‘இந்தியா’ என்பதாக ஓர் ஆட்சிப் பரப்பு 1757-க்கும் 1801-க்கும் இடையில் தான் உருவாயிற்று.

‘இந்து’மதம் என்பது ஆக ஒன்று இல்லை. ‘பிராமண மதம்’ அல்லது ‘வேதமதம்’ என்பதைத் தான் ‘இந்து மதம்’ என்று நம்புகிறோம்.

 இன்றைய ‘இந்தியா’ 1919இல் ஆப்கனிஸ் தான் பிரிந்த பிறகும், 1936இல் பர்மா பிரிந்த பிறகும், 1947இல் பாக்கிஸ்தான் பிரிந்த பிறகும் ‘இந்தியா’ என்றே அழைக்கப்படுகிறது.

இந்த இந்தியாவில் இருக்கிற மதங்களுள் இந்து மதமே மிக மூத்த மதம்,

இன்றைய இந்திய மக்கள் தொகை 126.20 கோடி, இஸ்லாமியர், சீக்கியர், சமணர், பௌத்தர், கிறித்துவர் மட்டும் இன்று 20 கோடிப் பேர். மீதம் உள்ள 106 கோடிப் பேர் இந்துக்கள். இவர்கள் நான்கு பெரிய பிறவி சாதிப் பிரிவுகளாகவும், 6700 சிறிய உள்சாதிகளாகவும் வாழ்விலும் நடப்பிலும் வாழ்கிறார்கள்.

மற்ற ஒவ்வொரு மதத்திலும் இந்தத் தாக்கம் ஏதோ ஒரு வடிவில் இருக்கிறது. ஆனாலும் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் சிறிது மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால் ‘இந்துக்கள்’ உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்கிற நோய்க்கு 1200 ஆண்டுகளாக அடிமைப்பட்டிருப்பது போல, மற்ற மதக்காரர்கள் இல்லை.

அதிலும் தென்னிந்தியாவில் உள்ளது போல் அவ்வளவு வைதிக - பழமை இந்து வாழ்க்கை முறை வட இந்தியாவில் இல்லை.

இப்படிப்பட்ட எல்லா மக்களையும் விலங்குக்காட்சிச் சாலை வைத்திருப்பவன், எல்லாக் கொடிய விலங்குகளையும் சாட்டையால் அடித்து அடக்கி வைத்திருப்பது போல - படை, கருவிகள், ஆட்சி, காவல், நீதி என்கிற ஆட்சிக்கூறுகளை வைத்து, அடக்கி அடிமைகளாக வைத்திருந்தான், வெள்ளையன்.

பார்ப்பனரும் பார்சிகளும் வெள்ளையனுக்கு நல்ல கையாள்களாக இருந்தார்கள்.

வெள்ளையன் - பார்ப்பான் - பார்சி இவர்கள் சேர்ந்துதான் 1885இல் காங்கிரசை உருவாக்கினார்கள்.

இதில் ஒரு பிரிவினர் 1922க்குப் பிறகு “சுயராஜ்ஜியம்” பற்றிப் பேசினார்கள். அப்போது காங்கிரசிலிருந்த மேதை மயிலை சிங்காரவேலு அவர்கள் மட்டும் - “யாருக்காக சுயராஜ்ஜியம்?” என்று ஒரு கேள்வி யைக் கேட்டார்.

கலை கலைக்காகவே என்பது போல - “சுயராஜ்ஜியத்துக்காகவே சுயராஜ்யம்” என்று மட்டுமே காந்தியார் முதல் எல்லோரும் விடை சொன்னார்கள்.

இதுதான், இன்று நாம் பெற்றிருக்கிற சுயராஜ்யம். எந்த இலக்கு நோக்கியும் மக்களை அழைத்துச் செல்லாத ஆட்சியின் கீழ் - இந்திய வல்லாட்சியின் கீழ் 126 கோடி மக்களும் வதைப்படுகிறோம்.

சுயராஜ்யம் - விடுதலை பெற்ற ஒரு நாட்டில் - 67 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏன் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் குடிநீர், எல்லோருக்கும் உணவு, எல்லோருக்கும் இருப்பிடம், எல்லோருக்கும் வைத்தி யம், எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் பாது காப்பு இல்லை என்று பெரும்பாலானவர்கள் புரிந்து கொள்ளவில்லை; கொதித்து எழவில்லை.

இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றா லும் - இதுபற்றி எந்தக் கட்சியும், எந்த அமைப்பும் நேர்மையாகவும் உண்மையாகவும் இணக்கமாகவும் சிந்திக்கவில்லை என்பதே மாபெரும் உண்மை.

1916இல் தோற்றுவிக்கப்பட்ட திராவிடர் இயக்கமும், 1926இல் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கமும் 98 ஆண்டுகளாகத் தமிழக எல்லையைத் தாண்டிச் செயல்படவில்லை; இந்திய அளவில் செயல்படவில்லை.

அதற்கு முன்னர் தோன்றிய காங்கிரசுக் கட்சி வெள் ளையன் விட்டுப் போன ஆட்சிக்கு உரிய கருவிகளை அப்படியே வைத்துக் கொண்டு - மக்களை அடக்கி ஆளுவது, அடிமைப்படுத்துவது, தேசிய இன உரிமைகளைப் பறிப்பது, மிகச் சிலரை வாழ வைப்பதற்காக மிகப் பலரைச் சுரண்டுவது என்பதோடு நின்று கொண்டது, மெத்தப் படித்தவர்கள் கூட இதை உணர மறுக்கிறார் கள். தனக்குத் தனக்கு எல்லாம் கிடைத்தால் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்; செயல்படுகிறார்கள்; வாழ்கிறார்கள்.

1925இல் தோற்றுவிக்கப்பட்ட பொதுவுடைமைக் கட்சி பார்ப்பனியத்தைத் தொடாமலே - இந்துப் பண் பாட்டுக்கு அடிகொடுக்காமலே - வெகுமக்களைத் தட்டி எழுப்பாமலே ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் சோவியத்து நாட்டில் போய் வழிவகை கேட்டது; மாவோ காலத்தில் சீனாவில் போய் வழிவகை கேட்டது. இந்தியாவில் தொழிற்சங்க நடவடிக்கைகளோடு நின்று கொண்டது.

சோவியத்து 1989இல் தடம் மாறியது; செஞ்சீனா 1974இல் தடம்புரண்டது; கிழக்கு அய்ரோப்பா 1990இல் சோவியத்துப் பாதையை உதறியது. இந்தியா 1990 இல் உலகமயம், தனியார் மயம், தாராள மயம் என்கிற ஏகாதிபத்திய முதலாளித்துவச் சுரண்டல் பாதையை ஏற்றுக்கொண்டது.

இஸ்லாமியர்களை அழிக்க நினைத்த ஒரே அமைப்பு இராஷ்டிர சுயம் சேவக் சங்கம். காந்தியார் அதற்குத் தடையாக இருப்பதாக நினைத்து, அது அவரைக் கொன்றது. 1925க்கும் 1948க்கும் இடையில் அவர்கள் செய்த மாபெருஞ் சாதனை அதுதான்.

கல்வியில் இடஒதுக்கீடு, அரசு வேலையில் இடஒதுக் கீடு காரணமாகத் தமிழகம், கேரளம், கருநாடகம் ஆகிய பகுதிகளிலிருந்து 1920இல் வெளியேறிய தென்னாட் டுப் பார்ப்பனர்கள் இந்திய மத்திய அரசிலும், காங்கிரசி லும், பொதுவுடைமைக் கட்சியிலும், சோஷலிஸ்ட் கட்சியிலும் ஊடுருவினார்கள்; ஆதிக்கம் பெற்றார்கள். அந்த ஆதிக்கம் இன்றும் குலையவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக - 1880கள் முதல் வட நாட்டிலும், தமிழகத்திலும் கால் கொண்ட ஆங்கில நாளேடுகள், இந்தி நாளேடுகள், தமிழ் ஏடுகள் இந்துமத ஆதிக்கம் - பார்ப்பனர் ஆதிக்கம் எந்த வகையிலும் குலையாமல் பார்த்துக் கொண்டன.

ஆதிசங்கரர், காஞ்சி சங்கராச்சாரியர் கொள்கைகளும் ஆதிக்கமும் கன்னியாகுமரி முதல் காசி வரை சரியா மல் இவர்கள் பார்த்துக் கொண்டார்கள். இவர்களின் இந்தத் தொலைநோக்குத் திட்டமும் பார்வையும் செயலூக்கமும் இந்தியா அளாவியதாக இருந்தது.

