ஒரு காலத்தில் காவல்நிலைய கற்பழிப்புகள் பிரபலயமான செய்தியாக இருந்தது. எந்த அளவுக்கு பெண்கள் காவல் நிலையத்தைக் கண்டு அஞ்சினார்கள் என்பதை விளக்க பத்திரிகைகளில் வெளியான ஒரு நகைச்சுவைத் துணுக்கு போதும்.

பெண் : அய்யா என் கூட கொஞ்ச தூரம் துணைக்கு வர்றீங்களா?

ஆண் : ஏம்மா... அந்த பக்கம் சுடுகாடு இருக்குன்றதுனால பயமா?

பெண் : இல்லையா! போலீஸ் ஸ்டேஷன் இருக்குய்யா அதான்.

இப்படி எழுதும் அளவுக்கு இரு ந்த காவல்நிலைய நடவடிக்கைகள் இப்போது மீண்டும் திரும்புகிறதோ என அஞ்சும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தனது கணவன் குடிபோதையில் வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் கொடுக்க காவல் நிலையம் வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீஸ்காரரை கண்டித்து பொதுமக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ள னர்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட தலைமை காவலரை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர் உயரதிகாரிகள். மற்றொரு சம்பவம்; சென்னையில் ஒரு திருமண ஊர்வலத்தில் பட்டப்பகலில் லஞ்சம் வாங்கிய காவலரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடுத்து, குடிபோதையில் அளப்பரை செய்யும் ‘குடிமகன்’களை லாடம் கட்டவேண்டிய போலீஸ் ஏட்டு தண்ணிய போட்டுக் கொண்டு அலம்பல் செய்தது மக்களை முகம் சுளிக்க செய்துள்ளது.

திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வரும் சுகுமாறன் என்பவர் பணிக்கு செல்லாமல், அளவுக்கு அதிகமாக மதுபானம் குடித்த நிலையில் தள்ளாடி தள்ளாடி ஒரு வழியாக, திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு பெட்டிக்கடை முன்பு படுத்துக் கொண்டார். அவரை எழுப்பிய சக காவலர்களை போதையில் விரட்டி விரட்டி தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் ஏட்டு சுகுமாறன். சீருடை அணிந்த நிலையில், போலீஸ் ஏட்டு ஒருவர் போதையில் முடங்கி கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் பார்த்து முகம் சுளித்தனர். நடுரோட்டில் போலீஸ் ஏட்டு நடத்திய இந்த ரகளையினால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பின்னர் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சுகுமாறனை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று லாக்கப்பில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட சம்பவங்கள் ஒரு சாம்பிள்தான். காவல்துறை என்றால் ஒரு காலத்தில் இருந்த மிடுக்கும், அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருந்த மரியாதையும் அவர்களில் சிலரின் நடவடிக்கையால் காணமல் போய் நீண்ட நாட்களாகி விட்டன. காவல்துறையினரை கண்டு குற்றவாளிகள் அஞ்சிய காலம் போய், 'மாமா வர்றார்ரோய்' என்று ஏளனமாக பேசும் அளவுக்கு காவலர்கள் தங்கள் மதிப்பை கெடுத்துக் கொண்டுள்ளனர். ஏற்கனவே சட்டம் ஒழுங்கை காக்கும் விஷயத்தில் காவலர்களின் ஈரல் கெட்டுவிட்டது என்று மூத்த அரசியல்வாதி கருணாநிதி போன்றவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இருக்கும் கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுக்கும் வகையில் காவலர்களின் மேற்கண்ட நடவடிக்கைகள் அமைந் துள்ளன. இதே நிலை நீடித்தால் நல்ல போலீசை சினிமாவில் தான் தேட வேண்டியதிருக்கும்! எனவே உண்மையாகவே உழைக்கும் சில நல்ல காவலர்களுக்கும் இழுக்கை தேடித்தரும் காவல்துறை கருப்பு ஆடுகளை களையெடுக்க முதல்வர் முன் வரவேண்டும். ஏனெனில் ஜெயலலிதாவின் ஆட்சி சட்டம் ஒழுங்கை காக்கும் ஆட்சி என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் உள்ளது. அதை தனது அதிரடி நடவடிக்கையால் ஜெயலலிதா தக்க வைத்துக் கொள்வாரா?

- தரசை தென்றல்

Pin It