சாதி மறுப்புத் திருமணங்கள் - பா.ம.க.வின் கனவும், சிறுத்தைகளின் சிக்கலும் - பகுதி 4

இந்தியாவில் உள்ள புரட்சிகர அமைப்புகள் நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்ட இயலாத போதாமையைக் கொண்டுள்ளன. இந்தப் போதாமையே இவைகளை வலது, இடது விலகல்களுக்கு இட்டுச் செல்கிறது. இதன் காரணமாகத்தான் தமிழகத்தில் செயல்படும் மகஇக குழும அமைப்புகள் வலது விலகலுக்கு ஆட்பட்டு சீர்திருத்த பிழைப்புவாதக் கும்பலாக சீரழிந்து போய்விட்டதையும் அம்பலப்படுத்தியிருந்தோம்.

 இந்திய புரட்சிகர அமைப்புகளின் போதாமை மார்க்சிய சித்தாந்தத்தின் போதாமை அல்ல. மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்புத் தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்காதது, எந்திர கதியாக அதைப் புரிந்து கொண்டு சமூகத்தின் மீது திணிக்க முயலும் அமைப்புகளின் போதாமையைத்தான் எமது முந்தைய கட்டுரைகளில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்.

ramadoss_thirumavalavan_340மார்க்சிய சமூக விஞ்ஞானத்தை, இந்தியாவின் தனித்தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுக்கும் திறன் மார்க்சிய அமைப்புகளுக்கு இல்லாவிட்டாலும், மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானம், ஆளும் வர்க்கங்கள் நடைமுறைப்படுத்தும் பல்வேறு செயல்களின் ஊடாக சமூக வளர்ச்சி என்ற வடிவில் வரம்புக்குட்பட்ட அளவிற்கு நிறைவேறுகிறது.

சமூக வளர்ச்சி ஆளும் வர்க்கங்களின் தேவை, நலன் ஆகியவற்றிற்கு ஏற்ப எந்த அளவிற்கு தடுக்கப்படுகிறதோ, அந்த அளவிற்கு சாதியும், தீண்டாமையும் உயிர்வாழவே செய்யும். இந்திய சமுதாயத்திற்கு மார்க்சிய சித்தாந்தம் பொருந்தாது என்ற கருத்தின் உள்ளடக்கம், இந்திய சமுதாயத்திற்கு வளர்ச்சி என்பதும் பொருந்தாது என்பதே ஆகும்.

இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தாத சித்தாந்தம் மார்க்சியம் என்றால், அது உருவான அதே ஐரோப்பிய சமூகத்தில் உருவான ஜனநாயகம் மட்டும் இந்திய சமுதாயத்திற்குப் பொருந்துமா?

 தலித் அமைப்புகள் தமது பிழைப்புவாத தேவையிலிருந்து, எந்த ஜனநாயகத்தை இந்திய சமுதாயத்திற்குப் பொருந்தும் என்கிறார்களோ, அதை தமது ஆதிக்க சாதி வெறி தேவையிலிருந்து - மார்க்சியம் மட்டுமல்ல, ஜனநாயகமும் - பொருந்தாது என்கின்றனர் ஆதிக்க சாதியினர்.

ஜனநாயகம் காய் என்றால் மார்க்சியம் கனியாகும். பிழைப்புவாதம் என்ற மசக்கையிலிருந்து காயின் புளிப்பே மேலானது என்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட தலித் அமைப்பினர். ஆதிக்க சாதி வெறிப் போதையால் கல்லீரலையே இழந்து போன ஆதிக்க சாதி வெறியர்கள் காய் உருவாகவே விடமாட்டோம் என்கிறார்கள்.

 சமூக வளர்ச்சி பற்றிய கண்ணோட்டத்தில் இவ்விருவருக்கிடையே அளவு ரீதியான வேறுபாடே உள்ளது. பண்பு ரீதியாக ஒன்றுபடுகின்றார்கள். இந்த ஒற்றுமைதான் திருமாவளவனையும், ராமதாசையும் ஒன்றிணைக்கிறது.

எமது இதற்கு முந்தைய கட்டுரைகளை, மார்க்சிய விரோதம் என்ற லகானை மாட்டிக் கொண்டுள்ள சிலர், மார்க்சியம் வெறும் பொருளியல் அடிப்படையிலான மார்க்சிய கண்ணோட்டம் உடையது என்று முத்திரை குத்தியுள்ளனர். பூனை கண்ணை மூடிக்கொண்டு பூலோகமே இருண்டுவிட்டதாக கருதிக் கொள்ளுமாம். இதே போன்றுதான் மார்க்சிய விரோதப் பூனைகளும் கருதிக்கொள்கின்றன.

வன்னிய ஆதிக்க சாதிவெறியர்கள் இப்போது தர்மபுரியில் மட்டுமல்ல, அன்று 80களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார இலக்குகளையே குறிவைத்து தாக்கி அழித்தார்களே இந்நடவடிக்கைக்கு காரணம் என்ன?

அன்று 90 - களில் வன்னிய ஆதிக்க சாதி வெறிக்கு, விடுதலைச் சிறுத்தைகள் பதிலடியாக ஆதிக்க சாதி வெறியர்களின் பொருளாதார இலக்குகள் மீது குறிவைத்துத் தாக்கினார்களே இந்நடவடிக்கையின் உள்ளடக்கம் என்ன?

