muslim rashtriya manch

இராஜஸ்தானில் முசுலீம் ராஷ்ட்ரிய மஞ்ச் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் இந்தரேஸ் குமார்

ஆரியர்கள் இந்தியாவுக்குள் படையெடுத்து வந்த பிறகு திராவிட கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் ஆரிய மயமாக்கி தனது கட்டமைப்புக்குள் மிகவும் கீழ் படிநிலையில் இணைத்துக் கொண்டனர். அதற்காக பல்வேறு ஆன்மீகக் கதைகள் உருவாக்கப்பட்டன. இன்று வரை இந்தியாவை ஆரியம் தனதாக்கிக் கொள்வதற்கு இந்தக் கதைகள் தான் பயன்பட்டு வருகின்றன. ஆரியர்களின் கட்டமைப்பை உடைக்கும் கொள்கையாக அல்லது எதிர்மறைக் கொள்கையாகவே இசுலாம் இந்தியாவில் வேரூன்றியது. இசுலாமிய மன்னர்களின் ஆட்சியமைப்பு இந்தியாவை அதிகாரப்படுத்திக் கொண்டிருந்தபோது மன்னர்களின் ஆலோசகர்களாக அரண்மனைக்குள் புகுந்த ஆரியர்கள் இசுலாமிய மன்னர்களின் ஆட்சியை ஆரியமயப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து சிற்சில வெற்றிகளும் பெற்றனர். அவர்கள் தற்போது வீர புருஷராக பாவிக்கும் மாமன்னர் சிவாஜி தாழ்த்தப்பட்டவர் என்பதால் முசுலீம் மன்னர்களுடன் சேர்ந்து சிவாஜியின் ஆட்சியை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுத்தனர் என்பதை நிச்சயமாக வரலாற்றில் இருந்து திருத்தி விட முடியாது.

சுதந்திர இந்தியாவில் அதிகாரம் அனைத்தும் ஆரியர்களின் கைவசம் சென்ற பிறகு முசுலீம்களை இந்தியாவின் எதிரிகளாக கட்டமைப்பதில் பல்வேறு முயற்சிகளை அவர்களால் உருவாக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் மூலமாக செய்தனர். அதில் முழுமையாக அவர்கள் வெற்றியடைய முடியவில்லை. அதற்கு முக்கிய காரணம் பெரும்பான்மையான இந்து மக்களின் முசுலீம்களுடனான உறவாடல்கள்தான். இந்த உறவாடல்களை உடைக்க ஆர்.எஸ்.எஸ் பல்வேறு முயற்சிகள் எடுத்த பின்பும் அவர்களால் வெற்றியடைய முடியவில்லை.

இந்நிலையில் குஜராத் கலவரத்திற்குப் பின்பு ஆர்.எஸ்.எஸ் ஒரு முக்கிய கருத்தியலை தனது கொள்கையில் இணைத்துக் கொண்டது. அது என்னவென்றால் இன சுத்திகரிப்பின் மூலமாக முசுலீம்களை முற்றிலுமாக வேரறுக்க முடியாது... ஆகையால் முசுலீம்களை இந்துத்துவ மயமாக்கி நமது ஆதரவாளர்களாக மாற்றி தம்மை எதிர்க்கும் முசுலீம்களை வேரறுக்க வேண்டும் என்பதே.

ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த கருத்தியலை அல்லது உத்தியை நடைமுறைப்படுத்த முசுலீம்களில் அறிவு ஜீவிகள் எனப்படும் சில கோமாளிகள் அவர்களுக்குக் கிடைத்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். டிசம்பர் 24, 2002-ல் பிரபல பத்திரிக்கையாளரான முசாபர் ஹுசைன், அவரது மனைவி நபீஸா தலைமையில் ஈத் மிலன் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தனர். இந்த ஈத்மிலன் நிகழ்ச்சிக்கு இசுலாமிய மதத்தைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், வழக்கறிஞர்கள், மார்க்க அறிஞர்கள், தொழிலதிபர்கள் உட்பட முக்கியமான அறிவுஜீவிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தனர். பல்வேறு இசுலாமிய தலைவர்கள் இவர்கள் கொடுத்த அழைப்பை தனது வீட்டு குப்பைத் தொட்டியில் போட்டனர். சில கோமாளிகள் மட்டும் இவர்கள் கையில் சிக்கினர்.

