தமிழினப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வலியுறுத்து!
 
கொழும்பில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டைத் தடுத்து நிறுத்து!
 
கொழும்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளாதே!
 
தமிழினப் படுகொலைகளை மூடி மறைக்க துணை நிற்காதே!
 
என்ற கோரிக்கை முழக்கங்களுடன் தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தோழர் தியாகு, கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் "வெற்றி அல்லது வீரச்சாவு" என்ற முழக்கத்துடன் சாகும் வரை பட்டினிப் போரை நடத்தி வருகிறார்.
 
1987 இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பெயரால் வடக்கு கிழக்கு மாகாண சபையே தீர்வென்று இந்திய அரசு திணித்தது. கடந்த மாதம் இலங்கையின் வட மாகாண சபை தேர்தல் நடந்து முடிந்து விட்டதையடுத்து, தமிழர் வாழ் பகுதிகளில் சனநாயகத்தை நிறுவி விட்டோமென்றும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் அங்கு நடந்த தமிழினப் படுகொலையை மூடி ம‌றைத்து விட‌லாமென்றும் சிங்க‌ள‌ அர‌சும், இந்திய‌ அர‌சும் திட்ட‌மிட்டு காய்க‌ளை ந‌க‌ர்த்தி வ‌ருகின்ற‌ன.

2009 ஆம் ஆண்டு போருக்கு பின், தமிழக மக்களிடம் ஈழப் போராட்டத்திற்கான ஆதரவு நிச்சயம் பெருகியிருக்கிறது. இன்றைய சூழலில், இனப்படுகொலை நாடான‌ இலங்கையில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்று தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் இந்திய அரசை நோக்கி முன் வைத்திருக்கின்றன. அ.தி.மு.க‌ , தி.மு.க‌., ம‌.தி.மு.க, சி.பி.ஐ., விடுத‌லை சிறுத்தைக‌ள், பா.ம‌.க‌, ம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் க‌ட்சி, எஸ்.டி.பி.ஐ. தே.மு.தி.க‌.,ஆகிய‌ அனைத்து க‌ட்சிக‌ளும் ம‌ற்றும் பா.ஜ‌.க‌ போன்ற‌ க‌ட்சிக‌ளும், காங்கிர‌சில் இருக்கும் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராசன் ஆகியோரும் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாடோடு தான் இருக்கின்றனர் .அது மட்டுமின்றி, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்கு பிறகு, புதிய எழுச்சியாக மாணவர் சமூகமும் இக்களத்தில் இணைந்திருக்கிறது.
 
காவல் துறை அனுமதி மறுத்தும் தமிழக உயர்நீதிமன்றம் தோழர் தியாகுவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு இசைவளித்திருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் பொது இடங்களில் இப்படியான பட்டினிப் போராட்டங்கள் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்றதில்லை. தொடக்கமே வெற்றிக்கான முகாந்திரத்துடன் களமிறங்கியிருக்கும் தோழர் தியாகுவின் இப் போராட்டம் தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய மாற்றத்தை தோற்றுவிக்கத் தான் போகிறது.
 
காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து இந்திய அரசை மறிப்பது அல்லது தன் உயிரை தமிழ்ச்சமூகத்திற்கு கையளிப்பது என்ற இரண்டே முடிவுகளை நோக்கித் தான் தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியிருக்கிறது. வழக்கமான‌ பட்டினிப் போராட்டங்களைப் போல் ஒரு அடையாளப் போராட்டமாக‌ தியாகுவின் இப்போராட்டம் முடிவடையப் போவதில்லை.காவல்துறையால் கைது செய்யப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டாலும் அங்கிருந்து தனது உணவு மறுப்பு போராட்டத்தை தொடர்வதென தோழர் தியாகு முடிவு செய்திருக்கிறார். அடையாளப் போராட்டங்களை மட்டுமே நடத்திப் பழகிப் போன‌ ந‌ம‌க்கு, இந்த‌ அக்டோப‌ர் மாத‌ இறுதியில், இரண்டில் ஒரு செய்தியை மட்டுமே எதிர்நோக்க விருக்கிறோம்.அதில் ஒன்று இப்போராட்டத்தின் வெற்றி அல்லது தோழர் தியாகுவின் வீர‌ச்சாவு. இரண்டில் எதுவாக இருப்பினும் தமிழகத்தின் 21 ஆம் நூற்றாண்டின் வரலாற்றில் அது ஒரு புதிய துவக்கமாக இருக்கப் போகின்றது.
 
