திருக்குறள், தமிழக அரசால் நாட்டு உடைமை ஆக்கப்பட்ட ஒரு நூல். எனவே, திருக்குறளின் பெருமை குலையாதவண்ணம், அந்நூலை எவர் வேண்டுமானாலும், எந்த வடிவத்திலும் அச்சிடலாம். எந்தத் தடையும் இல்லை. அப்படி எத்தனையோ படைப்புகள் வெளிவந்து உள்ளன. சென்னையில் நடைபெறுகின்ற புத்தகக் காட்சியில் ஆராய்ந்து பார்த்தால், எத்தனை விதமான குறள் நூல்கள் உள்ளன என்பது தெரிய வரும். நான் பார்த்த அளவில், ஓலைச்சுவடி போல, நீளமான வடிவத்தில் ஒரு பிரசுரம் அச்சிட்டு உள்ளது. உள்ளங்கை அளவிலும் உள்ளது; 15 ரூபாய் விலையிலும் கிடைக்கின்றது.

18 ஆண்டுகளுக்கு முன்பு, சங்கரன்கோவில் நகரில் எனது தந்தையார் பெயரில், சேர்மன் பழநிசாமி கோப்பை அறிவுத்திறன் போட்டிகள், திருக்குறள் ஒப்புவித்தல், சதுரங்கம், வினாடி-வினா, பேச்சுப் போட்டிகள் போட்டிகளை நடத்தினேன். எவரிடமும் உதவி பெறாமல் சொந்தப் பணத்தில் நடத்தியதால், தொடர்ந்து நடத்த முடியவில்லை. அதேவேளையில் கலிங்கப்பட்டியிலும் போட்டிகளை நடத்தத் தொடங்கி, கடந்த 15 ஆண்டுகளாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்களின் பெற்றோர் பெயரால், வையாபுரி-மாரியம்மாள் கோப்பை என்ற பெயரில், ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு மறுநாள், அறிவுத்திறன் போட்டிகளை நடத்தி வருகின்றேன். சுற்று வட்டாரங்களில் இருந்து குறைந்தது, 500 மாணவ-மாணவியர் பங்கு ஏற்றுச் சிறப்பித்து வருகின்றனர். அனைவருக்கும், வைகோ அவர்கள் மதிய உணவாக பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் வழங்குகிறார்கள். தவிர காலையில் தேநீர், மாலை 4.00 மணி அளவில் சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்குகிறார்கள்.

இப்போட்டிகளில், திருக்குறள் ஒப்புவித்தலை மட்டும் மூன்று பிரிவுகளாக நடத்துகிறோம். 1 முதல் 5 வரை 30 குறள்கள்; 5 முதல் 8 வட்டு வரை 50 குறள்கள்; 9 முதல் 12 வரை 70 குறள்கள் ஒப்பித்தல் வேண்டும். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, வைகோ அவர்கள் பரிசுகளை வழங்குகிறார்கள். வெற்றி பெறாதோருக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு. அவ்விதம், கடந்த ஆண்டு, 15 ரூபாய் மதிப்பிலான 200 குறள் புத்தகங்களை சங்கரன்கோவிலில் வாங்கி, ஆறுதல் பரிசாக அளித்தேன்.

நான் பள்ளி மாணவனாக இருந்தபோது, கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவிலான கலை, இலக்கியக் கழகப் போட்டிகளில், ஆண்டுதோறும் பல போட்டிகளில் நான் பங்கு ஏற்பது வழக்கம். அவ்விதம், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளிலும் பங்கு ஏற்று உள்ளேன். பேச்சு, கட்டுரை, திருத்தமான கையெழுத்துப் போட்டிகளில் பரிசுகளைப் பெற்று உள்ளேன்.

வளரட்டும் வள்ளுவம்

தென்காசி திருவள்ளுவர் கழகம், வெகு சிறப்பாக இயங்கி வருவதையும், ஆண்டுதோறும் விழாக்கள் நீங்கள் அறிவீர்கள். எத்தனையோ பெருமக்கள் அங்கே உரை ஆற்றிச் சிறப்பித்து இருக்கின்றார்கள். தென்காசி திருக்கோவிலுக்கு முன்னால் வலதுபுறம் உள்ள ஒரு சிறிய கட்டடத்தில் இயங்கி வருகின்ற அந்தக் கழகத்துக்கு என் மகளை அழைத்துச் சென்று, அங்கே உள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நின்று படம் எடுத்து, இணையத்தின் முகநூல் பக்கத்திலும் வெளியிட்டு உள்ளேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு, தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைகோ அவர்கள் ஆற்றிய உரையை, அக்காலகட்டத்தில் சங்கரன்கோவிலில் நடைபெற்ற தி.மு.கழகப் பொதுக்கூட்டங்களில், மாலை ஆறு மணியில் இருந்து ஒலிபரப்புவார்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கேட்பார்கள். அவர்களுள் ஒருவனாக நின்று, நானும் பலமுறை கேட்டு இருக்கின்றேன்.

