pottipuram

- யுனெஸ்கோவால் உயிர்மைப் பன்மயச் சூழல் மிகுந்த உயிர்கோளப் பகுதியாகவும், அகில உலக பாரம்பரியச் சின்னமாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் மிக கடுமையாகப் பாதிக்கப்படும்

- மேற்குத் தொடர்ச்சி மலையின் உயிர்மைப் பன்மயச் சூழல் அழியும்

- மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் அழிக்கப்படும்

- மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள கேரளத்தின் மதிகெட்டான் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்படும்

- அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து (சுமார் 6500-11,500 கி.மீ தூரம்) அனுப்பப்படும் செயற்கையான நியூட்ரினோ கற்றை மூலம் கதிர்வீச்சு ஏற்படும்.

- 50 ஆயிரம் டன் காந்தக் கருவியை குளிரூட்டும் அறைக்கு தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை. இதற்காக சுருளி ஆற்றில் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் எடுப்பதால், அப்பகுதி விவசாயம் கடுமையாக பாதிக்கப்படும்.

- நியூட்ரினோ திட்டத்திற்காக சுரங்கம் தோண்ட ஒரு லட்சம் டெட்டனேட்டர் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி வெடிவைத்து மலையை உடைக்கும்போது, சுற்றுப்பகுதியில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டு வீடுகள் பாதிக்கப்படும். தொடர்சியாக ஏற்படும் தூசிகளால் மக்களுக்கு எண்ணற்ற புதிய புதிய நோய்கள் ஏற்பட்டு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

- இடுக்கி, முல்லைப் பெரியாறு உட்பட சுற்றியுள்ள அனைத்து அணைகளிலும் விரிசல், பிளவு, உடைப்பு போன்ற சேதாரமும் ஏற்படும். இதனால் முல்லைஒ பெரியாறு அணை பாதிக்கப்பட்டு ஐந்து மாவட்ட விவசாயம் கட்டாயம் அழியும்.

- இடுக்கி அணை உட்பட சுற்றியுள்ள இப்பகுதி ஏற்கனவே பல்வேறு நில அதிர்வுகள் நடந்த லெவல் 3 பகுதிக்குள் (பூகம்பம் ஏற்படலாம் எனும்) வருகிறது. நியூட்ரினோ திட்டத்திற்காக பல்லாயிரம் டன் வெடிமருந்து வெடிப்பதன் மூலம் இப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு இடுக்கி அணை சேதமுறும். தமிழர்-கேரளா ஒற்றுமை அழிந்து இனக் கலவரம் ஏற்படும்.

- சுற்றியுள்ள அனைத்து நீர் நிலைகளுக்கும், நீரியல் அடுக்குகளுக்கும் பிரச்சனை ஏற்படும்,

- இந்தியாவில் அணுக்கழிவை எங்கு வைப்பது பற்றி அரசு இதுவரை எங்கும் கூறவில்லை. எனவே அணுக்கழிவை வருங்காலத்திலும் நியூட்ரினோ திட்டம் அமைக்கும் இடத்தில் கொண்டுவந்து வைக்கும் ரகசிய திட்டம் அரசுக்கு உள்ளது. (வேறு பகுதிகளில் எங்கும் இதை வைக்க விடமாட்டார்கள்)

- 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்த உணர்கருவிக்குள் பிரியான் வாயு (பிரியான்-இது மூச்சை இழுத்து திரும்ப விடுவதற்குள் இறக்கும் அபாயம் உள்ள வாயு), சல்பர் ஹெக்சா புளூரைட் (புவி வெப்பமயமாதலுக்கும், ஓசோன் மண்டலம் ஓட்டை ஆவதற்க்கும் காரணமான வாயு), சமபூத்தேன் ஆகிய வாயு அனுப்பப்படும். பின்பு இதை காற்றோட்ட கருவிகள் மூலம் வெளியேற்றும் போது அது உடனடியாக நரம்பு மண்டலத்தை பாதித்து கோமாவுக்கு இட்டு செல்லக் கூடிய வாயுவாக இருக்கும். இந்த வாயுவை காற்றில் கலந்தால் தேவாரப் பகுதி மக்களின் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த வாயுவைப் நீர்த்து போகச் செய்து காற்றுடன் கலப்போம் என சொன்னாலும் அது காற்றுடன் கலந்தாலும் அந்தப் பகுதி மக்களுக்கு மனநல பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது என அறிவியல் சொல்கிறது.