ஒட்டு மொத்த தமிழக மக்களும் அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் இக்கோரிக்கைகளுக்கு ஆதரவான நிலைப்பாடுடன் இருக்கும் சாதகமான இப்புறச்சூழலை பயன்படுத்தி, நீதியை வென்றெடுப்பதில் முனைப்புடன் செய‌ல்ப‌ட‌ வேண்டும். போராடினோம், கலைந்து செல்வோம், அதன் மூலம் முன்னகர்த்துவோம் என்ற வழமையான சித்தாந்தங்களை ஊடறுத்து, இக்கோரிக்கைகளை ஆதரிக்கும் எந்தவொரு அர‌சிய‌ல் இய‌க்க‌ங்க‌ளும் ம‌னித‌ உரிமை அமைப்புக‌ளும் முற்போக்கு சனநாயக சக்திகளும் த‌ங்க‌ள‌து முழு ப‌ல‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி, போராட வேண்டும். சிறுதுளி பெருவெள்ள‌ம் என்று சிற்சில வெற்றிகளை குறிக்கோளாக்காமல், க‌ண்முன்னே திர‌ண்டிருக்கும் சூழ‌லை ப‌ய‌ன்ப‌டுத்தி வெற்றி ஒன்றே ந‌ம‌து ஒரே இல‌க்கு என்று காட்டாற்று வெள்ள‌மாக‌ அணிதிர‌ள்வோம்.
 
வெற்றி நம் அருகிலிருக்கிற‌து! வ‌ர‌லாறு ந‌ம் ப‌க்கமிருக்கிற‌து!
 
- சேவ் த‌மிழ்சு இய‌க்க‌ம்.

