ஜீன் மாதம் 26 ஆம் தேதி இந்திய சனநாயக வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள். 1975 ஆம் ஆண்டு அந்த நாளில் இந்தியாவின் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி நமது நாட்டின் உள் நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி அன்றைய ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுவுக்கு நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டினார். தலையாட்டி பொம்மையான ஜனாதிபதியும் நெருக்கடி நிலை உத்தரவினைப் பிறப்பித்தார். அந் நாளிலிருந்து அடிப்படை உரிமை மறுக்கப்பட்ட நாட்டின் குடி மகன் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டும் சிவில் உரிமை பறிக்கப்பட்டது. சட்டவிரோதமாக சிறைபிடிக்கப்பட்டவர்கள் தங்களின் மனித உரிமை மீறப்பட்டதாக நீதிமன்றங்களில் ஆட்கொணர்வு மனு Heabus corpus தாக்கல் செய்யும் உரிமையினை இழந்தனர். எல்லா அதிகாரமும் பிரதமர் இந்திரா, அவரின் காங்கிரஸ் கட்சியின் கைவசமானது. இந்திய வரலாற்றில் ஒரு மோசமான சர்வாதிகார ஆட்சி உதயமானது.

1971 ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்திராகாந்தி அரசு இயந்திரத்தை தவறாக, தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தேர்தல் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றார் என குற்றம் சாட்டப்பட்டது. இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றியினை எதிர்த்து அலகபாத் உயர்நீதிமன்றத்தில் ராஜ் நாராயணன் வழக்கு தாக்கல் செய்து எதிர்த்திருந்தார். State of Uttar Pradesh v. Raj Narain அந்த வழக்கில் 1975 ஆண்டு ஜீன் 12 ஆம் தேதி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜக்மோகன்சிங்கா வழங்கிய தீர்ப்பில் பிரதமர் இந்திரா காந்தி தேர்தல் முறைகேடுகளை செய்து வெற்றி பெற்றதாகவும் அதற்காக 6 ஆண்டுகள் அவரை தேர்தலில் போட்டியிட தடை செய்வதாகவும் கூறப்பட்டது. நாடு முழுவ‌தும் ஏற்கனவே இருந்த வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் கூடவே இந்திரா காந்தியின் சர்வாதிகாரப் போக்குக்கு எதிராக ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்றோர் மேற்கொண்டுவந்த சனநாயக மீட்பு போராட்டங்கள், இந்தப் பின்னணியில் தனது தேர்தல் வெற்றி செல்லாது மற்றும் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற தடையிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள நெருக்கடி நிலைப் பிரகடன‌ம் மூலம் தன்னை ஒரு சர்வாதிகாரியாக நிறுத்திக்கொண்டார் இந்திராகாந்தி.

நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 352 படி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போர்ச் சூழலில் இந்த நெருக்கடி நிலையினை பிறப்பிக்க முடியும். பிரதமரின் வேண்டுகோளினை ஏற்று மத்திய அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு இதனை நடைமுறைப்படுத்த பரிந்துரைக்கும். குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையினை பிறப்பித்த பின் ஒரு மாதத்தில் பாராளுமன்றத்தின் பெரும்பாலான உறுப்பினரின் ஒப்புதலைப் பெறவேண்டும். இது ஆறு மாதம் நடைமுறையில் இருக்கும்.

நெருக்கடி நிலை பிறப்பிக்கபட்டவுடன் இந்திரா காந்திக்கு எதிரான எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட பல தலைவர்களும் தமிழகத்தில் தி.மு.க கட்சியினரும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியினைச் சார்ந்தோரும், நக்சல்பாரி இயக்கத்தவர் என பல பொதுவுடமை செயல்பாட்டாளர்களும் சிறை, சித்திரவதை என பாதிப்புகளை எதிர்கொண்டனர். அந் நாட்களில் சிறைகளில் நடந்தேறிய கொடுமைகளுக்கு சாட்சியமாக சிட்டி பாபுவின் சிறைக் குறிப்பு, தியாகுவின் சிறைக்குள் சித்திரங்கள் உள்ளிட்ட தமிழ் சிறை பதிவுகளும், ஆங்கிலத்தில் மேரி டைலரின் இந்திய சிறையில் என் நாட்கள் My days in indian prison ,மற்றும் அன்றைய ஐ.ஏ.எஸ் அதிகாரியான M.G தேவசகாயம் அவர்களின் JP in jail an uncensored accountஉள்ளிட்ட பதிவுகள் உள்ளன.

