"11 முட்டாள்கள் விளையாடுவதை 11,000 முட்டாள்கள் கைதட்டி இரசிக்கும் விளையாட்டு" – என மட்டைப்பந்து (கிரிக்கெட்) விளையாட்டு பற்றி, இங்கிலாந்து நாடு உலகுக்குத் தந்த மாபெரும் இலக்கியமேதை ஜார்ஜ் பெர்னாட்சா சொன்னார்!

ipl_390ஒரு வேளை, அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால், தான் சொன்னதை மாற்றி "11 கோடீஸ்வரர்கள் ஆடுவதை பல கோடிக் கோமாளிகள் பார்த்து ஏமாறும் விளையாட்டு" என்று தான் மட்டைப் பந்து விளையாட்டை வர்ணித்திருப்பார். ஏனெனில், உலக அரங்கில் மட்டைப்பந்து விளையாட்டின் நிலை அவ்வளவு மோசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது திரைமறைவுச் சூதாட்டமாகிக் கொண்டிருக்கிறது.

 இன்று மட்டைப்பந்து விளையாட்டு, "விளையாட்டு" என்ற தளத்தைக் கடந்து, சூதாட்ட வணிகம் என்ற சுழலில் சிக்கி நிற்கிறது!

"மட்டைப்பந்து விளையாட்டு" என்பது இந்தியத் துணைக்கண்டத்துக்குச் சொந்தமான பாரம்பரிய விளையாட்டு அல்ல; வெள்ளை ஏகாதிபத்தியம் எந்தெந்த நாடுகளை எல்லாம் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, ஆட்சி அதிகாரம் செலுத்தியதோ, அந்த நாடுகளில் மட்டுமே விளையாடப்படும் விளையாட்டு!

உலகின் வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் என்ற நிலையில் உள்ள அமெரிக்கா, பிரான்ஸ், இரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற பல நாடுகளில் மட்டைப்பந்து விளையாட்டு விளையாடப்படுவது இல்லை. பூமிப்பந்தில் விரவிக் கிடக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகளில் 12 நாடுகளில் மட்டும்தான் மட்டைப்பந்து விளையாடப்படுகிறது.

மட்டைப்பந்து விளையாட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து நாட்டில் கூட இல்லாத அளவுக்கு, இந்தியாவில் அதன் "புகழ்"(கவர்ச்சி) கொடி கட்டிப் பறக்கிறது! இதன் மூலம் "எஜமானரின் தேர்ந்த அடிமைகள் நாங்கள்" என்பதை உலகுக்குக் காட்டி வருகிறது இந்தியா!!

இந்தியாவிலும் கூட 1983 – ஆம் ஆண்டு இந்தியா மட்டைப்பந்து உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு வரை, மட்டைப்பந்து விளையாட்டாக இருந்தது. அதற்குப் பிறகு மட்டைப்பந்து விளையாட்டு, சூதாட்டக் களமாகவும், ஊழலின் உறைவிடமாகவும், பணம் கொழிக்கும் சந்தையாகவும் மாறத் தொடங்கியது.

இந்நிலையில், ஐந்து நாள் போட்டி (டெஸ்ட்), ஒரு நாள் போட்டியைத் தொடர்ந்து 20 "ஓவர்" மட்டைப்பந்து போட்டியை அறிமுகப்படுத்தியது பன்னாட்டு மட்டைப்பந்து வாரியம்.

இந்த 20 "ஓவர்" மட்டைப்பந்து ஜுரம் (காய்ச்சல்) இந்தியாவிற்குள்ளும் தொற்றிக் கொள்ள, அதையே வணிகமயமாக்க முற்பட்டது இந்திய மட்டைப்பந்து வாரியம். அச்சூழலில் இந்திய மட்டைப்பந்து வாரியத்துடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக வெளியேறிய முன்னாள் நட்சத்திர மட்டைப்பந்து வீரர் கபில்தேவ், ஜீ தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர் சுபாஷ் சந்திராவோடு இணைந்து "இந்தியன் கிரிக்கெட் லீக்" என்றொரு அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் வாயிலாக "டிவென்டி – 20" என்கிற 20 "ஓவர்" மட்டைப்பந்து போட்டிகளை நடத்தினார்கள்.