திராவிட அரசியல் கட்சி, 1975 நவம்பரில் ஆர்.எஸ்.எஸ். காரர்களை அரவணைத்துக் கொண்டது.

1990க்குப் பிறகு அவர்கள் தலைமையில் இந்தி யாவில் அமைந்த கூட்டணி ஆட்சியில் திராவிடக் கட்சிகள் பங்கேற்றன.

தாமரைச் சின்னத்தையும், வாஜ்பேயி வல்லவர் - நல்லவர் என்கிற கேடு கெட்ட கொள்கையையும் தமிழ கத்தில் பரப்புகிற பண்ணை அடிக்கிற வேலையைத் தலைமேல் இக்கட்சிகள் சுமந்தன.

ஆர்.எஸ்.எஸ். அனைத்திந்தியாவையும் களமாகக் கொண்டு செயல்படுவது.

1948 பிப்பிரவரியில் பூனாவில். அவர்கள் கமுக்க மாகக் கூடித் திட்டமிட்டனர். “கி.பி.2000இல் இந்தியா வில் இராம ராஜ்யம் அமைக்க வேண்டும்” என்று அன்று உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

1991க்கும் 2004க்கும் இடையில் லோகியா சோஷ லிஸ்டுகள், திராவிடக் கட்சிகள், அம்பேத்கர் குடிஅரசுக் கட்சிகளின் தோள்களில் ஏறி, இந்தியாவில் ஆட்சியைப் பிடித்த அவர்கள், இன்று தனிப்பெரும்பான்மையுடன் இந்திய ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டார்கள்.

ஏக்நாத் ரானடே அவர்களை முதலாவது குருவாக ஏற்று, ஆர்.எஸ்.எஸ். தொண்டராக உருவான நரேந்திர தாமோதர தாஸ் மோடி, இன்று ரானடேயின் நூற் றாண்டின் போது, இந்தியாவின் தலைமை அமைச் சராக ஆகிவிட்டார்.

அயோத்தியில் இராமர் கோயில் கட்டுவது, மதுராவில் மாபெரும் கிருஷ்ணன் கோவில் அமைப்பது, இராமர் அணையை இடிக்காமல் சேதுக் கால்வாயை வெட்டு வது இவற்றை முதலில் செய்து முடிப்பார் மோடி.

இந்நிலையில், மெத்தப் படித்த வெகு மக்களின் எதிரி - உலக வங்கியின் கெட்டிக்காரக் கணக்கர் - எந்தத் தகுதியும் அற்ற சோனியாகாந்தியின் ஏவல் ஆள் ஆன டாக்டர் மன்மோகன் சிங் ஏற்கெனவே 1984 முதற் கொண்டும், பிறகு 2005 முதற்கொண்டு 2014 வரை யிலும் அமெரிக்கரின் நல்ல கையாளாக இருந்தார்.

இன்று, அரபு நாட்டில் மய்யங்கொண்ட வகாபிய இஸ்லாமிய அரசு (Islamic State)க் கொள்கைக்காரர் கள், ஷீயா - சன்னி போராட்டத்தை ஊதிப் பெருக்கி, ஈரானையும் சிரியாவையும் அழிப்பதில் முனைந்திருக் கிறார்கள்.

அவர்கள், அல்கொய்தா தீவிரவாதிகளை விடக் கொடுமையானவர்கள். அவர்களை - இஸ்லாமிய அரசு (Islamic State) பயங்கரவாதிகளை அழித்தொழிப்பது என்கிற போரில் கச்சை கட்டி நிற்கிறார், அமெரிக்க அதிபர் ஒபாமா.

அந்த ஒபாமாவுடன் இணைந்து உலக அளவில் பயங்கரவாதத்தை ஒழிக்கப் போவதாக, உலகில் தாம் போகுமிடமெல்லாம் முழங்கி வருகிறார் மோடி.

சோற்றுக்கு வக்கில்லாத - வாழ்வுரிமை மறுக்கப்பட்ட உழைப்பாளிகளுக்கு முழு விடுதலை வராத வரை யில், பயங்கரவாதம் - வன்முறை - அரசியல் கொலை எப்படி ஒழியும்? நிற்க.

இன்னும் ஓராண்டு கழித்துத் தமிழகத்தில் நடை பெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் - கிடைக்கிற குதிரைகளுக்குக் கொள்ளுப் போட்டு, பெரு வெற்றி பெற்றிடத் திட்டமிடுகிறார்கள்.

