தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து உள்ளதா எனும் தந்தி டிவி விவாதத்தில் அர்ஜுன் சம்பத் தமிழகத்தில் ஜிஹாதிகள் அதிகரித்து விட்டார்கள்! 117 இந்துத் தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று எரிச்சலூட்டும் விதத்தில் திரும்பத் திரும்ப கத்திக் கொண்டிருக்க மனுஷ்யபுத்திரன் டென்ஷன் ஆனதில் வலுவான வாதங்கள் வைக்கப்பட்டு விவாதிக்கப்பட வில்லை!

இதில் பார்க்கப்பட வேண்டிய விஷயம் தமிழகத்தில் இந்து அமைப்பினர் மட்டும் கொல்லப்பட வில்லை! திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, விசிக என பலரும் கொல்லப்பட்டு உள்ளனர்! முஸ்லிம் இயக்கத்தில் உள்ள தமுமுக, மமமுக, மதுரையில் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர் உள்ளிட்ட பலரும் கொல்லப்பட்டனர்!

திருச்சியைக் கட்டியாண்ட நேருவின் தம்பி ராமஜெயம் கொலையிலும், வழக்கறிஞர் சங்கரசுப்பு மகன் கொலை வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை!

தமிழகத்தில் அரசியல் கொலைகள் பதவி சண்டை, தேர்தல் விரோதம், கொடுக்கல் வாங்கல், நில விவகாரங்கள், வியாபாரப் போட்டி, பெண் விவகாரம் எனப் பல்வேறு காரணங்களுக்காக நடைபெறுகிறது. ஆனால் யாரும் குறிப்பிட்ட சாரார் தான் கொன்றார்கள் என இவர்களைப் போல் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தவில்லை. அப்படி குறிப்பிட்ட சாரார் தான் என்பதற்கு ஆதாரம் இருக்குமானால் அதை அரசிடம் தந்து காவல் துறைக்கு உதவ வேண்டும்.

ஆனால் அதைவிடுத்து ஒரு கொலை நடந்ததும் அதில் அரசியல் ஆதாயம் தேட வன்முறைகளை கட்டவிழ்த்து, சிறுபான்மை மக்களை, வழிபாட்டுத் தளங்களை தாக்குவது என்ன நியாயம்?

வன்முறையைக் கண்டிக்க வக்கற்ற உங்களுக்கு ‘மற்ற அமைப்புகள் கொலையை கண்டிக்கவில்லை’ எனக் குற்றம் சுமத்த என்ன உரிமை இருக்கிறது?

இப்படி குறிப்பிட்ட தரப்பினரை குற்றம் சுமத்துவதால் தான் காவல் துறை வழக்கு விசாரணை திசைமாறி யாரையாவது கைது செய்து திருப்தி படுத்தும் சூழல் உருவாகிறது.

பன்னா இஸ்மாயில், பக்ருதீன் பிலால் மாலிக் தான் முந்தைய கொலைகளுக்கு காரணம் எனில் இந்தக் கொலை எப்படி நடந்தது?

ஆனால் என்ன காரணம் என்று காவல் துறை கண்டுபிடிப்பதற்குள் இவர்களாகவே ஒரு குறிப்பிட்ட சாரார் மீது குற்றம் சுமத்தி , வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும், அந்த குறிப்பிட்ட சாரார் மீதான குற்றம், சாட்சி ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்க இயலா விட்டாலும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் அவர்களை தூக்கில் இட வேண்டும் என்று விரும்புகிறார்கள்!

இவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் காவல் துறை விசாரணைப் போக்கை திசை திருப்புகிறார்கள்!

அத்வானி பைப் வெடிகுண்டு வழக்கிலும், வேலூர் வெள்ளையன் வழக்கிலும், ஆடிட்டர் ரமேஷ் வழக்கிலும் இது வரைக்கும் இவர்கள் விரும்புகிற எந்த ஆதாரமும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை!

ஒருபுறம் இவர்களின் நிர்பந்தம்! இன்னொரு புறம் அரசின் நிர்பந்தம்! வேறு வழியின்றி 'ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பது போல் தேசத்தின் கூட்டு மனசாட்சியின் படி பல்வேறு வழக்கில் தேடப்பட்ட பன்னா இஸ்மாயில், பக்ருதீன், பிலால் ஆகியோர் மீது இந்த வழக்குகள் புனையப்பட்டதாக அவர்கள் தரப்பு சொல்கிறது!

மேலும் ‘காஷ்மீரை விட ஜிஹாதிகள் இங்கு அதிகம் உள்ளனர்’ எனக்கூறும் அர்ஜுன் சம்பத் அதற்குரிய ஆதாரங்களைத் தரவேண்டும்! இல்லை எனில் விஷயம் தெரிந்த அவரை அரசு காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும்.

117 தலைவர்கள் படுகொலை என்று ஒப்பாரி வைக்கும் அர்ஜுன் சம்பத்துக்கு ஒரு கேள்வி! இந்துத் தலைவர்கள் படுகொலை என்று நீங்க சொல்கிறீர்கள். ஆனால் அவர்கள் செத்ததற்குப் பிறகுதான் தலைவர்கள் எனத் தெரிகிறது. அதற்கு முன்னால் மக்களுக்கு அவர்கள் யாரென்று தெரியவில்லை!

ஆனால் தலைவர்கள் என்று அறியப்பட்ட நீங்கள், ராமகோபாலன், எச்.ராஜா, பொன்னார், சி.பி.ஆர், இல.கணேசன், வானதி, ராகவன், தமிழிசை எல்லாம் பத்திரமாக இருக்கும் போது முகம் தெரியாத தலைவர்களையாகப் பார்த்துக் கொல்கிற ஜிஹாதிகள் யாருப்பா?

தினம் தொலைக்காட்சிகளில் உட்கார்ந்து வெறுப்பை விதைக்கிற உங்களை எல்லாம் விட்டுவிட்டு, ஒருத்தருக்கும் தெரியாத ஆளாகப் பார்த்து ஏன் கொல்ல வேண்டும்? எங்கேயோ இடிக்குதே!

காவல் துறை கொஞ்சம் கவனம் வைக்க வேண்டும். ஏனென்றால் இவர்கள் தங்களின் தென்காசி அலுவலகத்துக்கு தாங்களே குண்டு வைத்தவர்கள், தன் வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசியவர்கள், தன்னைத் தானே கடத்தி நாடகம் ஆடியவர்கள், கரசேவகர்களை தாங்களே எரித்து குஜராத்தில் கலவரத்தை நிகழ்த்தியவர்கள், காந்தியைக் கொன்று பலியை முஸ்லிம்கள் மீது போடப் பார்த்தவர்கள்!

கலவரத்தால் அரசியல் ஆதாயம் அடைய தங்கள் மக்களையே கொல்லும் இவர்கள் தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்!

மண்டைக்காடு கலவரத்திற்குப் பின் கன்னியாகுமரி, கோவைக் கலவரத்திற்குப் பின் கொங்கு பகுதி, கோத்ராவுக்குப் பின் குஜராத், முசாபர் நகர் கலவரத்திற்குப் பின் உ.பி யும் வீழ்ந்தது உதாரணங்கள்!

அம்மா ஜாக்கிரதை! அய்யா ஜாக்கிரதை! அமைதிப் பூங்கா ஜாக்கிரதை!

Pin It