"இந்தியன் கிரிக்கெட் லீக்" மூலமாக வரும் வருமானத்தை அறிந்தும், கபில்தேவ் கட்டமைத்த "இந்கியன் கிரிக்கெட் லீக்"கை ஓரங்கட்ட வேண்டும் என்கிற நோக்கோடு, பன்னாட்டு மட்டைப்பந்து வாரியத்தின் பேராதரவோடு "இந்தியன் பிரிமியர் லீக்" என்றவொரு அமைப்பை ஏற்படுத்தியது இந்திய மட்டைப்பந்து வாரியம்.

"இந்தியன் பிரிமியர் லீக்" நடத்தும் போட்டிகளில் விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்த விதம் தான் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது!

பணப் பெட்டியோடு வந்த அணி உரிமையாளர்களான முகேஷ் அம்பானி, விஜய் மல்லையா, நடிகை பிரித்தி ஜிந்தா, நடிகர் ஷாருக்கான் போன்ற பல பண முதலைகள், -முன்னொரு காலத்தில் ரோமானிய அடிமைகள் ஏலத்தில் எடுக்கப்பட்டது போல-வீரர்களை ஏலம் எடுத்து, விலை கொடுத்து வாங்கிச் சென்றார்கள். முதல் ஐ.பி.எல். தொடருக்கான வீரர்கள் ஏலமானது கடந்த 2008-ஏப்-18 அன்று நடைபெற்றது.

கடந்த ஆண்டுகளில் நடந்தேறிய 4 – ஐ.பி.எல். தொடரின் மூலம் பல்லாயிரம் கோடியை வாரிச்சுருட்டியுள்ளது இந்திய மட்டைப்பந்து வாரியம்!

கடந்த ஆண்டு ஐ.பி.எல். அணி வீரர்கள் ஏலம் எடுப்பு தொடர்பான விவகாரத்தில், நடந்த ஊழலில் சிக்கி, மத்திய அமைச்சர் சசிதரூர் தனது பதவியை இழந்து நின்றது, நம் அனைவருக்கும நினைவிருக்கலாம்.

இந்த ஆண்டு தொடங்கிய 5-வது ஐ.பி.எல். போட்டிக்குத் தொடக்க‌த்தில் இருந்து மக்களின் எதிர்ப்புகள் வலுத்தன.

"03-04-12 அன்று நடந்த தொடக்க விழாவின்போது உலக நாயகிகளும், பாலிவுட் கதாநாயகர்களும், மட்டைப்பந்து வீரர்களும் அருவெறுக்கத்தக்க வகையிலே ஆபாசமாக நடனமாடினார்கள். அதுவும் காவல்துறையின் கண்காணிப்பிலேயே நடந்தது. ஆபாசமாக நடனமாடி, கலாச்சாரக் சீரழிவை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மதுரை, காந்திநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், "ஆபாச நடனமாடிய நடிகை – நடிகர்கள மீத நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று போலிஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டார்.(தினந்தந்தி 21.04.2012)

ஆபாச நடனம் தொடக்க விழாவின் போது மட்டும் அரங்கேறவில்லை. ஐ.பி.எல். தொடர் முழுமைக்கும் தான் அரங்கேறிக் கொண்டிருக்கிறது ! மேலும் "கனம்" நீதிபதி அவர்கள் மங்கையர்களை அவ்வாறு நடனம் ஆடச்செய்த ஐ.பி.எல்.நிர்வாகத்தைக் கண்டிக்காததன் மர்மம் தெரியவில்லை!

முன்பெல்லாம் பெருநகரங்களின் நட்சத்திர விடுதிகளில் நடக்கும் மங்கையர்களின் அரை-குறை ஆடை ஆபாச நடனங்கள், இன்று அப்பட்டமாக ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேறி வருகின்றன! அதற்கு ஐ.பி.எல். நிர்வாகம் தீனி போட்டு வருகிறது.

மதுரை மாவட்டம், கீழப்புதூரைச் சேர்ந்த வசந்தக்குமார் என்பவர், தங்கள் ஊர்த் திருவிழாவின் போது, ஆடல் - பாடல் நிகழ்வு நடத்த அனுமதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடர்ந்து வழக்கில், "ஆடல் - பாடல் நிகழ்ச்சிகளால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும். எனவே ஆடல் - பாடல் நிகழ்வை இரவு 9.00 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும்…" என்று மேதகு.நீதிபதி அவர்கள் உத்தரவிட்டார்.(தினத்தந்தி 4-4-2012)

ஓர் ஊரில், ஓர் இரவில் நடக்கும் ஆடல் பாடல் நிகழ்வால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றால் இந்தியா முழுக்க, அதுவும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐ.பி.எல். நிர்வாகம் 70-க்கும் மேற்பட்ட போட்டிகளை 2 மாதங்கள் தொடர்ந்து நடத்துவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாதா?

