கூடங்குளத்தில்  நிகழ்ந்துவரும் அணு உலை எதிர்ப்புப் போராட்டங்கள் அறிவியலுக்கு எதிரானதும், பழைய கற்காலத்திற்குப் பாதை சமைப்பதுமான இந்த நிகழ்வுகள் மிகுந்த வருத்தம் தரக் கூடியவை.

அணு உலை எதிர்ப்பு என்று சாதாரணமாகத் தொடங்கிய இந்நிகழ்வு அணு உலையை மூட வேண்டும் என்று மூர்க்கம் கொண்டுள்ளது.

வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிற கூடங்குளம் மக்களை ஆற்றுப்படுத்த வேண்டியவர்கள் முச்சந்தியில் அவர்களை இழுத்துப் பறித்து விட்டிருக்கிறார்கள்.

1988 நவம்பரில் ரஷ்ய அதிபர் மிகையில் கோர்ப்பச்சேவ், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகிய இருவரும் கூடங்குளம் அணு உலைத் திட்டத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் சோவியத் ஒன்றியம் சிதறுண்டு போனதால் இத் திட்டம் சில ஆண்டுகள் தாமதமானது.  அணு உலைக்கும், ஊழியர் குடியிருப்பிற்குமான இடம் என்று ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்ட  போது கூடங்குளம் பகுதி மக்கள் முழு ஆதரவையும் நல்கினர். தொடர்ந்து கட்டம் கட்டமாக மக்களின் ஒத்துழைப்புடன் திட்டப் பணிகள் நடந்தேறி தற்போது அணு உலை முழுமை அடைந்து நிற்கிறது.

kudamkulam_370உலை இயங்குவதற்கும், மின் உற்பத்தி தொடங்குவதற்குமான நாள் குறிக்கப்பட்டு விட்ட நிலையில் திடீரென எதிர்ப்புக் குலுங்கி நிற்கிறது. 1988 முதல் 2011 வரையிலான கால் நூற்றாண்டு காலமாக இந்த உலைக்கு ஆதர வளித்தவர்கள் இப்போது திடீரென எதிர்ப்பது ஏன்? வெண்ணெய் திரளும்போது தாழியை உடைத்தே தீருவேன் என்று முரண்டு பிடிப்பது ஏன்? நேற்று வரை இனித்த அணு உலை இன்று கசப்பது ஏன்?அணு உலை தீயது என்றால் முள்மரம் கொன்று இருக்கலாமே? அதை விடுத்துத் தும்பை விட்டு வாலைப் பிடிப்பது ஏன்?

காலம் கடந்த போராட்டம் கரை சேருமா? குழந்தை வேண்டாம் என்றால் முதலி ரவன்றே ஆணுறையை அணிந்து கொண் டிருக்க வேண்டுமே அல்லாமல் பனிக்குடம் உடையும் நேரத்திலா குழந்தை வேண்டாம் என்று கூச்சலிடுவது? இது பேதமை அல் லவா?

திடீரென முளைத்த இந்த ஆரவாரமான அணு உலை எதிர்ப்பின் பின்னணியை ஆராய்ந்தால் அறிவியலின் வறுமையும், சுய நலத்தின் முழுமையும் மட்டுமே தென்படு கின்றன. அணு உலை  எதிர்ப்பு  என்ற நஞ்சு கூடங்குளம் மக்களின் மூளையில் வலிந்து திணிக்கப்பட்டுள்ளது என்பது புலனாகிறது.

அணு உலை விபத்துக்கள்:

அணு உலைகள் தீண்டத்தகாதவை அல்ல. பாதுகாப்பு அற்றவையோ, உயிருக்கு ஊறு விளைவிப்பவையோ அல்ல. உலகம் முழுவதும் 440 அணு உலைகள் முப்பது நாடுகளில் இயங்கி வருகின்றன. அமெரிக்கா வில் மட்டும் 104 அணு உலைகள் செயல் படுகின்றன.

ஜப்பான் நாடு இந்தியாவைப் போல் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட தல்ல. அது பல்வேறு தீவுகளின் கூட்டம். மொத்தப் பகுதியும் பூகம்ப அச்சுறுத்தலால் சூழப்பட்டுள்ள ஜப்பானில் மட்டும் 51 அணு உலைகள் இயங்கி வருகின்றன.

அமெரிக்கா, ஜப்பானுடன் ஒப்பிடுகை யில் அணு மின் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவு. இந்தியாவில் மொத்த முள்ள அணு மின் நிலையங்களில் இருபது அணு உலைகள் மட்டுமே இயங்கி வருகின் றன. 

சிறிய மட்டும் உடனுக்குடன் சரி செய் யப்பட்டுவிட்ட விபத்துக்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், உலகளாவிய அணு மின் உற்பத்தியின் ஐம்பது ஆண்டுகால வரலாற் றில் இது வரை மூன்று விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன.

