மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு!

தமிழகமே வெட்கித் தலைகுனியும் வண்ணம் சாதி வெறியாட்டத்தை அரங்கேற்றிய வன்னியர் சாதிவெறியைக் கண்டிக்கவோ, தலித் மக்களுக்கு இழைக்கப்ப்டட கொடுமைகளுக்காக வருத்தம் தெரிவிக்கவோ முன்வராத பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் இராமதாசு அவர்கள் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல், தருமபுரியில் வன்னியர்களால் கோபத்தில் எரிக்கப்பட்டது 4 வீடுகள்தான் என்றும், எஞ்சிய வீடுகள் எரிப்புக்கு தலித்துகளே காரணம் என்றும் 21ஆம் நூற்றாண்டிலேயே யாரும் துணியாத பொய்யைச் சொல்லி உலகையே முட்டாளாக்கப் பார்க்கிறார். விழுந்து கிடக்கும் தன் கட்சியின் செல்வாக்கை நிமிர்த்திக் கொள்ளவும், தன்மீதும், தன் மகன் மீதும் பாய்ந்துள்ள சி.பி.ஐ விசாரணைக்கு தன் சாதிக்காரர்களை அணிதிரட்டவும், தலித் இளைஞர்களை சமூக விரோதிகளாக, காமுகர்களாக சித்தரித்து, இயல்பான காதல் மணங்களை நாடகத் திருமணங்கள் என்று நையாண்டி பேசி வருகிறார்.

ramdoss_374திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அவர் பேசி வந்த மர்ம முடிச்சு அவிழ்ந்து அவரது சாதிவெறி துர்நாற்றம் வீசுகிறது. சாதிமறுப்புத் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரித்து, அத்தகைய தம்பதிகளுக்கு தங்கப்பதக்கமும், ரொக்கப்பரிசும் அளித்த திராவிட இயக்கத்தை இவர் ஏன் வெறுத்துப் பேசுகிறார் என்பது இப்போது அம்பலத்துக்கு வந்துவிட்டது. சாதிக்கட்சிகளுடன் தான் கூட்டணி என்று பேசி, தமிழகத்தை 14ஆம் நூற்றாண்டுக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கும், இராமதாசு, காடுவெட்டி குரு போன்றவர்களின் செயல்பாடுகளை முன்னேறிச் செல்லும் வரலாற்றின் இயக்கவியல் சமூக வளர்ச்சி விதி அனுமதிக்காது என்பதை அவர்களுக்கு நாங்கள் சுட்டிக் காட்டுகிறோம்.

நத்தம் காலனி இளவரசன், செல்லன் கொட்டாய் திவ்யா காதல் மணத்தை வயதைக் காரணம் காட்டி தனது சாதியினரின் வெறியாட்டத்தை நியாயப்படுத்துகிறார். மைனர் பையன் என்பதற்காக கவலைப்படவேண்டியவர்கள் இளவரசனின் பெற்றோரே தவிர இராமதாசோ, வன்னியர்களோ அல்ல. அப்படியே மைனர் இளைஞர் தலித் இளவரசன் என்பது உண்மையானால் அதற்காக காவல்துறை, நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்து பரிகாரம் தேடவேண்டுமே தவிர, சாதி வெறியை விசிறிவிட்டு 300 தலித்துகளின் வீடுகளை கொள்ளையடிப்பதும், பெட்ரோல் குண்டுகள் மூலம் கொளுத்துவதும் என்ன விதத்தில் நியாயம்? இதே முறையை தலித்துகளும் கையில் எடுத்தால் தமிழகம் தாங்குமா?

ஊடகங்களும், பத்திரிகைகளும் நடந்த உண்மைச் சம்பவங்களை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த இந்த காலத்திலேயே இராமதாசால் எப்படி வாய் கூசாமல் பொய் பேச முடிகிறது? இவர் இதுகாலம் வரை பேசி வந்த நாணயம், நேர்மையின் இலட்சணம் இதுதானா?

தமிழக அரசுக்கு!

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட தலித்துகளுக்கு 2 லட்சம் ரூபாய்! தருமபுரியில் எரிக்கப்பட்ட தலித் குடும்பங்களுக்கு 50000 ரூபாய், ஆனால் தேவர் குரு பூஜையின் போது சொல்லப்பட்டவர்களுக்கு 5 லட்ச ரூபாய். தமிழகத்தில் நடப்பது மனுவாதி ஆட்சியா? அரசியல் சட்டத்தின்படியான சனநாயக ஆட்சியா?