ஒருவரின் பொருளாதார வளங்களைத் தாக்கினால், அது அவரின் சமூக பண்பாடு, கலாச்சாரம் உட்பட அனைத்திலும் சிந்தனா ரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும் என்றுதான் இதைச் செய்கிறார்கள். ஆனால் பொருளாதாரத்திற்கும், அரசியல், சமூகம், பண்பாடு ஆகியவைகளுக்கும் தொடர்பு ஏதும் இல்லை என தமது பிழைப்புவாதத் தேவையிலிருந்து முன்னுக்குப்பின் முரணாக பிதற்றித் திரிகின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒடுக்கும் முறையை எதிர்த்துப் போராடும் வலிமையை அளித்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு – திண்ணியம், புதுக்கூரைப்பேட்டை ஆகிய நிகழ்வுகளில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை காட்டிக் கொடுத்து காசாக்கிக் கொள்வதற்கும் உரிமை இருக்கிறது என்பவர்களுக்கு மார்க்சியம் பொருந்தாத சித்தாந்தம்தான்!

 தன் அளவிலான நலனே ஜனநாயகம் என்ற சித்தாந்தம் தானே விழுப்புரம், கண்டமங்கலம் அருகிலுள்ள பள்ளி நேலியனூரில் அருந்ததியரைக் காதலித்த பறையர் சாதிப் பெண் கோகிலாவை, அப்பெண்ணின் பெற்றோரே கொலை செய்ய வைத்துள்ளது. நாங்கள் பெற்ற பெண்ணை கொலை செய்யவும் எங்களுக்கு உரிமை இருக்கிறது என்று நியாயம் பேசவும் வைத்திருக்கிறது!

விடுதலைச் சிறுத்தைகள் பறையர் சாதி அமைப்பு என்பதால் தானே, இந்த அநீதியைப் பற்றி வாய்திறக்காமல் மௌனம் காக்க வைக்கிறது. சிறுத்தைகளின் ஜனநாயக சவடால்கள் பறையர் சாதிக்கு மட்டும்தானா?

கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் பள்ளி மாணவன் பாரத்தை படுகொலை செய்த விடுதிக்காப்பாளர், காவலர், சமையல்காரர் ஆகிய மூவரையும் வழக்கில்லாமல் பாதுகாத்தனர் விடுதலைச் சிறுத்தைகள்.

கொலையுண்ட மாணவனும், கொலை செய்த குற்றவாளிகளும் பறையர் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கொலையுண்ட மாணவன் ஏழை என்பதால் தானே கொலையாளிகளை விடுதலைச் சிறுத்தைகள் பாதுகாத்தனர்! ஒரே சாதியானாலும் ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரனுக்கு ஒரு நீதி என்பது தானே விடுதலைச் சிறுத்தைகளின் நீதி!

தனது சொந்த சாதி மக்களில் ஒரு சிலரின் நலனை மட்டுமே பிரதிபலிக்கும் விடுதலைச் சிறுத்தைகள், ஆதிக்க சாதி வெறியை முறியடிப்பார்கள் என்று நம்புவது கேழ்வரகில் நெய்வடியும் கதை தான்!

ஆதிக்க சாதியினர் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை பிற்படுத்தப்பட்டோர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி இடஒதுக்கீடே தீர்வு என்றார்கள். அதை அடைந்த பின்னரும் அவைகள் தீர்ந்தபாடில்லை. அதற்கு மாறாக அவைகள் விவசாயத்தின் அழிவு, விவசாயிகளின் தற்கொலை என்ற வடிவில் சமூகத்தை அழிவின் விளிம்பில் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.

இப்போதும் இந்த அழிவை தடுப்பதற்கு மாறாக அதை திசை திருப்பி தீவிரப்படுத்தும் வழிமுறைகளைத்தான் ராமதாஸ் தலைமையிலான ஆதிக்க சாதி வெறிக் கும்பல் கையிலெடுத்துள்ளது. இந்த திருப்பணியைத்தான் ஆதிக்கச்சாதி வெறிக்கும்பலால் செய்யவும் முடியும்!

விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட அமைப்புகள் அனைத்தும் சாதி தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தில் இவைகளுக்கு உள்ள வரலாற்று பாத்திர வரம்பினாலும், சமூக அழிவை- பெரும்பான்மை மக்களை சாதி கடந்து அணிதிரட்டும்- தடுக்கும் நடவடிக்கைகளில் பாத்திரமாற்றவும் முடியாது.

நாட்டின் பெரும்பான்மை மக்களை அணி திரட்டுவதில் போதாமையைக் கொண்டிருந்தாலும், தனது இயலாமைக்கான காரணங்களை பரிசீலனைக்குட்படுத்தி, மார்க்சிய சித்தாந்தத்தை இந்திய சமூகத்தின் சிறப்பு தன்மைகளுக்கு ஏற்ப வளர்த்தெடுத்து, ஆளும் வர்க்கங்களால் உண்டாக்கப்படும் சமூக அழிவை தடுக்கும், காக்கும் தமது ஆற்றலையும், திறனையும் புரட்சியாளர்கள் விரைவில் நிரூபித்துக் காட்டுவார்கள்.

- சூறாவளி

Pin It