மரங்களைச் சுமந்து நிற்கும்
மழைமுகில் தவழ்ந்து ஓடும்
சரமலர் வாசத் தோடு
சந்தனம் கமழ்ந்து வீசும்
விரல்களை விரித்த காந்தள்
விளக்கென ஒளியைக் கூட்டும்
அரவென நெளிந்த ஓடை
அருவியாய்த் தரையில் வீழும்!
கிளையதன் மேலி ருந்து
கிளியொடு குயில்கள் பாடும்
வளைமுது கோடு மந்தி
வான்கனிக் கடுவன் தேடும்
விளைமணி மலையில் ஊறி
வியத்தகு ஓடை ஆகித்
திளைத்திடும் அருவி யேதான்
தீம்பொழில் வயல்கள் சேரும்!
மலையதன் மீது எங்கோ
மறைவினில் தோன்றி மெல்ல
அலையெது மின்றிச் சுற்றி
அத்தனை மருந்தும் சேர்த்துத்
தலையது குளிர ஊற்றித்
தளிருடல் நோயைத் தீர்க்கும்
விலையிலா அருவிப் பெண்ணே
வியந்துனை வாழ்த்து கின்றேன்!
சிந்தனையாளன் - ஏப்ரல் 2012
அருவி
- விவரங்கள்
- பாவலர் வையவன்
- பிரிவு: சிந்தனையாளன் - ஏப்ரல் 2012
More articles by பாவலர் வையவன்
- வேருக்கு வணக்கம் (18 ஜூன் 2019)
- ஆயுதக் கவிஞன் (18 ஜூன் 2019)
- வள்ளுவ ஞானம் (10 ஜன 2019)
- தேச பக்தி (18 டிச 2018)
- பலாபலன் (31 அக் 2018)
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.