- நியுட்ரினோ ஆய்வுக்காக செயல்படும் அறிவியலாளர்கள் உண்மையில் நேர்மையற்ற கொடூரர்கள். இவர்கள் முன்பு அனுமதி கேட்ட இடத்தில் நியுட்ரினோ திட்டம் செயல்பட அரசு அனுமதியளித்து இருந்தால், இந்த ஆய்வு இப்போது உதகை-சிங்காரா பகுதியிலோ அல்லது தேனி-சுருளி மலைப்பகுதியிலோ நடந்து கொண்டு இருந்திருக்கும். இரண்டுமே மிக முக்கியமான வனவிலங்கு சரணாலயப் (முதுமலை, மேகமலை) பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கை வளங்கள் குவிந்துள்ள பகுதி இது. இந்த பகுதி அழிவது பற்றி எவ்வித அக்கறையும் இன்றியே, இவர்கள் இப்பகுதியை நியுட்ரினோ திட்ட ஆய்வுக்கு தேர்ந்தெடுத்தது என்பது, எப்படிப்பட்ட கொடூர மனநிலை உள்ளவர்கள் இவர்கள் என்பதை நமக்கு உணர்த்தும்.

- மேற்குத் தொடர்ச்சி மலையைப் பாதுகாப்பது பற்றி ஆய்வு செய்த கஸ்தூரி ரங்கன் கமிட்டியின் அறிக்கையை குப்பையில் வீசி விட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் பாறைகளைக் குடைவதும், உடைப்பதும், சிதைப்பதும், வெடிவைத்துத் தகர்ப்பதும் நடக்கும்.

- மேற்கு தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டப்படி, 2000 சதுர மீட்டருக்கு (பள்ளி, மருத்துவமனை கட்டட அளவிற்கு) மேல் எவ்விதமான கட்டுமானங்களும் இங்கு கட்டப்படக் கூடாது என இவர்களே(அரசு) இயற்றிய சட்டத்தை எல்லாம் இவர்களே காலில் போட்டு மிதித்துவிட்டு, இனி அறிவியலின் பெயரில் செயல்படப் போகிறார்கள்.

- அம்பரப்பர் மலையில் உள்ள சார்க்கோனைட் பாறைகள் போன்றவை உள்ள பகுதிகளாக கேரளாவில் பொன்முடியும், கர்நாடகத்தில் பில்லிகிரி ரங்காவும் அமைந்துள்ளது. 1400 கிலோ மீட்டர் நீளமுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை தமிழகம் தொடங்கி குஜராத் வரை 7 மாநிலங்களில் உள்ளது. இம்மலை முழுமையாக கடினப் பாறைகள் கொண்டது. இங்கு எங்குமே நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்க முடியாது என்பதற்கான அறிவியல்பூர்வ ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லாத நிலையில் தமிழகத்தின் மீது ஏன் இத்திட்டம் திணிக்கப்பட்டு உள்ளது?

- ஏற்கனவே 1965 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடகத்திலுள்ள கோலார் தங்கவயல் சுரங்கங்களில் 2000 மீட்டர் ஆழத்தில் (2 கி.மீ) நியுட்ரினோ ஆய்வகம் அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப் பட்டது. 1980களில் தங்க வயல்களை அரசு மூடிவிட்ட பிறகு அந்த நியூட்ரினோ ஆய்வகமும் மூடப்பட்டது என ஐ.என்.ஓ தனது திட்ட அறிக்கையில் கூறியுள்ளது. தங்கவயல் மூடப்பட்ட பிறகு அப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் இயங்க எந்தத் தடையும் இல்லாத நிலையில் ஆய்வகம் ஏன் மூடப்பட்டது? இப்போது கோலார் தங்கவயல் சுரங்கத்தில் நியூட்ரினோ ஆய்வு நடத்த என்ன தடை உள்ளது என்பதை எங்குமே கூறவில்லை. இதுபோன்ற எவ்விதப் பயன்பாடுமற்ற எண்ணற்ற சுரங்கங்கள் நாடு முழுக்க இருந்தும் அங்கு ஏன் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கப் படவில்லை என்ற கேள்வி மக்கள் மன்றத்தில் எழவே, எழுப்பப்படவோ இல்லை.

- இந்திய அரசைப் பொருத்தவரை நியூட்ரினோ திட்டத்தில் பல்வேறு அபாயகரமான பின்விளைவுகள் இருக்கும் என்ற அடிப்படையிலேதான் நியூட்ரினோ திட்டம் தமிழகத்தின் மீது கேட்காமலேயே திணிக்கப்பட்டுள்ளது.

- முதலில் நியூட்ரினோ திட்டம், இந்திய அரசின் திட்டம், மக்களின் வரிப்பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டம். இந்தத் திட்டத்தின் சரி தவறுகள் பற்றி அரசும், அரசில் பணிபுரியும் விஞ்ஞானிகளும் நேரடியாக மக்களிடம் விளக்காமல், பத்திரிகைகளில் கட்டுரைகள் இதுபற்றி ஏன் எழுதாமல் உள்ளார்கள் என தெரிவிக்க வேண்டும்.