26 ஆண்டுகளாக, வைகோ உரைகளைத் தட்டச்சு செய்து ஏடுகளுக்கு அனுப்பி வருகிறேன். 1998க்குப் பிறகு, வைகோ அவர்களுடைய உரைகளைத் தொகுத்து சிறுசிறு நூல்களாக வெளியிடத் தொடங்கினேன். 2004க்குப் பிறகு நானும் ஒரு எழுத்தாளர் ஆனேன். கடந்த 15 ஆண்டுகளில், சிறியதும், பெரியதுமாக, 105 படைப்புகளை வெளியிட்டு விட்டேன். 1850 முதல் இன்றுவரை தமிழக அரசியலைத் தொகுத்து நான் எழுதிய தமிழ்நாட்டின் கதை என்ற நூலை, இம்மாதம் விகடன் பிரசுரம் வெளியிட்டு உள்ளது.

வள்ளுவம் குறித்து வைகோ ஆற்றிய உரைகளைத் தொகுத்து, ‘வளரட்டும் வள்ளுவம்’ என்ற ஒரு நூலை அச்சிட்டேன். கடலூர் மாவட்ட ம.தி.மு.க. முன்னாள் செயலாளர் சௌ.பத்மநாபன் அவர்களுடைய இல்லத் திருமணத்துக்கு வருகை தந்து, மணமக்களை வாழ்த்திச் சிறப்பித்த ஆன்றோர் பெருமக்களுக்கு, அன்பளிப்பாக இரண்டு ஆயிரம் படிகளை வழங்கினோம்.

விகடன் பிரசுரம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வைகோவின் இலக்கிய உரைகளைத் தொகுத்து அளித்து உள்ளேன். வெல்லும் சொல் என்ற தலைப்பில், வைகோவின் 15 இலக்கிய உரைகள் ஒரு தொகுப்பாகவும், ஒளி விளக்குகள் என்ற தலைப்பில் மற்றொரு நூலும் வெளிவர உள்ளது. நவம்பர் மாதத் தொடக்கத்தில் அதற்கான வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்து கொண்டு இருக்கின்றேன். வெல்லும் சொல் என்ற நூலின் கடைசிப் பகுதியாக, தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் வைகோ ஆற்றிய உரையைத்தான் சேர்த்து இருக்கின்றேன்.

2000 ஆம் ஆண்டு, புத்தாயிரத் தொடக்க நாளில், கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், பங்கு ஏற்கின்ற பெரும்பேறு எனக்குக் கிடைத்தது. அவ்விழாவில், சுமார் 15 நிமிடங்களே வைகோ ஆற்றிய உரை, முத்திரை பதித்தது.

ஆசிரியர் தொடுத்த வினா

பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தபோது, ஒருமுறை வகுப்பு அறையில் ஆசிரியர் இல்லை. மாணவர்களாகிய நாங்கள் பேசிக்கொண்டே இருந்தோம். சத்தம் கூடியபோது, கிருஷ்ணமூர்த்தி என்ற ஆசிரியர் உள்ளே வந்தார். எனது தோழன் திருவள்ளுவர் பேசுவதைப் பார்த்து விட்டார். ‘அருகில் வா’ என்று அழைத்தார். திருவள்ளுவர் என்று பெயர் வைத்து இருக்கின்றாயே, பத்து திருக்குறளை வரிசையாகச் சொல் என்றார். நண்பன் திருவள்ளுவர், என்னை விட நன்றாகப் படிப்பவர், கூடுதல் மதிப்பு எண்கள் எடுப்பவர். ஆனால், ஆசிரியர் கேட்ட நொடியில் அவரால் பத்து குறள்களைத் தொடர்ச்சியாகச் சொல்ல முடியவில்லை. அப்போது, அருணகிரி நாதன் என்று பெயர் வைத்துக் கொண்டு இருக்கின்ற எனக்கு ஒரே அச்சம். எங்கே என்னை அழைத்து, அருணகிரிநாதரின் பாடல் வரிகளைக் கூறு என்று சொல்லிவிடுவாரோ? என்று பயந்து கொண்டே இருந்தேன். நல்லவேளையாக, அவர் என்னைக் கேட்கவில்லை.

