தமிழில் மிகச்சிறந்த புதினங்களின் பட்டியலில் ஆதிரைக்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்.

1977 தமிழர் மீதான இனப்படுகொலையில் மலையகத்திலிருந்து சில தமிழர்கள் இடம்பெயர்ந்து வன்னியை வந்தடைகின்றனர். அதுதான் ‘ஆதிரை’யின் தொடக்கப் புள்ளி. அங்கிருந்து ஆரம்பித்த இடையறாத ஒப்பாரிப் பாடல்கள் முள்ளிவாய்க்கால் ஊழியில் சுற்றிச் சுழன்று, 2013 வரை ஓலமிடுகிறது. காற்று எங்கும் அதனைக் கரைத்து விடவில்லை. சுமார் 35 வருடங்கள் நாங்களும் அப்பாடலுடன் அலைந்து உலைந்து அல்லல்பட்டு பயணிக்கின்றோம்.

`ஆதிரை’ புதினம் பேசிய அரசியல் எனக்கு ஒருப்பட்டது. ஓரிடத்தில் கூட முரண்பட்டுப் போக வில்லை. சிங்கள பௌத்த பெருந்தேசிய இனவாத அரசியலில் உண்மையின் திசை வழியில் நின்றே சம்பவங்கள் இதில் புனையப்படுகின்றன.

77 தமிழர் மீதான இனப்படுகொலையில் தொடங்குகின்றது, 83 ஐத் தொடுகின்றது, முள்ளிவாய்க்காலில் தொடர்கின்றது, முடிந்துவிடவில்லை. என் மேலான ஆச்சரியம் இதுதான். இலங்கைத் தமிழர் மீது நடாத்தப்பட்ட வன்முறைகளில் பெரும்பாலானவை இதில் பதியப்பட்டு இருக்கின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக அல்ல; இரத்தமும் சதையுமான சாட்சியாக அவை பதியப்பட்டிருக்கின்றன.

சயந்தன் அதனை நேர்த்தியாகக் கையாள்கின்றார். யாவற்றுக்கும் வகை மாதிரிப் பாத்திரங்கள் உருவாகின்றன. அப்பாத்திரங்கள் உயிருடனும், உணர்வுடனும் பிணைபடத் தவற வில்லை. தேவையற்றது என்று எப்பாத்திரத்தையும் சொல்லிவிடமுடியாது. அது நமக்குள் கொண்ட ஊடாட்டம் நம்பகத்தன்மை வாய்ந்தது. காலமும் உறவும் உணர்வும் ஒரு நார் போல அத்தனை கண்ணிகளையும் இணைத்து விடுகின்றன.

பேரினவாத அலையில் சிக்குண்டு தள்ளாடும் தமிழ்த்தேசிய இனத்தின் பெரும்பாடுகளை மாத்திரம் இது பேசவில்லை; சிறு சிறு பாடுகளையும் பேசுகின்றது. பிரதேச வாதம், தலித்தியம், பெண்ணியம் யாவும் பிரச்சாரமாக அமையாது, கலைத்துவமாக பேசப் படுகின்றது.

இதில் முக்கியமாக நான் கருதுவது முள்ளி வாய்க்கால் ஊழி குறித்த சித்திரம், நாங்கள் சில காட்சிப்படுத்தல்களைப் பார்த்தோம், பலர் சொல்லக் கேட்டோம். ஆனால், இத்தனை உயிர்ப்புடன் வேறெங்கும் நாம் உணர்ந்ததில்லை. உன்னி எழுந்த ஒரு படைப்பாற்றல் அது.

முள்ளிவாய்க்கால் ஊழியை வேறு யாரும் இவ்வளவு சித்திரித்திருக்கிறார்களா என்றால் நான் வாசித்தவற்றில் இல்லை என்று மறுதலிப்பேன். முள்ளிவாய்க்கால் ஊழியை சிலர் விளம்பரங்களுக் காகவும், வேறு சிலர் வியாபாரத்திற்காகவும் பயன் படுத்தினர். ஆனால், சயந்தன் படைத்தது மானுடத்தின் ஓலத்தை வெளிக்காட்டுவதற்கே. அதனால்தான் அது உயிர்ப்புடன் திகழ்கின்றது.

