இதை நிறுவும் சான்றுகளே தொல்லியல் சான்றுகள்; செம்மொழி நிறுவனத்தைக் காப்போம்!

தொல் பழந்தமிழர் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர். சிந்துவெளியை நோக்கி ஆரியர் வந்த பிறகுதான், தமிழர் தெற்கு நோக்கி நகர்ந்தனர்.

1920களில் கன்னிங்ஹாம் என்ற அரசப் பிரதிநிதி தொல்லியல் தரவுகளைக் காண்பதில் அக்கறை செலுத்தினார்.

மொகஞ்சாதாரோ, அரப்பா நகரங்கள், நகரங்களுக் குரிய எல்லா வசதிகளோடும் அமைந்திருந்ததை நிறுவினார்கள், அதற்கென ஏற்பட்ட துறைதான் தொல் லியல் துறை (Archeological Department). அது இந்திய அரசு நிருவாகத்தில் உள்ளது.

1920களில் அங்கு காணப்பட்ட செங்கற் கட்டடங்கள், நீர்ப்போக்குவரவு வசதி, தானியக் கிடங்குகள், கருவி கள், அணிகள், சிறிய உருவங்கள் எல்லாம் தொல்லி யல் துறைக்குச் சொந்தமானவை. அதாவது தரைக் கும் கீழே அகழ்ந்து காணப்படும் எல்லாப் பொருள் களும் தடயங்களும் தரவுகளும் பழைய கட்டடங் களும் மத்திய அரசுக்குச் சொந்தமானவை.

பழங்கால மொழிகள் தமிழ், கிரேக்கம், ரோமன் மொழிகள் முதலானவை. மொஹஞ்சதாரோ, அரப்பா மக்கள் பேசியது தமிழ் என்பதை, அங்கு கிடைத்த தரவுகளைக் கொண்டு எண்பிக்கப்பட்டுள்ளது. ஆரியர் பேசிய மொழி, தமிழ்மொழியின் சிறந்த கூறுகளை எடுத்துச் செப்பம் செய்யப்பட்ட மொழி.

இதனை கால்டுவெல், கிரியர்சன் போன்ற தமிழ் கற்ற வெள்ளையர் நிறுவினர். தமிழ், இலக்கண - இலக்கிய வளமுள்ள மொழி என அவர்கள் நிறுவினர். தமிழ் செம்மொழி என்றும் கூறினர்.

பிற்காலத்தில் பரிதிமாற்கலைஞர், மறைமலை அடிகள் போன்றோரும் தமிழ் செம்மொழி என நிறுவி யிருந்தனர்.

சமற்கிருதம் செம்மொழி எனக் கூறி, இந்திய அரசு, அம்மொழி வளர்ச்சிக்கு மட்டும் வெள்ளையர் காலத் திலும், வெள்ளையர் வெளியேறிய பிறகும் பெரிய தொகைகளைச் செலவு செய்து வளர்த்தது, பேச்சு வழக்கில் இல்லாத சமற்கிருத வளர்ச்சிக்குச் செலவு செய்ததைப் போல் தமிழ் போன்ற மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு செலவு ஒருபோதும் செய்ய வில்லை.

தி.மு.க. அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரில், “தமிழ் செம்மொழி” என இந்திய அரசு 2004இல் அறிவித்தது.

அப்போதும் இப்போதும் தென்னிந்தியாவுக்குரிய, “மொழிகள்” வளர்ச்சி மத்திய நிறுவனம், மைசூரில் உள்ளது. கல்வெட்டு ஆராய்ச்சித் தரவுகள், பழைய ஓலைச்சுவடிகள் தமிழ்நாட்டுக்கு உரியவை - மைசூரில்தான் உள்ளன.

தமிழ் செம்மொழி என அறிவிக்கப்பட்டவுடன், தமிழக அரசு முயற்சித்ததன் பேரில், “செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” என்னும் தன்னாட்சி நிறுவனத்தை, சென்னையில் 2007 ஆகத்தில் மத்திய அரசு நிறுவியது.