சட்டத்தின் ஆட்சி (rule of law )என்பதற்குப் பதிலாக இந்திராவின் உத்திரவு படி ஆட்சி (rule of decree) என்ற நிலை உருவானது. பாதிக்கப்பட்ட பலர் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டினர். நாட்டின் ஒன்பதுக்கும் மேற்பட்ட உயர்நீதிமன்றங்கள் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை அரசு நெருக்கடி நிலையினை சொல்லி எடுக்க முடியாது என தீர்ப்பு வழங்கின‌. எனினும் உச்சநீதி மன்றத்திற்கு இந்த வழக்குகள் கொண்டு செல்லப்பட்ட போது, சிறைபடுத்தப்பட்ட மக்களுக்கு தனி மனித சுதந்திரம் உள்ளதா என்ற விவாதத்தை துவக்கிய சிவகாந் சுக்லாவின் Additional District Magistrate of Jabalpur v. Shiv Kant Shukla என்ற வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் பி.என்.பகவதி, சந்திரசூட், பெக், ரே மற்றும் கண்னா அடங்கிய பெஞ்ச்சின் தீர்ப்பில் நீதிபதி கணாவைத் தவிர நான்கு நீதிபதிகள் நெருக்கடி நிலையில் சிறைபடுத்த அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அதனை பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய முடியாது எனவும் தீர்ப்பு வழங்கியது. அதில் மாறுபட்ட நீதிபதி கண்னா தனது சிறுபான்மைத் தீர்ப்பில் "இந்திய அரசிலைமப்பு என்பது வெற்று காகிதமல்ல அது நமது முந்தைய தலைமுறையின் தியாகத்தின் பலன். மக்களே உண்மையான ஆட்சியாளர்கள், எதோசர்வாதிகார சக்திகளின் கைகளில் மக்களின் உரிமையினை விட்டுத்தர முடியாது, விசாரணையினறி யாரையும் அரசு சிறையில் வைத்துக் கொள்ள முடியாது" என்றார். அவர் தனது மாறுபட்ட கருத்துக்கு, நியாய‌மாக பணி மூப்பின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியினை விலையாக கொடுத்துள்ளதாக அவரின் சகோதரியிடம் வெளிப்படுத்தினார். அந் நாளில் அவர்தான் நாட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக வரும் பணி முப்பு தகுதியுடனிருந்தார். அவர் அய்யப்பட்டது போன்றே 1977 ல் இந்திரா காந்தி, அது வரை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு கடைபிடித்துவந்த சீனியாரிட்டி முறையினை புறந்தள்ளி விட்டு இளைய நீதிபதியான எம்.ஹெச். பெக் தலைமை நீதிபதியாக மாற வழிவகை செய்தார். நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்த அளவு ஆள்பவர்கள் நெருக்கடி நிலையில் செல்வாக்கு செலுத்தினர் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

மேலும் குடும்ப கட்டுப்பாடு திட்டம் என்ற பெயரில் நாடு முழுதும் 83 லட்சம் மக்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதற்கு முந்தைய வருடம் 23 லட்சம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாட்டில் இந்த அதீத எண்ணிக்கை கட்டாய கருத்தடை செயல் திட்டங்களினால் உருவானது. இருபதம்சத் திட்டம் என்ற பெயரில் அரசு ஊடகங்களில் இந்திரகாந்தி தனனை இந்த நாட்டின் விடிவெள்ளி என சுயதம்பட்டம் அடித்துக்கொண்டார். மறுபுறம் நாடு முழுதும் அதிகார வர்க்கம் மற்றும் காவல்துறையின் சித்தரவதை, மோதல் சாவுகள் தொடர்ந்தன‌. கேரளாவின் புகழ் பெற்ற வழக்கான பொறியியல் கல்லூரி மாணவர் ராஜன் போன்றோரின் கொலை, பீகாரின் பகல்புர் சிறையில் 30 க்கும் மேற்பட்ட கைதிகளின் கண்களைப் பிடுங்கி ஆசிட் உற்றிய கொடுமை, சிறையில் துப்பாக்கி சூடு என அது நீண்டது. நாட்டின் பல பகுதிகளில் இளைஞர்கள் நக்சலைட் என்ற பெயரில் வேட்டையாடப்பட்டனர்.