வெடித்த ‘ஷெல் பீஸ்’ என்னுள் ஏறியது, கந்தக மணத்தை சுவாசித்தேன். இறந்துபோன உறவைப் பதுங்கு குழியில் புதைத்து, கண்ணீர் சொரிந்தேன். தியாகங்களை ஓம் என்று ஒப்புக்கொள்ள என் மனம் தயங்கவில்லை. வீரம் விழுந்துபட்டதை எண்ணி துடிதுடித்தது மனது. ஓம், அதுதான் படைப்பு, அதுவேதான் புனைவு. புனைவு என்றால் ‘தன்னுள் வாங்கி தான் அதுவாக நின்று, பிறர் மீது அந்த உணர்வைக் கடத்திக் கவியச் செய்வது’. என் அனுபவத்தை நான் எழுதுவது எளிது. அதில் புனைவு உண்டுதான்.

என் அனுபவத்தை கலைத்துவ நெறிப் பட்டு அந்தந்தப் பருவத்துக்குரிய மனநிலைக்குள் சென்று படைப்பதும் ஒரு புனைவு தான். அது தனி மனித நிலை. ‘ஆதிரை’ புனைவு வழிப்பட்டு பேரிலக்கியமாகி நிற்கின்றது.

ஈழத்துப் படைப்புக்களில் ஆரம்பத்தில் நல்ல புனைவிலக்கியங்கள் சாத்தியமாகின. தூரத்துப் பச்சை (கோகிலம் சுப்பையா), இனிப்படமாட்டேன் (சி.வி.வேலுப்பிள்ளை), தில்லை ஆற்றங்கரையில் (இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்), காட்டாறு (செங்கையாழியான்) என்று சிலவற்றைக் குறிப்பிடலாம். சிங்கள மொழியில் மார்டின் விக்ரமசிங்க எழுதிய `கம்பேரலியா’ (கிராமப் பிறழ்வு) மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டிய ஒரு புதினம். தமிழ் நாட்டில் புனைவுப் புதினம் என்பதில் வெற்றி பெற்ற நூற்றுக்கணக்கான நூல்களை என்னால் பட்டியலிட முடியும்.

ஈழத்துத் தமிழில் சயந்தன் ‘ஆதிரை’ என்ற புதினத்தைத் தந்து சிலபல வெளிகளைத் தன் புனைவினால் இட்டு நிரப்புகின்றார். ஒரு சமூகம், நான்கைந்து குடும்பங்கள், இருபது முப்பது மனிதர்கள், நான்கைந்து தளங்கள், பெரும் நிலப்பரப்பு, 35 வருடகாலம், இயற்கை, சூழல், தொழில், இன்னும் எத்தனை அம்சங்கள் உள்ளனவோ அத்தனையையும் புனைவினூடாக சயந்தன் எமக்குள் ஏற்றுகிறார். `சந்தர்ப்பமே இல்லை இவ்வாறான ஒரு புனைவை நாம் கண்ணுறுவதற்கு’!

ஷோபா சக்தி எழுதிய ‘பொக்ஸ் கதைப்புத்தகம்’ புனைவு வழிப்பட்டு நமக்கு இன்னோர் உலகத்தையும் நிலத்தையும் காட்டியது. புனைவு வழிப்படுத்திய அந்தப் புதினத்தையும் நான் மெச்சுவேன். ஆனால், அது காட்டிய உலகம் மாயாலோகம். அங்கு வாழ்ந்த மனிதர்கள் இரத்தமும் சதையுமானவர் அல்லர், ஷோபா சக்தி பிடித்துப் பிடித்து வைத்த உருவங்கள் அவை. அங்கு ஒலிக்கும் குரல்கள் யாவும், ஷோபா சக்தியின் வாய் திறந்து வருபவை. மேலாக அதன் பூடக அரசியல் சொல்லும் செய்தி மானுட தர்மத்திற்கு உரியதல்ல.

முடிவுக்கு வருகிறேன். இப்பத்தியின் நோக்கம் நிச்சயமாக ஒன்றுதான் - சயந்தன் எழுதிய `ஆதிரை’ எனும் புதினம் அரசியல், இலக்கியத் தளத்தில் சகலராலும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. அதை நான் உரத்துச் சொல்கிறேன்.

Pin It