ஆனால் அன்று முதல் இன்று வரை தமிழ் மூதறிஞர் எவரையும் அந்நிறுவனத்துக்கு முழுநேர இயக்குநராக அமர்த்தவில்லை.

மைசூரில் மத்திய மொழிகள் நிறுவனத்தில் துணை இயக்குநராகப் பணிபுரிந்து கொண்டிருந்த அறிஞர் க. இராமசாமி அவர்களைப் பொறுப்பு அலுவலராக அமர்த்தி, சென்னையில், தனி அலுவலகம் தொடங்கப் பட்டது. அவர் மிகச் செப்பமாகச் செயல்பட்டார்.

1. சங்க இலக்கியங்களைச் செம்பதிப்பாக வெளி யிடுவது;

2. சங்க இலக்கியங்களை அய்ரோப்பிய மொழி களிலும் இந்திய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவது;

3. தொல்லியலில் ஆர்வம் உள்ள நிறுவனங்களுடன் இணைந்து, தொல்லியல் பற்றிய கருத்தரங்கு களை நடத்துவது முதலான நற்பணிகளை - “சென்னை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்” பல இடங்களில் நடத்தி, தமிழ்நாட்டு மக்களிடையே தொல்லியல் பற்றிய விழிப்புணர் வை ஏற்படுத்தியது.

இவ்வகையில், “அம்பத்தூர்-பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை” யினர் - சென்னை செம்மொழி மத்திய நிறுவனத்துடன் இணைந்து, பின்கண்டவாறு கருத்தரங்குகளை நடத்தினோம்.

அவ்விவரங்கள் கீழே உள்ளன.

ஆதிச்சநல்லூர் தாமிரபரணிக் கரையில் அமைந் துள்ள பழைய பெரிய நகரம். இன்று வரலாற்றுப் பெருமை குன்றிச் சிற்றூராக உள்ளது அதில், 1876 ஆம் ஆண்டு செருமனியைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் அகழ்வாய்வு நடத்திய போது, பல அரிய பொருள்கள் கிடைத்தன. அவை பெர்லின் அருங்காட்சியகத்தில் வைக்கப் பெற்றுள்ளன.

1904இல் அலெக்சாண்டர் இரியா மீண்டும் ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான பொருள்கள் அவருக்குக் கிடைத்தன. அவற்றை அவர் வரிசைப்படுத்திச் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தினார்; நூலாகவும் வெளியிட்டார்.

சிந்துவெளி நாகரிகத்துடன் ஒப்ப எண்ணத்தக்க ஆதிச்சநல்லூர், ஒரு நூற்றாண்டுக்காலம் யாராலும் கண்டுகொள்ளப்படாமல் கிடந்தது. இந்தியத் தொல்லியல் துறையின் சென்னைத் தொல்லியல் கண்காணிப் பாளர் தியாக. சத்தியமூர்த்தியின் முயற்சியால் 2005 ஆம் ஆண்டு மீண்டும் அங்கு அகழ்வாய்வு நடந்தது.

இதற்கு முன்பு கிடைத்தவை இதில் கிடைக்க வில்லையென்றாலும், அரிதான பொருள்கள் கிடைத்தன. மூன்றடுக்குத் தாழிகள் இந்தமுறை கிடைத்தன. 6000 ஆண்டுப் பழமையை அறிய இவை துணை புரிந்தன. “தாழிக்காடு” என்றே பலராலும் அழைக்கப் பெற்ற 110 ஏக்கர் பரப்பிலான ஆதிச்சநல்லூர்ப் பறம்பில், 2005ஆம் ஆண்டு ஆய்வு, வாழ்விடச் சான்றையும் கண்டு தந்தது.