கடந்த காலங்களில் நடத்தப்பட்ட ஐ.பி.எல் தொடர்களின் போது மாணவர்களின் எதிர்காலம் கருதி தொடரைத் தள்ளி வைக்கக் கோரிய மனுக்களின் மீது நீதிபதிகள் உரிய தீர்ப்பினை வழங்காதது ஏன்?

பணமுதலைகள் நடத்தும் ஐ.பி.எல் போட்டிக்கு ஒரு தீர்ப்பு, சாதாரண ஏழை – எளிய மக்கள் நடத்தும் ஆடல் - பாடல் நிகழ்வுக்கு வேறு தீர்ப்பா?

இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலுமுள்ள நகர – கிராமத் தெருக்களில் பார்த்தாலும் அங்கே பத்தப் பதினைந்து இளைஞர்கள் மட்டையும் பந்துமாக அங்குமிங்கும் அலைந்து திரிவதைக் காணமுடியும். அது அக்கிரகாரங்களாக இருந்தாலும் சரி, அடித்தட்டு மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களாக இருந்தாலும் சரி.

மட்டையும் பந்துமாய் மண்டையைப் பிளக்கும் வெயிலில் மூச்சு முட்டப் பயிற்சி எடுத்து, உடலை வருத்திக் கொண்டாலும்… 6 ஓட்டங்களை அள்ளிக் குவித்தாலும்… உள்ளுர்(சொந்த ஊர்) அணியில் தான் விளையாட முடியுமே தவிர இந்திய மட்டைப்பந்து "இசட்" அணியில் கூட இடம் பிடிக்க முடியாது.

ஒருவன் இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பிடிக்க அவன் பிறப்பால் பார்ப்பன சாதியில் பிறந்தவனாக இருக்க வேண்டும். இது இந்திய மட்டைப்பந்து வாரியம் விதித்துள்ள எழுதப்படாத விதி!

 "நாங்களெல்லாம் ஆண்ட பரம்பரையினர்" என்று சொல்லிக் கொண்டு சாதிப் பெருமை பேசித் திரியும் எந்தச் சாதியினராக இருந்தாலும், வேட்டியை மடித்துக்கட்டி வீதியிலே இறங்கி வெற்றுச்கூச்சல் போடலாமே தவிர இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பிடிக்க முடியாது!

ipl_girls_370 ஏனெனில் இந்திய மட்டைப்பந்து வாரியம் பார்ப்பனக் குள்ளநரிகளின் கொள்ளைக் கூடாரம்!

 மற்றவர்களுக்குக் கிடைக்கும் "அரிய" வாய்ப்பெல்லாம்-அவர்கள் ஆடுகளத்தில் இறங்கி அடித்தாலும், ஆட்டமிழந்தாலும் அதனைப் பார்த்து ஆரவாரமிட்டு அடங்கிக் கிடப்பதுதான்!

 தற்போதைய இந்திய மட்டைப்பந்து அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் அனைவரும் பார்ப்பனர்களே! விதிவிலக்காக அவ்வப்போது ஓரிரு இசுலாமிய வீரர்களை உள்நோக்கத்துடன் சேர்த்துக் கொண்டு "மதசார்பற்ற நாடு" என்கிற தனது போலித்தனத்தை மறைக்க நாடகமாடுகிறது இந்தியா!

 இந்தியத் துணைக்கணடம் முழுக்கப் பரவி வாழ்கிற கோடிக்கணக்கான இசுலாமியர்களில் இருவர் மட்டும் தான், இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பிடிக்கத் திறமை பெற்றவர்களா? பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட அந்தத் திறமை கிடையாதா?

