியத்தை ஒழித்தல் என்பது இந்தியாவில் சாதிகளை ஒழிப்பதற்கான முன்நிபந்தனையாகும்.

 முற்போக்குவாதிகள் சாதி ஒழிப்பு பரப்புரை செய்யும் போது மூட நம்பிக்கை ஒழிப்பு பரப்புரையும் சேர்த்தே செய்ய வேண்டும். பார்ப்பனியத்தின் மாய்மலங்களை அம்பலப்படுத்த வேண்டும். பிற்போக்குவாதிகளால் எதிர்ப்புகள் வரும்போது அதை எதிர்கொள்ள வேண்டும். கருத்தாக வந்தால் கருத்தால் எதிர்கொள்ள வேண்டும்; வன்முறையாக வந்தால் வன்முறையாக எதிர்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நாம் அழித்தொழிக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

- செ.கார்கி

Pin It