அ) அமெரிக்காவில் பென்சில்வேனியா பகுதிக்கு அருகில் உள்ள மூன்று மைல் தீவு(1979 மார்ச்)

ஆ) ரஷ்யாவில் உக்ரைன் பகுதியில் உள்ள செர்னோபைல் (1986 ஏப்ரல்)

இ) அண்மையில் ஜப்பானில் ஃபுருஷிமா (2011 மார்ச்)

ஆகிய மூன்று இடங்களில் நிகழ்ந்த விபத்துகளே உலகின் கவனத்தை ஈர்த்தவை.

இவற்றில் ‘மூன்று மைல் தீவு’ விபத்தானது அணு மின் உற்பத்தியின் குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது. அணுமின் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியின் போக்கில் இத்தகைய குறைகள் எளிதில் களையப்பட்டுவிட்டன. செர்னோபைல் விபத்தின் படிப்பினைகளால் புடம் போடப்பட்ட புதிய தொழில் நுட்பம் விபத்துக்கள் நேரா வண்ணம் உருவாக்கப் பட்டுள்ளது. ஃபுரூஷிமாவில் அணு உலை எதுவும் வெடிக்கவில்லை என்பதும் பூகம்பம் மற்றும் சுனாமியின் இரட்டைத்தாக்குதலின் விளைவாக அணு உலை வெள்ளத்தில் மூழ்கிய தால்தான் விபத்து நிகழ்ந்தது என்பதும் கருதத் தக்கது.

அணு உலைத் தொழில் நுட்பம் தொடர்ந்து மாறி வருகிறது. புதுப்பிக்கப் பட்டு வருகிறது. முதல் தலைமுறையில் தொடங்கி இன்று மூன்றாம் தலை முறையை எட்டி, நான் காம் தலை முறையை நோக்கிப் பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் திருத்தங்களின் விளைவாக மென் மேலும் அதிகரித்து வரும் பாதுகாப்புக் கூறுக ளுடன் அணு உலைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அணு உலைகளில் நிகழும் சிறிய விபத்து கள் கூட ஊடகங்களால் ஊதிப் பெரிது படுத்தப்பட்டு வருகின்றன. அனல் மின் உற்பத்தி சார்ந்த நிலக்கரிச் சுரங்கங்களில் விபத்தும், உயிரிழப்பும் இன்று வரை தொடர் கதையாக இருப்பினும் ஊடகங்கள் இவற் றைப் பொருட்படுத்துவது இல்லை. 

anai_370இரண்டே கால் இலட்சம் பேர் உயிரிழந்த ஒரு பயங்கர விபத்து பற்றி நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மின் உற்பத்தி வரலாற்றில் களங்கமாக நிலைத்துள்ள இந்த விபத்து எந்த ஒரு அணு உலையும் வெடித்ததால் ஏற்பட்ட தல்ல.  1975-ல் சீனாவில் ரு (Ru) என்ற ஆற்றில் கட்டப்பட்ட பேங்கியோவ் அணை உடைந்து விட்டது.  நீர் மின் உற்பத்திக்காக நிறுவப்பட்ட இந்த அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் இரண்டு இலட்சத்து முப்பத்தோராயிரம் பேர் உயிரிழந் தனர்.  ஒரு கோடிப்பேர் வீடிழந்தனர். மனித குல வரலாற்றின் துயரம் மிக்க இந்தப் பேரழிவுக்குப் பின்னரும்,  இனி நீர் மின்சாரமே வேண்டாம் என்று யாரும் முடிவு செய்துவிட வில்லை.

வியக்கத்தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள்:

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் ரூ.13171 கோடி செலவிலான, ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு உலைகள் இயங்கு வதற்கு ஆயத்தமாக உள்ளன.

கூடங்குளம் உலைகள் VVER எனப் படும் ரஷ்யத் தொழில் நுட்பத்தால் ஆனவை. VVER என்ற ரஷ்ய மொழியின் எழுத்துக்கள் Water Water Energy Reactor என்று பொருள்படும். உலகெங்கும் பல்வேறு நாடுகளில் VVER உலைகள் இயங்கி வருகின்றன. உலகளாவிய அணு உலைத் தொழில் நுட்பத்தில் இதுதான் ஆக உயர்ந்தது. உச்சகட்டப் பாதுகாப்புடன் கூடியது.  அமெரிக்க அணு உலைகள், கனடாவின் காண்டு உலைகள், ஐரோப்பிய பாணியில் அமைந்த பிரெஞ்சு உலைகள் ஆகிய இவற்றை எல்லாம் விட ரஷ்யாவின் VVER உலைகள் மேம்பட்ட பாதுகாப்புடன் கூடியவை என்பது உலகறிந்த உண்மை.