 இந்திய மக்கள் தொகையில் 3 விழுக்காட்டுக்குக் குறைவாக உள்ள பார்ப்பனர்கள் ஆண்டாண்டு காலமாய் நம்மை ஏய்த்துப் பிழைத்தவர்கள். இன்றும் அவர்கள் நம்மை "வேடிக்கை பார்க்கும் விட்டில் பூச்சிகளாக" ஆக்கி வைத்திருக்கிறார்கள். நாமும் அவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கி, வெளிவர முடியாமல் விழி பிதுங்கிக் கிடக்கிறோம்.

 பொதுவாக, மட்டைப்பந்து விளையாட்டு என்பது மற்ற விளையாட்டுகளைப் போல், அதிக உடல் உழைப்பைச் செலவிடத் தேவையில்லாத, உடையில் தூசுபடாமல் விளையாடும் "ஜென்டில்மேன் கேம்". ஆனால் அதில் கிடைக்கும் "வருமானமோ" அளவிடற்கரியது!
 
மேலும், இது ஏனைய விளையாட்டைப் போல, மற்ற வீரர்களோடு தொட்டுக் கொள்வதற்கோ முட்டி மோதிக் கொள்வதற்கோ, எவ்வித வாய்ப்பும், சூழலும் இல்லாத விளையாட்டு! எனவேதான் பார்ப்பனர்கள் தமக்கு உகந்த மட்டைப்பந்து விளையாட்டைத் தேர்வு செய்து அந்த விளையாட்டையே ஆக்கிரமித்து நிற்கிறார்கள். எனவேதான் பார்ப்பனமயமாகிப் போன அரசும் மட்டைப்பந்து விளையாட்டுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், பொருளாதார ஆதரவையும் மற்ற விளையாட்டுக்குக் கொடுப்பதில்லை!

 அதன் விளைவு, இன்று கால்பந்து, ஹாக்கி, பேட்மிட்டன், வாலிபால், வில்வத்தை, கேரம், தடகளம் போன்ற விளையாட்டில், உலக அரங்கில் இந்தியா தொடர்ந்து பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

 சர்வதேசக் கால்பந்து சம்மேளனம் சமீபத்தில் உலக நாடுகளில் கால்பந்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் 117 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வளத்தைக் கொண்ட இந்தியா, 165-வது இடத்தில் உள்ளது.! இந்திய கால்பந்து அணியின் தொடர் சரிவைத் தடுக்க இந்திய அரசோ இந்தியக் கால்பந்துக் கழகமோ சீரிய நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை.

 ஒரு மட்டைப்பந்து வீரரின் பெயர் இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பெற்று விட்டால் போதும்-அவருக்குப் பணமழை பொழியும்! இந்திய மட்டைப்பந்து அணியில் இடம் பிடித்த சில நாட்களிலேயே அவர் இந்திய பணக்காரர் வரிசையிலும் இடம்பிடித்து விடுவார்!

 இந்திய மட்டைப்பந்து வீரர்களின் நிலை இப்படி இருக்க… கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா – தென்னாப்ரிக்கா மட்டைப்பந்து அணியினர் விளையாட இருந்த டெல்லி மைதானத்தின் பார்வையாளர் இருக்கையை, இந்தியக் கால்பந்து அணியின் முன்னணி வீரர்கள் சொற்ப வருமானத்திற்காக துடைத்து, சுத்தம் செய்த அவலத்தை நாளேடுகளின் மூலமாக அறிந்தோம்.

 ஆக, மட்டைப்பந்து வீரர்கள் அனைவரும் பணத்தில் கொழுக்க… கால்பந்து வீரர்கள் ஐந்துக்கும், பத்துக்கும் ஆளாயப் பறக்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

 கடந்த 2007 – ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணியை, மத்திய – மாநில அரசுகள் கண்டுகொள்ளவேயில்லை! இதனால், சீற்றமடைந்த ஹாக்கி வீரர்கள், "நாங்கள் என்ன அனாதைகளா? ஏன் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மை?" – என்று கோபக்கனலோடு உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கினார்கள். இருந்தும் பயனில்லை! ஹாக்கி வீரர்களின் கோரிக்கை முழக்கங்கள் இந்தியா ஆட்சியாளர்களின் செவிகளுக்கு விழவேயில்லை!

 ஆனால், கடந்த 2011 - இல் இந்திய அணி மட்டைப்பந்து உலகக் கோப்பையை வென்றபோது, இந்திய அரசு பரிசுத்தொகையை அடுக்கடுக்காய் அறிவித்ததைப் பார்த்தோம்…

 ஆக, உலக கோப்பையை வென்ற இந்திய மடடைப்பந்து அணிக்கு ஒரு நீதி; ஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஹாக்கி அணிக்கு வேறு ஒரு நீதியா?