அன்றைக்கு வீட்டுக்குச் சென்றவுடன் முதல் வேலையாக, அருணகிரிநாதர் திருப்புகழின், முதலாவது பாடலாகிய ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என்ற பாடலை மனனம் செய்தேன். அருணகிரிநாதர் பாடல்களைப் பாடுவது, படிப்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்குத் தெரியும். எனக்கு அந்த ஒரு பாடல்தான் முழுமையாகத் தெரியும். அதிலும் பின்பகுதியில் வருகின்ற அடிகளைச் சொல்லுவது கடினம்.

அந்தமான் தமிழர் கழகத்தின் முகப்பில், வள்ளுவர் சிலை உள்ளது. கவிஞர் வைரமுத்து திறந்து வைத்து இருக்கின்றார். தில்லி, மும்பை தமிழ்ச் சங்கங்களிலும் திருவள்ளுவர் சிலைகள் உள்ளன. அங்கே நின்று படம் எடுத்துக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் படிக்கின்ற மேசையில், வள்ளுவர், புத்தர் சிலைகளை வைத்து உள்ளேன்.

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

kural_434பிற மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்ப்பு குறித்து, நீதிபதி எஸ். மகராஜன் எழுதிய, திருவள்ளுவர் எனும் நூலில் இருந்து...

ஜெர்மன் அறிஞர் டாக்டர் கிரால் என்பாருக்கு, மனங்கவரும் நுட்பமான குறள் ஒன்றுக்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இக்குறளின் கருத்து அவரைக் கவர்ந்தது. அவர் குறளை மூலத்தில் படித்து மகிழ்வதற்காக, தமிழ் மொழியைக் கற்றார். பின்னர் அவர் குறளை, 1854 ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியிலும், 1856 இல் இலத்தீன் மொழியிலும் மொழிபெயர்த்தார்.

திருக்குறளின் கணிசமான பகுதியை மொழிபெயர்த்த பின்பு, எந்த மொழி பெயர்ப்பும் மனங்கவரும் அதன் மாண்பினை முழுமையாக வெளிக்கொணர்ந்து விட முடியாது. அது உண்மையில், வெள்ளி வேலைப்பாடு கொண்ட, தங்க ஆப்பிள் கனி என்று அறிவித்தார்.

தலைசிறந்த ஐரோப்பியத் தமிழ் அறிஞர்களுள் ஒருவரான பெஸ்கி பாதிரியார், 1730 இல் குறளின் முதல் இருபால்களையும், இலத்தீன் மொழியில் மொழி பெயர்த்தார். இவர் கிறித்தவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழகத்துக்கு வந்தார். கிறித்துவத்தைத் தவிர, பிற சமயத்தவர்கள் அனைவரும், நரகத்துக்குத்தான் செல்வார்கள் என்ற கொள்கையில், அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருந்தார்.

குறளை மொழிபெயர்த்த பின்னர், திருவள்ளுவரின் விழுமிய கோட்பாடுகளில் மனம் பறிகொடுத்த பெஸ்கி பாதிரியார், இந்த முதுமொழிகளைப் பாடிய திருவள்ளுவர், புறச்சமயத்தவர் என்ற முறையில் நரகத்துக்குச் சென்று இருக்க வேண்டும் என்றாலும், அவர் நரகத்துக்குச் சென்றிருக்க மாட்டார் என ஒப்புக் கொண்டார்.

தலைசிறந்த பிரெஞ்சு மேதை, எம்.ஏரியல், 1848 இல் குறளின் சில பகுதிகளை, ஃபிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். 1730 இல், பெயர் தெரியாத ஓர் ஆசிரியர் செய்த முந்தைய ஃபிரெஞ்சு மொழிபெயர்ப்பு ஒன்றைப் பற்றியும் அவர் குறிப்பிட்டு உள்ளார். இது, ஃபிரான்ஸ் தேசிய நூலகத்தில் இருப்பதாகவும் கூறி உள்ளார்.