இவ்வளவு சிறப்புடைய ஆதிச்சநல்லூர் பற்றித் தமிழ் மக்களுக்குப் பெரிதாக எதுவும் தெரியாது. ஆதிச்சநல்லூரின் சிறப்பை உலகுக்கு உணர்த்தும் வகையில், “பெரியார் ஈ.வெ.ராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும்”, சென்னைச் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து 4.3.2009 முதல் 6.3.2009 முடிய மூன்று நாள்கள் “தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வு கள்: ஆதிச்சநல்லூர் சிறப்பும் எதிர்காலத் திட்டங்களும்” என்ற பொருளில் தேசியக் கருத்தரங்கம் ஒன்றை நடத்தின.

தொடக்க விழா

சென்னைத் தியாகராயர் நகர் தேவர் மண்டபத்தில் அக்கருத்தரங்கம் நடந்தது. மொழிவாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் அறக்கட்டளைத் தலைவர் தோழர் வே.ஆனைமுத்து வரவேற்புரை நிகழ்த்தி னார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பொறுப்பு அலுவலர் பேராசிரியர் க. இராமசாமி செம் மொழித் திட்டம் பற்றி எடுத்துரைத்தார்.

அதனை அடுத்து, திருநெல்வேலியில் 22.1.2010, 23.1.2010, 24.1.2010 மூன்று நாள்கள் ஆய்வரங்கம் நடந்தது. விழாவுக்கு பெரியார் ஈ.வெ.இராமசாமி - நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் வே. ஆனைமுத்து தலைமை வகித்தார். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன ஆய்வறிஞர் ந. அரண முறுவல் வரவேற்றார். எண்பேராய உறுப்பினர் வா.மு. சேதுராமன் படக் கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

இதில் தொல்லியல் துறை முன்னாள் இயக்குநர் நடன. காசிநாதன் பேசியதாவது :

ஆதிச்சநல்லூர் நாகரிகத்திற்கும், சிந்து சமவெளி யிலுள்ள அரப்பா நாகரிகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அங்குக் காணப்படும் உருவ எழுத்துகள் இங்குள்ள பெருங்கற்காலப் பானை ஓடுகளில் கண்டெ டுக்கப்பட்ட எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய, ஆர்மேனிய மற்றும் மத்திய தரைக்கடல் மனிதர்களின் எலும்புக் கூடுகளோடு ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கட்டடம் மற்றும் நகர அமைப்புகள் ஆதிச்சநல் லூர், பூம்புகார் மற்றும் அரப்பாவில் ஒரே மாதிரியே உள்ளன. ஒரு பகுதியில் மக்களும், மறு பகுதியில் மன்னரும் வாழ்ந்துள்ளனர். சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட நடன மங்கை சிற்பம் திராவிடப் பெண் போன்றே உள்ளது. சிந்து சமவெளியில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது ஆதாரப்பூர்வமான உண்மை.

ஆதிச்சநல்லூரில் குவியல் குவியலாகக் கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் கருவிகளை வைத்துப் பார்க்கும் போது பெரும் தொழில் நகரமாக இருந்திருக்க வாய்ப் புள்ளது. ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட முது மக்கள் தாழி ஒன்றின் உட்பகுதியில் கரி அரவநாதன் என்று எழுதப்பட்டிருந்தது. இதை நானும் பார்த்து கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் கொண்டேன். ஆனால் தற்போது அங்கு தாழியில் எதுவும் எழுதப்படவில்லை என்று ஆராய்ச்சி அறிக்கையில் கூறுகின்றனர். தமிழர் கள் தொன்மையானவர்கள் என்ற வரலாற்று உண் மையை மறைக்க முயல்கின்றனர்.