muslim rashtriya manch 500

சட்டீஸ்கரில் ஊர்வலம் செல்லும் முசுலீம் ராஷ்ட்ரிய மஞ்ச் அமைப்பினர்

அந்தக் கோமாளிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட அப்போதைய ஆர்.எஸ்.எஸ். சர் சங் சலாக் கே.எஸ்.சுதர்சன், முக்கிய தலைவர்களான எம்.ஜி.வைத்யா, இந்திரேஷ் குமார், மதன் தாஸ் ஆகியோர் தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் ஆர்.எஸ்.எஸ்-ன் முசுலீம் பிரிவாக ராஷ்ட்ர முசுலீம் அந்தோலன் என்ற இயக்கத்தை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் பெயர் 2005ல் முசுலீம் ராஷ்ட்ரிய மஞ்ச் (http://www.muslimrashtriyamanch.org/என மாற்றப்பட்டது.

இந்த இயக்கம்தான் தற்போது முசுலீம்களை இந்துத்துவ மயமாக்க முசுலீம்களிடையே செயல்பட்டு வருகிறது. மிகவும் ஆபத்தான இந்த நச்சுப் பாம்பிடம் முசுலீம்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். முசுலீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் மாநிலங்களில் இந்த இயக்கம் வேகமாகப் பரவி வருவது மிகப்பெரிய ஆபத்தின் அறிகுறியாகவே தென்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்த இயக்கம் வேகமாக வளர்ந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரின் தலைநகரமாக நாக்பூர் மாறிக் கொண்டிருப்பதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கவலை தெரிவித்துள்ளார். அங்கு இருக்கின்ற போராளி இயக்கங்களுக்கு எதிரான மன நிலையை முசுலீம்களிடையே உருவாக்கவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370வது பிரிவை அகற்ற வேண்டும் என்ற மன நிலையை முசுலீம்களிடேயே பரவலாக்கவும், முசுலீம் ராஷ்ட்ர மஞ்ச் எடுத்த முயற்சிகள் வெற்றிபெற்றுத்தான் வருகிறது. மேலும் சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெறுவதற்கும் இந்த இயக்கம் பெரும் உள்ளடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறது.

இதே போன்று உத்திரப்பிரதேச மாநிலத்தில் ரம்ஜானின்போது லக்னோ உட்பட முசுலீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் துளசி செடி சுவர்க்கத்தின் செடி என குர் ஆனில் கூறப்பட்டிருப்பதாக கூறி, வீடுகள் தோறும் துளசி செடியை விநியோகம் செய்துள்ளனர். மேலும், ரம்ஜான் பண்டிகையின் போது மாடுகளை அறுக்கக் கூடாது எனவும் முசுலீம்களிடையே பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்த இயக்கத்தில் பல்வேறு இசுலாமிய மார்க்க அறிஞர்கள் இருப்பதால் பாமர முசுலீம் மக்கள் எளிதாக ஏமாந்து ஆர்.எஸ்.எஸின் இந்த மாய வலையில் சிக்கி வருகின்றனர். யாக்கூப் மேமனை தூக்கிலிடுவதற்கு ஆதரவான மனநிலையை முசுலீம்களிடையே இணைய தளங்கள் மூலமாக உருவாக்கினர். இந்த ஆபத்தான இயக்கம் இன்று முசுலீம் குடியிருப்புகளில் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்துள்ளது. இது குறித்த அதீத விழிப்புணர்வு முசுலீம்களுக்குத் தேவை.

- ஷாகுல் ஹமீது

Pin It