பணிவுடைமை, அருளுடைமை, பொறையுடைமை போன்ற பண்புகளை, கிறித்துவம் அல்லாத நாடுகள் போதிக்கவில்லை என்ற எண்ணம், ஐரோப்பியக் கிறித்துவப் பிரச்சாரகர்கள் இடையே நிலவி வந்தது. 1886 இல் குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தவத்திரு ஜி.யு. போப், இந்தத் தப்பு எண்ணத்தைத் தகர்த்து எறிந்தார்.

புராஜக்ட் மதுரை (Project Madurai) தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் இணையப் பக்கங்களில், (Tamil Virtual Academy) www.tamilvu.org (முன்பு தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) ஆகிய இணையப் பக்கங்களில், சங்க இலக்கியம் தொடங்கி தமிழின் முதன்மையான நூல்களைப் படிக்கலாம். இதுபோன்ற பல தளங்கள் உள்ளன.

எனது முகநூல் பக்கத்தில், அயல்நாடுகளில் வசிக்கின்ற தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து இருந்தேன்.

நீங்கள் வாழுகின்ற நாட்டின் தேசிய மொழியில், திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். இல்லையேல், நீங்கள் அந்த முயற்சியில் இறங்குங்கள் என்று எழுதி இருந்தேன்.

தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் அருள், (ஒளவை நடராசன் அவர்களுடைய மகன்), திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது என்ற குறிப்புகளைத் தந்து இருக்கின்றார்.

திருக்குறள் மொழிபெயர்ப்புகள்

அயலக மொழிகள்:

அரபிக் - 3
பர்மிய மொழி - 1
சீனம் - 3
செக் - 1
டச்சு - 1
ஃபிஜி - 2
ஃபின்னிஷ் - 1
ஃபிரெஞ்சு - 7
ஜெர்மனி - 7
ஜப்பான் - 1
இலத்தீன் - 2
மலாய் - 3
போலிஷ் - 1
ரஷ்யன் - 2
சிங்களம் - 2
ஸ்வீடிஷ் 1
16 அயல்நாட்டு மொழிகளில், 37 மொழிபெயர்ப்புகள்

இந்திய மொழிபெயர்ப்புகள்

பெங்காலி - 3
அஸ்ஸாமி - 1
குஜராத்தி - 1
இந்தி - 7
கன்னடம் - 4
மலையாளம் - 7
ஒரியா -1
பஞ்சாபி - 2
இராஜஸ்தானி - 1
சமஸ்கிருதம் - 2
சௌராஷ்டிரா - 1
தெலுகு - 2
உருது - 2
மணிப்புரி - 1

14 இந்திய மொழிகளில் 35 மொழிபெயர்ப்புகள்; ஆங்கிலத்தில் மட்டும் 97 மொழிபெயர்ப்புகள்.

ஆக ஒட்டுமொத்தமாக, 169 மொழிபெயர்ப்புகள்.

திருக்குறள் இசைவடிவம்

செம்மொழி தமிழ் ஆய்வு மையம் குறள் இசைப் பாடல்களை வெளியிட்டு உள்ளது. 330 பாக்களை, தமிழ், கர்நாடகம், இந்துஸ்தானி, மெல்லிசை என, பல்வேறு இசை மரபுகள் சார்ந்த பாடல்களாக வெளியிட்டு உள்ளது. 60 பாடகர்கள் பாடி உள்ளனர். 200 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், வாத்தியங்களை இசைத்து உள்ளனர்.

முதலில் ஒரு ஆண் குரல் தமிழில் பாடலைச் சொல்லுகிறது. அதற்கு ஒரு பெண் விளக்கம் தருகின்றார். அடுத்து, ஒரு ஆங்கிலேயர், ஆங்கில மொழிபெயர்ப்பைக் கூறுகிறார்.

இதன் விலை 999 ரூபாய். மொத்தமாக வாங்கி, திருமணங்கள் போன்ற விழாக்களில் அன்பளிப்பாகக் கொடுப்பதாக இருந்தால், விலை ரூ. 300

வேண்டுகோள்

அண்ணா பேருந்துகளில் பொறிக்க ஆணை பிறப்பித்தார். தமிழகச் சட்டப் பேரவையில் குறள் கூறி தொடங்குகின்றனர். திருக்குறளின் சிறப்புகள் குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. என்னை விட நீங்கள் கற்று உணர்ந்தவர்கள். நாள்தோறும் ஒரு திருக்குறளை உங்கள் பிள்ளைக்கு உங்கள் வாயால் சொல்லுங்கள். அவர்களுடைய வாழ்நாள் முழுமையும், உங்கள் குரல் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

தமிழ் மறை திருக்குறள்

அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள, உலகத் தமிழ் மொழி அறக்கட்டளை (International Tamil Language Foundation) என்ற அமைப்பு, தமிழ் மறை திருக்குறள் என்ற நூலை வெளியிட்டு இருக்கின்றது.