இன்றைய அரசமைப்பை அடியோடு மாற்றிட விரும்பு வது மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி. தமிழகத்தில் ஒரு குழுவாக இயங்கும் இக்கட்சி அனைத் திந்திய அளவில் இதற்கான விழிப்புணர்வை உண் டாக்கிட 1991 முதல் முயற்சிக்கிறது; தேர்தல்களைப் புறக்கணிக்கிறது.

ஆனாலும் தமிழ்நாட்டு அன்றாட நடப்புப் பற்றி எது வும் கூறாமல், அறவே மா.பெ.பொ.க. விலகியிருக்க முடியாது.

தமிழக அரசியல் தந்நலமும் அகம்பாவமும் கொண்ட இரண்டு திராவிட வாக்கு வேட்டைக் கட்சிகளாலும் - தில்லியில், இந்தியாவில் ஆட்சி அமைப்பதில், இந்திய அரசைத் தட்டிக்கேட்பது முடியாமல் தறிகெட்டு நிற்கிறது.

இந்த இழிந்த நிலைக்கு, 16-8-1969 இரவில் வித் தூன்றியவர் மதிப்புக்குரிய கலைஞர் மு. கருணாநிதி. தந்தை பெரியாரின் அன்பான வேண்டுகோளைத் துச்சமாகப் புறந்தள்ளிவிட்டு, காமராசரை வீழ்த்திட, இந்திராகாந்தி என்கிற காதகிக்கு அன்று துணை போனார் கலைஞர்.

கலைஞரைக் கொண்டு, 1969இல் காமராசரை வீழ்த்திய அதே இந்திராகாந்தி, 1976 சனவரியில் கலைஞரையும் வீழ்த்தினார்.

விளைவு என்ன?

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 57 (39 + 18) பேரும் தமிழகச் சிக்கல் எதுவானாலும் ஒன்றுபட்டு நின்று, தில்லியை ஆட்டிப்படைக்கும் வலிமை 1977 முதல் அடியோடு தொலைந்துவிட்டது.

இந்த நிலையில், சாதியை முதலீடாகக் கொண்ட கட்சிகளும், பெரியார் - அண்ணாதுரை போர்வையைக் கொண்ட கட்சிகளும் - எந்த இலக்கும் இல்லாத காங்கிரசுக் குழுக்களும், தமிழக மக்களை இலவசங்களைத் தந்தே மானமற்றவர்களாக உருவாக்கிவிட்ட இன்றைய ஆளுங் கட்சியினரும் ஆர அமரச் சிந்திக்க வேண்டும்.

1.            இந்தியா ஒரே நாடல்ல; பல மொழி வழி நாடு களைக் கொண்ட ஒரு துணைக்கண்டம்.

2.            ஒவ்வொரு மொழி வழி நாட்டுக்கும் முழுத் தன்னு ரிமை வேண்டும். பணம் அச்சடிப்பது, இந்தியக் கூட்டாட்சிப் பாது காப்புக்கான பொது இராணுவம் இரண்டைத் தவிர, மற்றெல்லா அதிகாரங்களும் ஒவ்வொரு மொழி வழி மாநிலத்துக்கும் வேண்டும்.

3,            ஒவ்வொரு மாநிலத் தன்னாட்சிக்கும் தனித்தனி அரசமைப்புச் சட்டம், தனித்தனித் தேசியக் கொடி வேண்டும்.

4.            அவரவர் மாநில ஆட்சிமொழியே கல்வி மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி யாக இருக்க வேண்டும். சிறுபான்மையினர் மொழி களுக்கும் அத்தகைய உரிமைகள் வேண்டும்.

இவ்வளவையும் இந்தியா முழுவதிலும் பயணித்துப் பரப்புரை செய்யவும் போராடவும் வேண்டும்.

அனைத்திந்திய அளவில் அமைப்பு - செய்தித்தாள் ஊடகங்கள் - பரப்புரைகள், போராட்டங்கள் என்பவை இல்லாமல், இன்றைய இந்துத்துவ - ஆர்.எஸ்.எஸ். நடப்பையும் வளர்ச்சியையும் தடுத்து நிறுத்த முடியாது.

- வே.ஆனைமுத்து

Pin It