கூடங்குளத்தில் உள்ள மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த VVER உலைகள் PWR (Pressurised Water Reactor) எனப்படும் அழுத்தமுறு இயல்நீர் உலைகள் ஆகும். இதன் எரிபொருள் சிறிதே செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஆகும். மட்டுப்படுத்தி (Moderator) ஆகவும், குளிர்விப்பி (Coolant) ஆகவும் சாதாரணத் தண்ணீரே செயல்படுகிறது. இந்த உலையில் கனநீர் (Heavy Water) பயன்படுத்தப் படவில்லை.

ஏதேனும் விபத்து நேரும் சமயத்தில், அணு உலைகள் தானியங்கி முறையில் மூடிக்கொள்ளும்.  இதற்காக,

(அ) எதிர்மறை வெற்றிட குணகம் (Negative void Coefficient)

(ஆ) எதிர்மறை ஆற்றல் குணகம் (Negative Power Coefficient)

ஆகிய இரு பாதுகாப்பு ஏற்பாடுகள் இவற்றில் உள்ளன. எனவே உலையைத் தாண்டி கதிர்வீச்சு வெளிப்பாடு காற்று மண்டலத்தில் கலப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை.

எரிபொருள் உள்ள அணு உலையின் மையப்பகுதி பேழை போன்ற ஒரு அமைப்புக் குள் இருத்தப்படுகிறது. தேங்காய்க்குள் இளநீர் இருப்பது போல, பலாப்பழத்தில்  கனத்த முள் தோலுக்கு அடியில் சுளைகள் இருப்பது போல, யுரேனிய எரிபொருள் உலைக்குள் ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. எந்த நிலையிலும் கதிர்விச்சு உலையைத் தாண்டி வெளியேறி விடக்கூடாது என்பதற் காகவே இந்த ஏற்பாடு. மேலும் ஒரு பாதுகாப் புக் கவசமாக, மேற்குறித்த ஒட்டு மொத்த அமைப்பும் கனத்த கான்கிரீட் சுவர்களால் ஆன அரணால் சூழப்பட்டு உள்ளது. இருபது டன் எடையுடன் ஒரு ஜெட் விமானம் அதிவேகத்தில் வந்து மோதினாலும் இந்த கான்கிரீட் சுவரில் சிராய்ப்பு கூட ஏற்படாது.

ஒரு வேளை ஹைட்ரஜன் தீப்பற்றி விடலாம் என்பதற்காக அவ்வாறு நேரும்போது அது தண்ணீராக மாற்றப்பட்டு விடும்.  இதற் காக ஹைட்ரஜன் சேர்ப்பான்கள் (Hydrogen Recombiners) அணு உலைக்குள் அமைக்கப் பட்டுள்ளன.

மேலும் நெருக்கடியான தருணங்களில் உலைக்குள் வெப்பம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகரிக்கும்போது, யாரும் இயக்க வேண்டிய அவசியமே இல்லாமல் தானாகவே இயங்கும் ‘மிதமான வெப்ப நீக்க ஒழுங்கு’ (Passive Heat Removal System) என்ற அமைப்பு உலையைக் குளிர்வித்து வெப்பத் தைத் தணித்துவிடும்.

அணு உலையும், அதைச் சார்ந்த கட்டுமானங்களும் கடல் மட்டத்திற்கு மேல் 25 அடி உயரத்தில்தான் கட்டப் பட்டுள்ளன.   சுனாமி ஏற்பட்டால், அலைகள் தொட முடியாத உயரத்தில்தான் உலை அமைக்கப் பட்டுள்ளது.

அணு உலைகளில் மேற்கொள்ளப்பட்ட பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் இவை ஒரு சில மட்டுமே.  விரிவு கருதி எஞ்சியவற்றை இங்கு குறிப்பிடவில்லை.

இவ்வளவு பாதுகாப்பையும் மீறி, இறை வனே கட்டளையிட்டால் கூட, கூடங்குளம் உலையில் இருந்து கதிர்வீச்சு வெளியேறாது. இதற்குப் பின்னரும் அஞ்சுபவர்கள்  பற்றி நாம் எதுவும் கூறுவதற்கில்லை.

எதிர்ப்பாளர்களின் சாரமற்ற வாதம்:

reactor_370விபத்துக்குள்ளான செர்னோபைல் ரக அணு உலைதான் கூடங்குளத்திலும் உள்ளது என்ற அணு உலை எதிர்ப்பாளர்களின் கூற்று தவறாகும். செர்னோபைல் உலைகள் RBMK வகை. கூடங்குளம் உலைகள் VVER வகை. தொழில் நுட்ப ரீதியாக இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு.