‘இது, தமிழ்ப் பண்பாட்டுக் கையேடு,
தமிழின எதிர்கால வழிகாட்டி’
என்று முகப்பில் குறிப்பிட்டு இருக்கின்றார்கள்.

இதுவே நான் பார்த்த குறள் நூல்களுள் சிறப்பானது.

1815 பக்கங்கள். தலைமைத் தொகுப்பாசிரியர், அழகப்பா ராம்மோகன். உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையின் இயக்குநரும் இவரே. நூலின் நுழைவாயிலில்,

‘தனிப்பட்ட தமிழர்கள் தமிழை மறக்கலாம், தங்களை மறக்கலாம், இறந்தும் போகலாம். ஆனால், தமிழ்ச் சமுதாயம் தன்னை மறக்க இயலாது. அது இறப்பற்றது. அதன் ஒட்டுமொத்தமான கூட்டு நினைவுகள், புத்தக வடிவில் அழியாது காக்கப்பட்டு வந்துள்ளன. அவை என்றும் நிலைத்து நிற்கும். நமது கிரேக்க, ரோம தோழமை நாகரிகங்கள் மறக்கப்பட்டபோதிலும், ஐரோப்பிய மறுமலர்ச்சி அந்த கிரேக்க, ரோம நாகரிகங்களின் மீட்டு எடுப்பில்தான் வெற்றி பெற்றது. அதே முறையில், இந்தப் புதிய ஆயிரம் ஆண்டுகளில், தமிழ் இனம் காணப்போகும் மறுமலர்ச்சி வெற்றி பெற வேண்டும் என்றால், அது அதன் பண்டைய நாகரிகச் சிறப்பை மீட்டு எடுப்பதில்தான் உள்ளது. அதற்காகவே இந்த நூல் முயற்சி’

என்று குறிப்பிட்டு உள்ளார். அத்துடன், ‘இது உங்கள் மனை. இந்த மனைக்குப் பரப்பும், உயரமும் தேவை. எப்படிச் செய்வது என்பது, உங்களைப் பொறுத்தது. எவ்வளவு சிறப்பாக, வலுவாக, உயரமாக, அகலமாகச் செய்ய முனைந்தாலும், இந்தக் கருவறை-மையம்-முற்றம் இடம் கொடுக்கும்’ என்கிறார்.

இந்த நூலின் ஆக்கத்தில், அமெரிக்கா, தமிழ்நாடு, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தோனேசியா எனப் பல நாடுகளில் வசிக்கின்ற தமிழர்கள் பங்கு அளித்து உள்ளனர். அச்சிடுவதற்கான நிதி உதவியையும், பன்னாட்டுகளில் வசிக்கின்ற 97 தமிழ்ப் புரவலர்கள் பகிர்ந்து கொண்டு உள்ளனர். 2000 ஆம் ஆண்டு ஜனவரியில், முதல் பதிப்பாக, அமெரிக்காவில் பத்தாயிரம் படிகள் அச்சிடப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு குறளையும் இருவகையாக எழுதி இருக்கின்றார்கள். முதலில், இலக்கண மரபில் பெரிதாகவும், அடுத்து, இக்கால நடைமுறைக்கு ஏற்றவாறு சொற்களைப் பிரித்தும் எழுதி இருக்கின்றார்கள். ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து இருக்கின்றார்கள்.

புத்தகத்தைத் திறந்தவுடன் உள் அட்டையில் கீழ்காணும்செய்திகள் இடம் பெற்று உள்ளன:

தமிழர் வரலாறு; மற்றவர்கள் பார்வையில்...