- அரசுக்குப் பதிலாக நியூட்ரினோ திட்டத்தை ஆதரிக்கும் ஒரு கட்சியின் துணை அமைப்பை வைத்து, அதாவது இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைமையில் செயல்படும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் என்ற அமைப்பை வைத்து மதுரை, தேவாரம், சென்னை மற்றும் மதுரை தேனியைச் சுற்றியுள்ள கல்லூரிகளில் ஏன் விளக்கக் கூட்டம் நடத்தியது என கூற வேண்டும்.

- நியூட்ரினோ திட்டத்தை ஆதரித்து கூட்டம் நடத்த அனுமதியளித்த அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் நியூட்ரினோ திட்டத்தால் ஏற்படவுள்ள பிரச்சனைகளை நெருக்கடிகளை எடுத்துக் கூறும் அமைப்புகளுக்கும் பேச அனுமதி தர அரசு உத்தரவிட கேட்க வேண்டும்

- அறிவியலை பிரச்சாரம் செய்பவர்களாக உண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இருந்தால், சி.பி.எம் கட்சியாலேயே எதிர்க்கப்படுகின்ற, கூடங்குளம் அணுஉலைப் பூங்கா திட்டத்தையும் (கூடங்குளத்தில் ஒரு அணுஉலை இருக்கலாம், ஆனால் அணுஉலைப் பூங்கா கூடாது), மீத்தேன் திட்டத்தையும், தாதுமணல்-கிரானைட்-ஆற்றுமணல் போன்ற கனிமவள கொள்ளை பற்றி, சி.பி.எம்.மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் இதன் பாதிப்பு பற்றி அறிவியல்பூர்வமாக எங்குமே மக்களுக்கு விளக்கக் கூட்டங்களோ, கருத்தரங்குகளோ, பள்ளிக் கல்லூரிகளில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி கூட நடத்தியதாகவோ அல்லது இதன் பாதிப்பு பற்றி கட்டுரைகள் கூட எழுதியதாகவோ கூட எங்கும் தகவல் இல்லையே ஏன்?

- தனது மக்களின் தேவைக்காக எதிர்க்கட்சித் தலைவரையும் உடன் அழைத்துக் கொண்டு தேடித் தேடிச் சென்று பிரதமரிடம் பல்வேறு திட்டங்களை கேட்கும் கேரளா, கர்நாடக உட்பட பல்வேறு அரசுகள் ஏன் மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலை என பரவி உள்ள தங்கள் பகுதிகளில் நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக இழுபறியில் உள்ள இந்த ‘அதிஅற்புதமான திட்டமும்-அறிவியல் வளர்ச்சியும்’ அவர்களுக்கு மட்டும் ஏன் கசக்கச் செய்தது என நாம் பார்க்க வேண்டிய காலம் இது.

- உலகத்தையே தனது கொள்ளைக்காக சுரண்டி வரும் அரசுகளால் குறிப்பாக அமெரிக்கா போன்ற ஆதிக்க நாடுகளின் நியூட்ரினோ ஆயுதம் போன்ற பல்வேறு கனவுகளோடு தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம்தான் செயற்கையாக தயாரிக்கப்பட்ட நியுட்ரினோ ஆய்வு திட்டம். இத்திட்டத்தை அந்த நாடுகளின் அடிவருடியாக இருந்து இந்திய அரசு தற்போது செயல்படுத்தி வருகிறது.

- 'அறிவியலின் பெயரில், அறிவியலாளர்கள் எனும் பெயரில் எந்தப் பொய்யை உரக்கச் சொன்னாலும் நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். சாதாரண மக்கள் அறிவியலாளர்கள் சொல்லும் எதையும் மறுக்கக் கூடாது, எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது
எனும் பொதுப் புத்தி நம் தலையில் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளதை அகற்றி செயல்படவேண்டிய தருணம் இது..

- அறிவியல் என்பது எந்த வர்க்கத்தின் கையில் உள்ளதோ அதன் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இன்று அறிவியல் என்பது உலகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஒட்ட சுரண்ட வேண்டும் என்ற அமெரிக்கா போன்ற மிகப்பெரிய கொள்ளைக் கூட்ட நாடுகளின் கையில் உள்ளது. இந்த அறிவியலை உண்மையில் மக்களுக்காக பயன்படுத்த வேண்டும் என யாரும் விரும்பினால் கூட உண்மையில் அவர்கள் அதை பயன்படுத்த விட மாட்டார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.

- பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சிக்காக நடத்தப்படும் எல்லவிதமான அறிவியல் ஆய்வுகளுக்கு நாம் முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தை சோதனைச் சாலை எலிகளாக பயன்படுத்தப்படுவதை இனியும் நாம் அனுமதிக்க முடியாது; அனுமதிக்க கூடாது.

Pin It