இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அக்கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை வளர்ச்சியிலிருந்தாலும், வளரும் வீதம் கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது என்ற விவரம் கிடைத்துள்ளது.

      hindutvaஆனால், இந்துத்வா வாதிகள் உண்மைக்கு மாறாக, மதவெறி உந்துதலில் தவறான செய்தியைப் பரப்புகின்றனர். தினமணி போன்ற சில பத்திரிக்கைகளும் இதைச் செய்கின்றன.

      இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் என்று எல்லா மக்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. எந்தவொரு மதத்தின் மக்கள் தொகையும் அதிகமாக உயரவில்லை. குறிப்பாக இஸ்லாம் மக்களின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.

      உண்மை இப்படியிருக்க, இஸ்லாமியர் அதிகம் பெருகுவதாயும், இந்துக்களும் போட்டியிட்டுப் பெருக வேண்டும் என்றும் இந்துத்வா பேர்வழிகளும், பத்திரிகைகளும் உசுப்புவது சமுதாய எதிர்ச் செயல் ஆகும். இவர்களை இந்த நாட்டின் எதிரிகளாகவே எண்ண வேண்டும்.

      ஆக்ரா மாவட்ட சிவசேனா கட்சித் தலைவர் வீனுலவானியா என்பவர் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை எந்த இந்துக் குடும்பத்தில் 5 பிள்ளைகள் உள்ளனவோ, அக்குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் பரிசு தருவதாக கூறியுள்ளார்.

      மதவெறியர்களுக்கு மற்ற எந்தச் சிந்தனையும் வராது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

      பிள்ளை பெறுவது என்பது பெற்றோரின் விருப்பம்.

      பிள்ளை அதிகம் பெறுவது வீட்டிற்கும், நாட்டிற்கும், பொருளாதாரத்திற்கும் சுமை. பிள்ளை பெறுவது பெண்ணின் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்கக் கூடியது.

      இப்படியிருக்க 5 பெறுங்கள், 10 பெறுங்கள் என்று வெறிகொண்டு தூண்டுவது நாட்டுநலனுக்கு, பெண்களின் நலனுக்கு எதிரான செயல் ஆகும்.

      இன்றைக்கு படித்தவர் முதல் பாமரர் வரை எல்லோருமே, ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்று திட்டமிட்டு கட்டுப் படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில் இவர்களின் மதவெறிக்கு மக்களை குறிப்பாகப் பெண்களை இரையாக்க முயல்வது கொடுமையாகும்!

      இந்துமதம் என்பதே ஒரு ஏமாற்று. இந்துக்கள் என்பதே ஒரு திணிப்பு. இங்கு சைவர் உண்டு, வைணவர் உண்டு, பவுத்தர் உண்டு, சமணர் உண்டு. இந்து என்பது எப்படி வந்தது? எப்போது வந்தது? உண்மை இப்படியிருக்க பலபிரிவு மக்களை ‘பார்சல்’ பண்ணி இந்து என்று முத்திரைக் குத்தி மோசடி செய்தது மட்டுமல்லாமல் அதை வைத்து ஆதிக்கம் செலுத்த அப்பாவி மக்களுக்கு வெறியேற்றி மோதச் செய்வது தேசத்துரோகம் அல்லவா?

      மத எண்ணிக்கைக்கு மக்கள் தொகையைப் பெருக்கு என்கிற இந்த மனித விரோதிகளைப் புறந்தள்ளி, பிள்ளை பெறுதல் அளவுடையது, அறிவுசார்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மதவெறிக் கூட்டத்தின் மனித எதிர் முழக்கங்களை அனைவரும் எதிர்க்க வேண்டும்

- மஞ்சை வசந்தன்

Pin It