RBMK உலைகளில் மட்டுப்படுத்தியாக கிராபைட் (Graphite)  இருந்தது. உலைகளில் சாதாரணத் தண்ணீர்தான் குளிர்விப்பி ஆகும். மேலும் செர்னோபைல் உலைகளைச் சுற்றி லும் கான்கிரீட் அரண் அமைக்கப்படாததால் கதிரியக்கம் வெளியேறியது. செர்னோபை லின் படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு வவெமைக்கப்பட்ட கூடங்குளம் உலைகளில் கதிரியக்கம் வெளியேறாது.

உலகெங்கிலும் உள்ள நானூறுக்கும் மேற்பட்ட அணு உலைகளுக்கு மிக அருகில் 20 இலட்சம் பொறியாளர்களும், தொழில் நுட்ப வல்லுநர்களும் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.  அணு உலைகளால் எத்தகைய கதிர்வீச்சுஆபத்தும் இல்லை என்பதற்குச் சாட்சியாக இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அணு உலை ஆபத்தானது என்றால் எந்தப் பொறியாளராவது அதில் வேலை செய்ய முன் வருவாரா? அவர்களது படிப்புக்கு ஆபத்தில்லாத பிற துறைகளில் வேலை கிடைக்காதா? அணு உலையால் ஆபத்து என்பது நாம் வலிந்து கற்பிதம் செய்து கொள்வதுதானே தவிர வேறல்ல என்பதற்கு இதற்கு மேலும் என்ன நிரூபணம் வேண்டும்?

மாற்று வழி இல்லை:

அணு உலை வேண்டாம் என்பது மின்சாரமே வேண்டாம் என்று கூறுவதற்குச் சமம். இன்றைய நிலையில் மின்சாரத் தேவை யை நிறைவு செய்ய அணு மின் உற்பத்தி தவிர வேறு வழி இல்லை.

சுரங்கங்களில் நிலக்கரி இருப்பு குறைந்து கொண்டே வருவதால் அனல் மின்சாரத்திற்கு எதிர்காலம் இல்லை. நிலக்கரியை எரிக்க எரிக்கப் பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases)  வெளியேறி ‘கரித்தடம்’ (Carbon Foot Print) புவியின் மீது அழுத்தும். இது புவியைச் சூடு படுத்தி விடும்.  எனவே, அனல் மின் உற்பத்தி மிகவும் தவிர்க்கப்பட வேண்டியது ஆகும்.

இந்தியாவில் இனி எந்த ஆற்றில் குறுக்கேயும் அணை கட்ட முடியாது. மேத்தா பட்கர் விட மாட்டார் என்பதால் மட்டுமில்லை.  பல்லாயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் நிலத்தைக் கையகப்படுத்தி அங்கு வாழும் இலட்சக்கணக்கான மக்களை இடம் பெயரச் செய்தால் மட்டுமே  ஓர் அணையைக் கட்ட இயலும். இன்றைய சூழலில் இது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. 

காற்றாலை மின்சாரம், சூரிய ஆற்றல் மின்சாரம், உயிரிக்கழிவு மின்சாரம் ஆகியவை யானைப் பசிக்குச் சோளப் பொரியாய் அமை யுமே தவிர, நாளும் வளர்ந்துவரும் மின் தேவை யை நிறைவு செய்ய இயலாதவை.

உலகளாவிய அளவில் அணுமின் உற்பத்திக்கு மாற்றாக வேறு எதுவும் கண்டு பிடிக்கப்படவில்லை. அணு மின் உற்பத்தி என்பது குறைகளே அற்ற முழு நிறைவான தொழில் நுட்பம் அல்ல என்றாலும், இன்று இருப்பதில் சிறந்தது இதுதான் என்பதே உண்மை.

மின்தேவை நிறைவுக்கான சிறந்த வழியைக் கண்டறிவது என்பது உலகளாவிய பிரச்னை. இதற்கான தீர்வும் உலகளாவியதே. உலையை மூடு என்னும் உள்ளூர்த் தீர்வுகள் சரிப்படாதவை.

உலகெங்கிலும் உள்ள மக்கள் அணு உலைகளால் ஆசிர்வதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.  கூடங்குளம் மட்டும் சபிக்கப்பட்டு விட மாட்டார்கள்.

அணு உலைகளில் தீர்வு காண வேண்டிய சிக்கல்கள் இன்னமும் நிறைய உள்ளன. இன்றில்லாவிடினும் நாளைய மானுடம் அவற்றுக்குத் தீர்வு காணும். மானுடத்தின் ஒளி சிந்தும் வரலாறு இதை மெய்ப்பிக்கிறது. மானுடம் வெல்லும் என்று முழங்குவோம்! மானுட வீறு பாடுவோம்!

வேறுள குழுவை எல்லாம்
மானுடம் வென்றதம்மா!
                        - கம்பர்

Pin It