* ‘பாண்டிய அரசு ஒரு ராணியால் ஆளப்படுகிறது’ - மெகஸ்தனிஸ், கிரேக்கத் தூதர், கி.மு. 400

* ‘பான்-கான்-டோ-லுh வில் இருந்து, கப்பல் மூலம் இரண்டு மாதங்களுக்கு மேல் பயணித்தால், காஞ்சி நாட்டை அடையலாம். காஞ்சி, பரந்தும், மக்கள் மிகுந்தும், பலவிதமான பொருள்களோடு முத்தும், மணி வகைகளும் நிரம்பித் திகழும். பேரரசர் வான் (கி.மு. 140-86) காலம் முதல் நம்முடன் வாணிபம் செய்து வருகிறார்கள்.’ - பான் கோ, சீன விருந்தாளி, கி.மு. 100

* இந்தியாவின் ஒரு இடத்திலிருந்து, அதுவும், பாண்டிய அரசனின் பரிசுகளோடு அனுப்பி வைத்த தூதுவர்கள், அகஸ்டஸ் சீசரிடம் வந்தார்கள். - கிரேக்க நாட்டு ஸ்டிராபோ, கி.மு. 10

* பாண்டிய நாட்டு முத்துப் பண்ணைகள், தெற்கே குமரி முனையிலிருந்து, கொற்கை வரை விரிந்து உள்ளது. கொற்கைக்கு அப்பால் இருககும் உறையூருக்கு, எங்குமில்லாதபடி கரையோரம் விளைந்த முத்துகள் கொண்டு வரப்பட்டு, மெல்லிய துணி வகைகளோடு ஏற்றுமதி ஆகின்றன. - பெரிப்ளஸ், ரோம், கி.பி. 75

* தமிழர்கள், எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டுமல்லாமல், வானவியல் அறிவும் பெற்றுள்ளார்கள். ஆடவர்கள் எல்லோரும் ஓலைச் சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட சித்தாந்தம் என்ற வழிகாட்டும் நூலைக் கற்கிறார்கள். - மா டவான்லின், சீன வரலாற்று ஆசிரியர், கி.பி. 550-600

* காஞ்சித் தலைநகரம்: இது வளமான பூமி. பூவும், கனிகளும் பெருமதிப்புள்ள பல்வகைப் பொருள்களும் கொண்டு இருந்தது. இதன் மக்கள் தைர்யம் உடையவர்களாகவும், நம்பத்தகுந்தவர்களாகவும், பொது நலம் பேணுபவர்களாகவும், கல்வியில் நாட்டமுடையவர்களாகவும் இருந்தார்கள். - யுவான் சுவாங், சீனப் பயணி, கி.பி. 640

* குலசேகர பாண்டியனுடைய அரசு, செல்வம் கொழிக்கும் வளமுடையது. மதுரை நகர் அரசப் பெட்டகத்தில் 1200 கோடி பெறுமானமுள்ள தங்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதைத் தவிர, பெருமதிப்புள்ள முத்து, சிகப்பு, பச்சை போன்ற, வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத மணிவகைகள் இருந்தன. - வாசாஃப், இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர், (சிராஸ்ரீ) கி.பி. 1281

* உடன்பிறந்த சகோதர மன்னர்கள் ஐவர் இருக்கிறார்கள். இதில் ஒருவரான சுந்தரபாண்டித் தேவர் முடிசூட்டப்படுகிறார். இந்த அரசகுமாரன் சிறப்புகள் எல்லாம் பெற்ற சான்றோன். - மார்க்கோபோலோ, வெனிஸ்சிலிருந்து வந்த பயணி, கி.பி. 1293

* தமிழர்கள் கவிதை, ஓவியம், சிற்பக்கலையில் மகோன்னதமான முத்திரை பதித்தவர்கள். ஆனால், அவர்களது தலைசிறந்த படைப்புகள் படிமங்களே. அதில் தலையாயது சிவ வடிவம். உலோகத்தில், பிளாரன்ஸ் தந்த மேதை டான்டொலோ பிறப்பதற்கு 400 ஆண்டுகளுக்கு முன்னரே, 1011 ஆம் ஆண்டில் வார்க்கப்பட்டது. இதைப்போல, பண்டைய கிரேக்கம் முதல் இன்று வரை எதுவும் படைக்கப்படவில்லை. - மைக்கேல் வுட், இங்கிலாந்து ஆசிரியர், உலக நாகரிகங்கள்.

அடுத்ததாக, திருக்குறள் பெருமை என்ற தலைப்பில், ஒரு கட்டுரை இடம் பெற்று உள்ளது. வா.செ. குழந்தைசாமி, எஸ். மகராஜன், ஆல்பர்ட் சுவைட்சர், உ.வே.சா., எம்.ஏரியல் ஆகியோரது கருத்துகளைத் தொகுத்து, வா.செ. குழந்தைசாமி எழுதி உள்ளார். திருக்குறள் குறித்து ஏராளமான செய்திகள், ஒப்பீடுகள் இடம் பெற்று உள்ளன.