ஜான்பாண்டியன் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த 500 பேரைக் கலைந்து போகச் செய்ய சாத்வீக வழிகளைக் கையாளாமல், துப்பாக்கிச் சூடு நடத்தி 6 தலித் உயிர்களை 11.09.2011-ல் பறித்த ஜெயலலிதா அரசு தான், 07.11.2012-ல் 2000 பேர் திரண்டு மூன்று குழுக்களாகப் பிரிந்து சாதிவெறியாட்டத்தில் ஈடுபட்ட வன்னிய சாதி வெறிக்கு எதிராக, தனது காவல்துறையின் கைகளில் இருந்த துப்பாக்கியைக் கொண்டு வானத்தை நோக்கிக் கூட சுடவில்லை, கண்ணீர் புகை குண்டுகளையும் கையாளவில்லை, தடியடி நடத்தவில்லை. இதைப்போல் தலித்துகள் 2000 பேர் திரண்டால் தமிழக போலீஸ் வாய்பொத்திக் கைகட்டி வேடிக்கை பார்க்குமா?

அரசு / போலீஸின் சாதி வர்க்கப் பாகுபாடுகளை தலித்துகளே! உணர்ந்து கொள்ளுங்கள். தலித்துகளுக்கு எதிரான இந்த அரசை எதிர்த்துப் போராட சனநாயக சக்திகளே அணிதிரளுங்கள்!

தோழர் திருமாவளவன் அவர்களுக்கு!

தருமபுரியில் தலித்துகளுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமைக்கு எதிராக ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ள தோழர் திருமா அவர்களே! எப்போது! எங்கே போராட்டக் களம்? நாள் நேரம், குறித்து சட்ட மீறல் போராட்டத்திற்குத் தலைமையேற்க, தாங்கள் தயாரா? பெரியாரிச, மார்க்சீய, லெனினிச, தமிழ்த் தேசியவாதிகளே என்ன செய்ய போகிறீர்கள் என தருமபுரியில் முழங்கியிருக்கிறீர்களே! நீங்கள் எந்த இசத்துக்கு சொந்தக்காரர் என்று அறிவித்துக் கொள்ள முடியுமா? உங்கள் இசம் சோனிய இசமா, கருணாநிதி இசமா இல்லை இரண்டும் கலந்த கலவையா?

thiirumavalavan_279தமிழ்த் தேசியவாதிகளே என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதன் மூலம், தாங்கள் இதுகாறும் பேசி வந்த தமிழ்த் தேசியம் நாடகமா? உண்மையா?

இந்திய / தமிழக ஆளும் வர்க்கத்துக்கும், சாதி வெறிக்கும், முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிராகப் பேச வேண்டிய நீங்கள் மார்க்சீய, லெனினிய, பெரியாரிச, தமிழ்த் தேசியவாதிகளே என்ன செய்ய போகிறீர்கள் என்று பிரச்சினையை திசை திருப்புவது ஏன்? எதற்காக? இவர்களிடமெல்லாம் இருக்கும் மக்கள் சக்தியை விட பல மடங்கு கூடுதலாக மக்கள் சக்தியைக் கொண்டுள்ள, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தருமபுரிக் கொடுமைக்கு எதிராக எந்த இசத்தின் வழி நின்று போராட வைக்கப் போகிறீர்கள்?

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை போலீசார் தலித்துகளுக்கு ஆதரவாக பயன்படுத்தியதைவிட, தங்கள் சுயலாபத்துக்கே பயன்படுத்துகிறார்கள் என தமிழகப் போலீசைக் குற்றம் சாட்டும் தோழர் திருமா அவர்களே, போலீசுக்கு உடந்தையாக இருந்து தமிழகத்தின் பல காவல்நிலையங்களில், வன்கொடுமைத் தடுப்புச் சட்ட புகார் மூலம் பெரும் தொகை பேரம் பேசி காவல்துறைக்கு மறைமுக ஊதியம் பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் தங்கள் கட்சியின் அணிகளின் / தொண்டர்களின் செயலுக்காக நீங்கள் என்றாவது வருத்தப்பட்டதுண்டா? தாங்கள் அரசமைப்புக்கு உள்ளே இருந்து கொண்டு, அதற்கு வெளியே இருப்பவர்களுக்கு அழைப்புவிடும் போக்கைக் கைவிட்டு, வீதிக்கு வாருங்கள்!

கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக காலமெல்லாம் முழங்கி ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு சேவை செய்ய நீங்கள் இப்போது மார்க்கீசிய லெனினியவாதிகளுக்கு அழைப்பு விடுப்பது ஏன்? மார்க்சீய லெனினியவாதிகளுக்கு அறிவுரை சொல்லவோ, அழைப்பு விடுக்கவோ உங்களுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்பதை தங்களை தொடக்கம் முதல் அறிந்த தோழன் என்ற முறையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

- அரங்க குணசேகரன், தமிழக பொதுச் செயலாளர், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It