“இன்று இருக்கும் நாம் நாளை இருக்கப்போவதில்லை. நாளை நான் இறக்கும்போது என் உடலை மூடும் துணியைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இருக்காது''

– மம்தா, மேற்குவங்க முதல்வர்

இதுதான் உண்மை. இந்த உண்மையை நம் நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ முற்பட்டால். அவர்களும் அவர்களின் வாரிசுகளும் சொத்து சேர்க்கும் எண்ணத்தை கைவிட்டால்!

நம் நாட்டில் லஞ்ச லாவண்யம் தானாக ஒழியும் அரசு இயந்திரம் சீர்படும்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் லஞ்சம் வாங்குகிறார்களா? என்று கண்காணிக்கும் வேலை குறையும், சட்டம் ஒழங்கை நிலைநாட்ட நியமித்த காவலர்களில் பலர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் சமூக விரோதிகளோடு கை கோர்ப்பது குறையும்.

கடவுளின் பெயரால் தெரு முனைகளில் கோயில்களைக் கட்டி போக்குவரத்துக்கு இடையூறு செய்து மக்களை ஏமாற்றிப் பணம் வசூல் செய்து களியாட்டம் போடும் கூட்டம் கட்டுப்படுத்தப்படும்.

வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால்தான் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் கிடைக்கும் என்ற நிலை மாறும்.

சாலை போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ஓட்டுநர் உரிமை வீடு தேடி வரும்.

தொழிற் செய்ய உரிமம் கோருபவர்களிடம் லஞ்சம் கேட்க வணிக வரித்துறையினர் அஞ்சுவர்.

வணிகர்கள் விலை பொருட்களை நியாய விலையில் விற்பர் அரசு பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவாளர் இனி லஞ்சம் கேட்கமாட்டார்.

பிறக்கும்போது மகப்பேறு மருத்துவமனையிலும், நோயுற்ற போது அரசு மருத்துவமனையிலும், இறந்தபிறகு சுடுகாட்டிலும் இனி லஞ்சம் தரத் தேவையில்லை.

ஆம் இனி மக்கள் வறுமையிலிருந்தும், லஞ்ச லாவன்ய கொடுமைகளிலிருந்தும் விடுபடும். அந்நாள் எந்நாளோ?

நூறு குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஆசை!

       முரட் அப்துல் ரகுமான், என்னும் 64 வயது மனிதருக்கு எத்தனைக் குழந்தைகள் தெரியுமா? 88 குழந்தைகள். ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இவர் இதுவரை 15 பெண்களை திருமணம் செய்துள்ளார். அவர்களில் மூன்று மனைவி மட்டும் இன்னும் இவருடன் வாழ்ந்து வருகிறார்கள். மற்றவர்கள் இவரின் பிள்ளையை பெறும் இம்சைக்கு ஈடுகொடுக்க முடியாமல் மணமுறிவு வாங்கிவிட்டனர். இவரின் 88 குழந்தைகளில் 50 ஆண் குழந்தைகளும், 38 பெண் பிள்ளைகளும் அடங்குவர். இவரது மூத்த மகனுக்கு வயது 39 ஆகும். கடைசி குழந்தை கடந்த மாதம் தான் பிறந்தது.

இவர் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு பதினெட்டு வயது இந்தியப் பெண்ணை விரைவில் திருமணம் செய்ய உத்தேசித்து உள்ளாராம். இதற்காக அந்தப் பெண்ணின் தாயிடம் மகர் (பணம்) செலுத்திவிட்டாராம். இந்திய பெண்களை அரபு சேக்குகள் விலைக்கு வாங்குவது நடைமுறையில் இருக்கும் ஒரு செயல்தான்.

இவருக்கு அரபு அரசு மாதம் மாதம் பணம் கொடுத்து வருகிறது. அந்த நாட்டு அரசு இவரின் குடும்பம் வசிக்க ஆறு வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளது. இவர் பிள்ளைகளைப் பராமறிக்க ராணுவம் பென்சன் பணம் கொடுத்து வருகிறது. பிள்ளைகளை மட்டும் பெறுவதையே தொழிலாக செய்து வரும் இவருக்கு அந்த நாட்டு அரசும் ஊக்கம் தருவது ஆச்சர்யம் தருகிறது. ஆனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் இருக்கும் அதே உலகில் இது தேவைதானா!! கடவுள் கண்டு கொள்வாரா?

– மின்வலை (internet)

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.