ரோமில் நடந்த அகஸ்டஸ் பேரரசன் முடிசூட்டு விழாவில், பாண்டிய மன்னனின் தூதர் கலந்து கொண்டதாக, கி.பி. முதல் நூற்றாண்டில், முதலாவது புவியியல் நூலை எழுதிய கிரேக்க அறிஞர் ஸ்டிராபோ குறிப்பிட்டு உள்ளார்.

கி.மு. முதல் நூற்றாண்டிலேயே, மலேசியா, வட போர்னியோ, வடக்கு ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுடன், தமிழர் விரிவான வாணிக உறவு கொண்டு இருந்தனர் என்று, புகழ் பெற்ற தொல் பொருளியல் அறிஞரும், வரலாற்று ஆசிரியருமான ஆர்.பி. டிக்சன் வலியுறுத்துகிறார்.

தென்னிந்தியக் கடலோரப் பகுதிகளுக்கும், சீனப் பேரரசுக்கும் இடையில், தூதரகத் தொடர்புகள் இருந்து வந்ததற்கான சான்றுகள், சீன இலக்கியங்களில் காணப்படுவதாக, பால் பெரியோ குறிப்பிடுகிறார்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த சீன எழுத்தாளர் பான் கூ என்பார், ஹீவா பேரரசர் காலத்தில், சீனாவுக்குத் தூதர்களைச் சோழ அரசன் அனுப்பியதாகக் கூறி உள்ளார். (கே.எம். பணிக்கர், இந்தியாவும், சீனாவும் பக்கம் 17,19).

இந்நூலின் உள்ளடக்கம்:

பகுதி 1

திருக்குறள் அறிமுகம், திருக்குறள் பெருமை, அதிகார அடக்கம், சிந்தனைச் சாறு, அதிகார ஓவியங்கள், திருக்குறள் மூலம், ஆங்கில மொழியாக்கம், நுண்பொருள் விளக்கவுரை, உரையாசிரியர் பக்கம், பாட்டு முதற் குறிப்பு அகராதி, குறள் பொருள் அகராதி, திருக்குறள் மந்திரங்கள், வள்ளுவர் படக்கதை, மொழிபெயர்ப்புப் பதிப்புகள்.

பகுதி 2

தமிழ் வாழ்த்து, தமிழ்ச் சான்றோர் வாழ்த்து, தமிழ் மொழி - ஒரு அறிமுகம், பண்பாடு, தமிழ்ப் பண்பாடு, தமிழினப் பண்பாட்டுக் குறியீடு, இன்றைய தமிழினம், தமிழ் ஒரு செவ்வியன் மொழி, தமிழின் தொன்மையும், தொல்காப்பியமும், தமிழின் கொடை, இலக்கணமும் செய்யுள் மரபும், தமிழ் ஒலியியலும் வரி வடிவமும், தமிழ்க் கவிதை ஓவியங்கள், சங்க காலத் தனிச் சிறப்பு, தமிழர் சட்டங்கள், தமிழ் மரபிசை, நாட்டியம், தமிழ் இலக்கிய வரலாறு, தமிழர் வரலாறு, மருத்துவ இயல், கணித இயல், வானவியல், தொழில் நுட்ப மேன்மை, சிவ நடராச தத்துவம், தமிழர் வளர்த்த சமயங்கள்.

பகுதி 3

தமிழின எதிர்கால வழிகாட்டி

புதிய ஆயிரம் ஆண்டுகள், அற வழி, மனம், மனப்பயிற்சி வழி உள்நோக்கு, உடற்பயிற்சி, சிந்தனைத் திறன் வளர, உங்கள் சிக்கல்கள் தீர, கடமை ஆற்றலே தவம், தமிழ் எழுத்தாளர்களின் பொறுப்பு, தமிழினம் ஓங்குக, வேற்றுமைகளில் ஒருமைப்பாடு, வள்ளுவக்குக் கடிதமும், பதிலும், வாழ்வுக்கு நெறிமுறைகள், தமிழின் எதிர்காலம்

தொடர்புக்கு:
International Tamil Language Foundation,
8417, Autumn Drive, Woodridge, Illinois, 60517 USA
Web: www.kural.org
e-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Ph: 630-985-3141

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It