கன்னியாகுமரி, காயல்பட்டினம் பகுதியில் கடல் ஆராய்ச்சி செய்ய வேண்டும். சாயர்புரம் தேரி பகுதி யில் நுண்கற்கால ஆயுதங்கள் ஏராளமாகக் கண்டெடுக் கப்பட்டுள்ளன. இங்கும் கொற்கை, ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களிலும் விரிவான அகழ்வாராய்ச்சி நடத் தப்பட்டால் தமிழன் உலகின் முதல் குடிமகன் என்ற உண்மை உறுதிப்படும் என்றும் அவர் பேசினார்.

அண்மையில், மதுரையை அடுத்த கீழடி அகழ் வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கீழடி ஆய்வு புதியது; 2014, 2015, 2016ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப் பட்டது.

தொல்லியல் ஆய்வு, மூலிகைத் தோட்டம் வளர்ப்பு இவற்றில் பெரியார் ஈ.வெ. இராமசாமி-நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நல்ல நாட்டம் உண்டு; அதன் வேலைத் திட்டங்களுள் இவை அடக்கம்.

அதனால் பெற்ற உந்துதலால், இப்போது அறிஞர் ‘செம்மொழி’ க. இராமசாமி அவர்கள் மூலம், 1) ஆதிச்ச நல்லூர், கொடுமணல் பொருந்தல், கீழடி ஆய்வுகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கோரி அதற்கான விண்ணப்ப தையும்;

2. அரியலூர் - பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும் பரப்பில் பரவியுள்ள உயிர்ப்படிவப் பாறைகள் (Fossil Deposits and Fossil Tree) நிரம்பிய பகுதி முழுவ தையும் இந்திய மண்வளத் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரும் விண்ணப்பத் தையும் ஆயத்தப்படுத்திக் கொண்டு, அதற்காகவே, 18.2.2017 அன்று நான் தில்லியை அடைந்தேன்.

இதற்கிடையில் தில்லி மாநிலங்கள் அவையில், கீழடி பற்றி கவன ஈர்ப்புத் தீர்மானத்தை டி.கே. ரெங்கராஜன் கொணர்ந்தார். அதையொட்டி, திருச்சி சிவா, கனிமொழி, இல. கணேசன், சுப்பிரமணிய சாமி ஆகியோர், கீழடி அகழ்வாய்வு பற்றி நாடாளு மன்றத்தில் ஆர்வத்துடன் பேசினர்.

இந்தச் சூழலில் தொல்லியல் துறைக்கான அமைச்சர் மகேஷ் சர்மா தலைநகரில் இல்லாததால், அமைச்சருக்கு உரிய மடலின் படியுடன், தொல்லியல்துறை இயக்குநர் நாயகம் (Director General - Archaeological Survey of

India) முனைவர் ராகேஷ் திவாரி அவர்களை - அறக்கட்டளையின் சார்பில் நானும், தில்லி பெரியார் - அம்பேத்கர் தொண்டு நிறுவனம் ப. இராமமூர்த்தி அவர்களும் 21.2.2017 மாலை 4 மணிக்கு அலுவல கத்தில் நேரில் கண்டு பேசினோம்.

அவர் தமிழகத் தொல்லியல் இடங்கள் எல்லா வற்றையும் நேரில் பார்த்திருக்கிறார்.

“அய்யா, தமிழகத் தொல்லியல் துறைப் பணி களில் இந்திய அரசு போதிய ஆர்வம் காட்டவில்லை; நாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம்” என, நான் சொன்னேன்.

அவர், உடனே, “இதோ பாருங்கள் - இந்தத் தொகுதி கீழடி அகழ்வு ஆய்வு பற்றியது. இந்த அறிக்கை 9.2.2017இல் அனுப்பப்பட்டு, 13.2.2017இல் எங்களுக்குக் கிடைத்தது. இது கிடைத்த பிறகு, நான் பரிந்துரைத்த தன் பேரில், இந்திய அரசினர், கீழடி தொல் ஆய்வு மேற்கொண்டு நடைபெற நிதி ஒதுக்கியுள்ளனர்!” என்று கூறினார்.

“ஆதிச்சநல்லூரில் மேற்கொண்டு அகழ்வாய்வு செய்ய, ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கேட்டேன்.

