தண்டூன்றும் கிழவர்கள், பிணியாளர்கள்,
சாப்பிணங்கள், துறவோர்கள் ஆகியோரைக்
கண்டு, ஊன்றும் உலகியலை உணர்ந்துகொண்டால்
கவின்மகனே (சித்தார்த்தன்) துறவேற்பான் என்று மன்னன் (சுத்தோதனன்)

வண்டூன்றும் மலர்ச்சோலைப் போன்ற மூன்று
மாளிகையில் அரண்மனைக்குள் வாழ வைத்தான்
மொண்டூற்றும் எழில்மேனிப் பாவையர்கள்
மொய்த்தின்பக் கலைவிருந்தில் ‘மகனைத்’ தோய்த்தார்.
மணம்புரிந்து (யசோதரை) மகன்பெற்ற (இராகுலன்) சித்தார்த்தன்தான்

மண்ணுலகில் துயர்க்காட்சி பலநாள் கண்டு,
‘கணம் நடந்து காலமோட மாந்தன் வாழ்வில்
கவலைவரும்; பிணிமூப்புச் சாவு நேரும்.
பணம்குவித்து மேலவற்றைத் தடுக்கும் ஆற்றல்
மன்னருக்கும் இல்லை’யெனும் உண்மை ஆய்ந்தான்
உணங்குமிந்த உலகியலில் நீங்கி இன்ப
உயரறிவின் ஒளிநெறியைத் தேடத்தேர்ந்தான்.

‘வெண்கொற்றக் குடையாட்சி விடுத்துச் செல்வன்
வெங்கானம் செல்வானோ’ என்று மன்னன்
கண்கொற்ற எழிற்பெண்கள் சூழ வைத்தான்
கலைநுகர்வை அவர்களீந்தும் துயிலில் ஆழ்ந்தான்
பெண்சுற்றம் அதுகண்டு தூங்கலானார்
பின்னிரவில் திருமகனே விழித்துப் பார்த்தான்.
‘விண்பற்றும் அவ்அழகியரா இவர்கள்?’
வாய்பிளந்து ஒழுகுமெச்சில் விகாரம் கண்டான்.

நீருக்கும் நுரைவாந்தி உண்டு; நீரில்
நின்றுள்ள குமிழிக்கும் நொடிச் சாவுண்டு
பாருக்குள் மானிடனும் அவைபோலாவான்
பாழுலகில் நிலைத்திருக்கப் ‘புதிது’ காண
யாருக்கும் சொல்லாமல் (அவ்) இரவிலேயே
அரண்மனையை அரசமகன் நீங்கிச் சென்றான்.
ஊருக்கு வெற்றி தருமுன்னே தன்னுள்
ஊறழித்து வெற்றி காணத் துறவு பூண்டான்.

உடல்வருத்தி உணவொழித்துத் துறவோர் கொள்ளும்
ஒருநோற்றல் வழிச்செலாது தனது உள்ளக்
கடல் எழுப்பும் மாசு அலைகள் முற்றும் நீக்கிக்
கடுந்தூய்மைக் கண்டபின்பு, காட்டில் தேடி
அடல்தரும் ஓர் அரசமரம் (போதிமரம்) கீழமர்ந்து
அகம்நிறுத்தி ஒருங்கொன்றி ஆழ்ந்து ஆழ்ந்து
தொடர்இரவின் முழுநிலவின் கடை யாமத்தில்
தூயஒளிப் ‘புத்த பதவி’ எய்தி வென்றான்.

இருபத்தொன்பது அகவையில் துறவு பூண்டு
இருமூன்று ஆண்டுகளாய் அலைந்து காட்டில்
பொருந்துமொரு தன்வழியில் நோற்று நோற்று,
போதிசத்துப் பதவிகண்டு, சங்கம் தோற்றி
அருநெறிகள் நாலிரண்டும் (எட்டு) வாய்மை நான்கும்
அருளி மும்மணிக் கொள்கை நிறுவி என்றும்
ஒருகடவுள் சுட்டாது மானுடத்தை
உய்வித்த முதல் சிந்தனையாளன் புத்தன்!

- பேராசிரியர் இரா.சோதிவாணன்

Pin It