பக்தியி னால்தான் பற்பல பயன்வரும்
 என்று பகர்வோரே!
நித்யா னந்தன் நிகழ்த்தும் சேட்டைகள்
 நன்றோ சொல்வீரே!
கொட்டையும் பட்டையும் வெளிவே டந்தான்
 கோடிகள் பரிமாறும்
கட்டை பிரம்பச் சரியம் துணையாய்க்
 கட்டில் சுகந்தேடும்.
ஆனானப் பட்ட விசுவா மித்திரன்
 மேனகை தேடலையா?
யானைக் குட்டி காஞ்சி சங்கரன்
 பெண்ணுடன் ஓடலையா?
ஆயர் பாடிக் கண்ணன் பெண்களின்
 ஆடை தூக்கலையா?
அவிழ்த்துப் போட்டுக் குளித்த கோபியர்
 அழகைப் பார்க்கலையா?
இந்திரன் கூட அடுத்தவன் துணைமேல்
 இச்சை கொண்டானே!
ஈசனும் திருமால் எனுமோர் ஆணுடன்
 இன்பம் கண்டானே!
அழுக்குப் பிடித்த ஆண்டவன் கதைகளை
 அளப்பது யார்போற்ற?
ஒழுக்கம் பக்தி என்பனவெல்லாம்
 ஊரை ஏமாற்ற!
ஏடுக ளெல்லாம் பரபரப் பாக
 எழுதிக் காசெடுக்கும்
ஊடகத் துறையோ பெண்உடல் காட்டி
 ஊரை நாறடிக்கும்!
அம்மா ஆட்சி கண்முன்; ஆனால்
 எதுவும் நடக்காது
சும்மா இவன்களை விட்டு வைத்தால்நம்
 துன்பம் விலகாது!

- தமிழேந்தி

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.