Comments

6 comments

6
marudhupandian
"வருங்கால தலைமுறைகள் உன் பேர் சொல்லும் - நீ வளர்த்தெடுக்கும் போராட்டம் நிச்சயம் வெல்லும்." - மருதுபாண்டியன்
சாணக்கியன்
டெல்லியிலிருந்து பெட்டி வந்ததும், தொப்புள்கொடி உறவையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு மாயமாய் மறைந்துவிடும் கும்பலை வைத்துக் கொண்டு என்ன சாதிக்க முடியும்?.
Salanan
இலங்கை தமிழ்நாட்டை விட சிறிய நிலப்பரப்பு. சிங்களர்களின் எண்ணிக்கை வெறும் ஒன்றரை கோடி தான். ஆனால் தனி நாடும் இறையாண்மையும் இருப்பதால் வெறும் ஒன்றரை கோடி சிங்களர்களும் அவர்களின் அரசும் எட்டு கோடி எண்ணிக்கையில் உள்ள தமிழ் மக்களை துச்சமாக எண்ணி இன அழிப்பை மேற்கொள்ள முடிகிறது. இந்திய அரசும் தமிழ் நாட்டையும் தமிழர்களையும் உதாசீனப்படுத்தி விட்டு சிங்கள அரசை தாஜா செய்கிறது. தலை மேல் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இந்த காமன்வெல்த் மாநாடு கொழும்பில்நடத்தப்படுவதற்கு இலங்கையை விட இந்தியா தான் மிகுந்த முனைப்போடு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் சார்பில் கமலேஷ் சர்மா என்னும் அதிகாரி இதற்காக இரவு பகல் பாராமல் ஓடியாடி உழைத்து உலகளவில் ஆதரவு திரட்டி வருகிறார். இந்த மாநாடு மூலம் இலங்கைக்கும் ராஜபக்சவுக்கும் உலகளவில் செல்வாக்கு ஏறும். இதன் மூலம் தமிழ் இனப்படுகொலையை உலகின் நினைவிலிருந்து அகற்றலாம். எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை முனை மழுங்க செய்யலாம் என்பது கணக்கு. உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடியும். தமிழகத்தில் இருக்கும் கட்சிகளிடையே இவ்விடயத்தில் புரிந்துணர்வும் கருத்தொற்றுமையும் தேவை. ஆனால் தி.மு.க என்னும் கட்சி இருக்கும் வரை தமிழக அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை வருவது கடினம் என்றே தோன்றுகிறது. இப்போதைய தேவை, ஈழ மக்கள் எதிர்கொண்ட இந்த பேரழிவை அனைத்து பரிமாணங்களுடனும் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் இந்த விஷயத்தை கொண்டு போய் சேர்ப்பதில் தான் போராட்டத்தின் வெற்றியே அடங்கி இருக்கிறது. ஆனால் இதற்கு உண்டான முழு முயற்சிகளை போராடும் அமைப்புக்களும் தலைவர்களும் எடுத்ததாக தெரியவில்லை. ஓரளவுக்குத்தான் செய்துள்ளார்கள். இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது. முன்பு கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் வெற்றி என்று சொல்ல முடியாது. தமிழகத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கும் கல்லூரிகளில் ஒரு சிலவற்றில் மட்டும் மாணவர் போராட்டம் தலையெடுத்தது. அந்த கல்லூரிகளிலும் அனைத்து மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. (சென்னையில் மட்டும் 500 கல்லூரிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தனை கல்லூரிகளில் இருந்து எத்தனை மாணவர்கள் போராட்டத்தில் பங்கெடுத்தனர்? வெகு சொற்பமே!). கலந்து கொண்ட மாணவர்களிலும் பெருவாரியானவர்கள் peer pressure காரணமாகத்தான் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி (குறிப்பாக வடகிழக்கில் வாழும் பாரம்பரிய ஈழத்தமிழருக்கும் மத்திய இலங்கையில் குடியிருக்கும் இந்திய வம்சாவழி தமிழருக்கும் இடையே இருக்கும் வேறுபாடு குறித்து ) எதுவும் தெரியாது. இது முதலில் மாற்றப்பட வேண்டும். ஒரு தனியார் செய்தித்தொலைக்காட்சியில் “எரியும் நினைவுகள் (Burning Memories)” என்னும் ஆவணப்படத்தை காண நேர்ந்தது. இந்தப்படம் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது குறித்த வரலாற்றை விவரிக்கும் ஒன்றாகும். இந்த படத்தை தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளிலும் திரையிடலாமே!. நூலகம் என்பது உயர்கல்வியின் குறியீடுகளில் ஒன்று. இந்த ஆவணப்படத்தை காணும் மாணவர்கள் ஈழ மக்கள் எதிர்கொண்டு வரும் கல்வி மற்றும் கலாச்சாரம் சார்ந்த பேரழிவை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
Vijayaramachandran
தவறான அணுகுமுறை ..ஒருவரை காவு கொடுக்க முன் மொழிவது
Tamilvendhan
இப்போது சொல்லுங்கள், இது வெற்று முழக்கமா இல்லையா என்று??
சாணக்கியன்
இலங்கையை எதிர்த்தால், சைனாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் கொழும்புவில் ராணுவதளம் கொடுத்து ஒட்டு மொத்தமாக இந்தியாவை ஆப்படித்து விடுவோமென்று ராஜபக்சே மிரட்டுகிறார். என்ன செய்து கிழிக்க முடியும் இந்தியாவால்?

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.