“டாக்டர் டி.எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் இன்னமும் அவருடைய ஆராய்ச்சி பற்றிய முழு அறிக்கையையும் அனுப்பவில்லை. முழு அறிக்கை வந்தால் உடனே நடவடிக்கை எடுப்போம்” என்றார், அவர்.

இதுபற்றி, மதிப்புக்குரிய முனைவர் டி.எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் கருதிப் பார்த்து ஆவன செய்ய வேண்டுகிறேன்.

புதுச்சேரி முனைவர் கே. இராசனின் பொருந்தல், கொடுமணல் ஆய்வறிக்கைகள் முழுமையாகக் கிடைத் தன எனக் கூறி, அவரைப் பாராட்டினார், திவாரி.

தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர்-தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், மொகஞ்சதாரோ-அரப்பா நாகரி கத்துக்கு முந்தியது என நாம் பெருமைப்படுகிறோம்.

அந்த வரலாற்றுப் பெருமையை நாம் நிலைநாட்ட வேண்டும்.

அதற்கு இப்போது என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டைப் பற்றிய அரசியல், 1977 முதல் தி.மு.க. - அ.தி.மு.க. போட்டா போட்டி அரசியல்.

தமிழ்வழிக் கல்வியைப் பாழடித்தவர்கள் இவர்கள்.

காவிரிநீர்ப் பங்கீட்டை மேலும் சிக்கலாக்கிய வர்கள், இவர்கள்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தைச் சீரழித்த வர்கள் இவர்கள்.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை வளர வொட்டாமல் தடுத்தவர்கள், இவர்கள்.

அதாவது தி.மு.க. அரசு தொடங்கிய பணியை, அ.தி.மு.க. ஆட்சி முடக்குவதை வழக்கமாகக் கொண் டார், எம்.ஜி.ஆர்.

அ.தி.மு.க. ஆட்சி தொடங்கிய பணியை தி.மு.க. ஆட்சி முடக்குவதை நன்றாகச் செய்தார், டாக்டர் கலைஞர்.

அதாவது, எல்லாம் தமிழ்நாட்டுக்கு - தமிழருக்கு - தமிழின் நலத்துக்கு என்பதை மறந்த மக்கள்நல எதிரிகள் ஆயினர், இரண்டு கட்சியினரும்.

2011 முதல் 2016 நவம்பர் வரை - தி.மு.க. 2007 இல் தொடங்கி வைத்த - சென்னை செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஏரெடுத்தும் பார்க்கவில்லை - முதல்வர் செயலலிதா.

தில்லியிலுள்ள மோடி அரசுக்கு ஒத்துழைத்தவர், செயலலிதா.

இன்றைய அ.தி.மு.க. அரசு இன்று போகுமா? நாளை போகுமா என்கிற ஈனநிலையில் உள்ளது.

தமிழ்நாட்டு நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களாக இருந்தால்-தமிழக முதலமைச்சரும், எல்லாக் கட்சித் தலைவர்களும் - தமிழகத்தைச் சார்ந்த 57 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாக தில்லிக்குச் சென்று - பிரதமர், கல்வி அமைச்சர், தொல்லியல் துறை அமைச்சர், தொல்லி யல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோரைக் கண்டு -

1. சென்னையிலுள்ள செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடர்ந்து தன்னாட்சி நிறுவனமாகவே சென்னையிலேயே இயங்க வேண்டும்;

2. அந்நிறுவன வளர்ச்சிக்குப் போதிய நிதியை, இந்திய அரசு ஒதுக்கிட வேண்டும்;

3. தமிழிலும் பிறமொழிகளிலும் சிறந்த தகுதி வாய்ந்த ஒருவரை முழுநேர இயக்குனராக அமர்த்த  வேண்டும்; என வற்புறுத்திக் கோரிட, அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம்.

Pin It