இந்திய மக்களின் தன்னலமில்லா சிவில் வீரமிக்க போராட்டத்தால் 1977 மார்ச் மாதம் 23 தேதி நெருக்கடி நிலை விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்திய‌ அரசியலில் சிவில் உரிமை பேசுவதற்கு உள்ள வெற்றிடத்தைப் போக்க மக்கள் சிவில் உரிமைக் கழகம் உருவானது.

சனநாய‌க சமூகத்தில் அதனைப் பாதுகாக்க, உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரமிது. அரசிலைமைப்புச் சட்டங்கள் இந்த நாட்டு குடிமக்களுக்கு வழங்கிய சமூக பாதுகாப்புகளான மாநிலங்களின் வழிகாட்டு நெறிமுறைகள், அடிப்படை உரிமைகள் என எல்லா பாதுகாப்பு அரண்களையும் கடந்த 1990களுக்குப் பின் வந்த நவீன தாராளமயக் கொள்கை தகர்க்க துணிந்து விட்டது. அரசியலமைப்பின் வழி நாடு நடைபோடாது உலகில் ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார கொள்கைக்கேற்ப ஆட்சி நடைபெறத் துவங்கி விட்டது. நெருக்கடி நிலையினை விட கொடுமை மிக்க பல சட்டங்கள் ஏழை எளிய பழங்குடி மக்கள் மீது பாய்கின்றது. கருத்துரிமை, அரசின் கொள்கைகளுக்கு மாற்றுக் கருத்து கூறுதல் உள்ளிட்ட பல சனநாயக விழுமியங்கள் பாதிப்புக்குள்ளாகும் காலகட்டம் இது. சொந்த மக்களின் மீது இந்திய அரசு போர் தொடுக்க முடியாது என அரசியலமைப்பு உறுதி செய்த போதிலும், இராணுவ விமானங்களை பழங்குடி மக்கள் மீது பயன்படுத்த ஒரு புறம் ஆதரவு திரட்டும் வேலைகளை பன்னாட்டு நிறுவனங்கள் செய்கின்றன.

ஆக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உருவாகியுள்ள காலகட்டங்களில் சனநாயக மீட்பு என்ற உன்னத லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே, நாட்டின் சுதந்திரத்திக்கு நாம் செய்யும் பாதுகாப்பாகும். எளிய, ஏழை மக்களை இந்த சனநாயக நீரோட்டத்தில் பங்கேற்கச் செய்வது ஒன்றே நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும். நாடு மக்களால் ஆளப்படுவது. மக்களை பாதுகாக்கவே காவல் அமைப்புகள். ஆனால் முரணாக பன்னாட்டு, இந்நாட்டு நிறுவனங்களின் நலனே நாட்டின் நலன் என்ற தடம் மாறிய நவீன தாரளமயக் கொள்கை மக்களை அவர்களின் எல்லா உயிர்வாழும் வளங்களிலிருந்தும் அப்புறப்படுத்துகின்றது. அதற்காக திருப்பத் திரும்ப நெருக்கடி நிலைகள் மறு உருவாக்கம் செயய்யப்படுகின்றது. நாம் நெருக்கடி நிலை வடிவங்களை இடைவிடாது எதிர்ப்போம்.

சனநாயகம் காக்க நாம் எழவேண்டிய காலமிது.

(ஜூன் 26 நெருக்கடி நிலை எதிர்ப்பு நாள் மற்றும் உலக சித்தரவதை எதிர்ப்பு நாள்)

Pin It