இந்திய ஹாக்கி வீரர்களை மட்டுமில்லை, உலகப் புகழ்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வீரர் - வீராங்கனைகளைக் கூட உரிய மரியாதையும், ஊக்கமும் அளிக்காமல் புறக்கணித்து, அவர்களின் விளையாட்டுத் திறனைக் கண்டுகொள்ள மறுத்து வருகிறது இந்திய அரசு!

மட்டைப்பந்து விளையாட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து நாட்டில் கூட, கால்பந்து உள்ளிட்ட ஏனைய விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படுகின்றன. அதன் காரணமாகவே இங்கிலாந்து கால்பந்து அணி உலக அரங்கில் சிறந்த அணியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

 இன்றைய நிலையில் இந்திய அரசும், ஊடகங்களும் கைகோர்த்துக் கொண்டு, இளைஞர்களிடையே மட்டைப்பந்து மோகத்தை திணித்து வருகின்றன! எனவே தான், இன்றை இளைஞர்கள் செய்தித்தாளை எடுத்தவுடன், மட்டைப்பந்து தொடர்பான செய்தி இடம் பெறும் கடைசிப் பக்கத்தை மட்டும் படித்து விட்டு உலக நடப்பையே அறிந்து விட்ட பெருமிதத்தோடு நடையைக் கட்டுகிறார்கள்!

 தொலைக்காட்சிப் பெட்டியைத் தொட்டால்… மட்டைப்பந்து ஒளிபரப்பப்படும் "சேனல்களே" அவர்களின் கண்களுக்குத் தென்படுகிறது.

 தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.பி.எல். தொடரில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 போட்டிகளை நடத்துவதால் அந்திசாயும் நேரம் முதல் நள்ளிரவு வரை, தமிழர்களின் இல்லங்கள் "ஐ.பி.எல்." மழையால் நனைகின்றன! தமிழகத்து இளைஞர்கள், எவனோ அடிப்பதைப் பார்த்து அகமகிழ்ந்து போகிறார்கள்!

 எதிர்கால தமிழ்ச் சமூகத்தை நன்முறையில் கட்டமைக்க வேண்டிய இளைஞர்களே! - மட்டைப்பந்து விளையாட்டு என்பது, உங்கள் மண்ணின் விளையாட்டைக் கொல்ல வந்த நச்சு. போலியான இந்திய தேசியத்தைக் கட்டிக் காப்பதிலும் மட்டைப்பந்து விளையாட்டிற்கு பெரும் பங்கு உண்டு!

 இந்தியா - இந்துத்துவக் கட்டமைப்பைப் பாதுகாக்கும் இந்த மட்டைப்பந்து விளையாட்டு, தமிழர்களுக்கும், உழைக்கும் ஏனைய மொழி - இன மக்களுக்கும் எதிரானது. நம் மண்ணைக் காவு கேட்கும், உலகமயத்தை உயர்த்திப் பிடிக்கும், மட்டைப்பந்து விளையாட்டைத் தவிர்த்து, மண்ணின் விளையாட்டுகளைத் தூக்கிப் பிடிப்போம்!

 பணமுதலைகள் நர்த்தனமாடும் - ஊழலின் ஊற்றுக் கண்ணாய் விளங்கும் - அடிமை விளையாட்டான மட்டைப் பந்தைப் புறக்கணிப்போம்!

 போட்டியின் வெற்றி – தோல்விகளைப் பற்றி, விளையாடும் வீரர்களே கவலைப்படாத, வீரர்கள் மற்றும் வாரியங்களின் கல்லா நிரப்பும் ஒரே "சேவை"யைச் செய்யும், மட்டைப்பந்து விளையாட்டைப் பார்ப்பதற்கு, உழைத்துச் சேர்த்த பணத்தையும், உன்னதமான பொழுதையும் விரயம் செய்தல் என்பது நம் மடமையைக் காட்டுமேயன்றி வேறொன்றுமில்லை!

- தங்க.செங்கதிர்
மாற்றம் ஆசிரியர் குழு
தியாகி இமானுவேல் பேரவை
தமிழ்நாடு.

Pin It