தம் நிலத்தில் விளைந்த பொருள்வழிக் கிடைக்கும் பணத்தில் முதலில் உப்பை வாங்குகின்ற வழக்கம் விவசாயி களிடம் உண்டு. தமது நெடுநாள் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தின் முதல் செலவு உப்பிற்கானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை அவ்வழக்கம் வெளிப்படுத்துகின்றது. விவசாயியான என் தந்தையார் இன்றைக்கும் இந்த வழக்கத்தை மறவாமல் பின்பற்றி வருவதைக் கண்டு வருகிறேன். உப்பு தமிழர் வாழ்க் கையில் இன்றியமையாத ஒரு பொருளாக இருந்து வருகின்றது. பொழுது சாய்ந்த பின்னர் உப்பைக் கடனாகக் கேட்கின்ற, கொடுக்கின்ற வழக்கமில்லை என்பதை இன்றைக்கும் கிராமத்தில் காணமுடியும். பெண் பிள்ளைகளுக்கு வரதட்சணையாகக் கொடுக்கும் பொருளிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை. தமிழர் மரபில் உப்பு ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல; உணர்வு சார்ந்த பொருளாகவும் கருதப்பட்டு வருகிறது என்பதை இவ்வழக்கங்கள் வெளிப்படுத்துகின்றன.

salt

தமிழர்கள் உப்பை உயர்வாகக் கருதியதால்தான் ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று பழமொழி பாடினார்கள். உணவில் உப்பு இன்றியமையாப் பொருள் என்பதால் ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ எனப்பட்டது. மனித வாழ்க்கையின் மையப் பொருளாக அமைந்த காரணத்தால் சங்கப் புலவர்கள் உப்பை ‘அமிழ்தம்’ என்று அழைத்து மகிழ்ந்துள்ளனர். நல்லந்துவனார் ‘கடல்விளை அமுதம்’ என்றும், சேந்தன் பூதனார் ‘வெண்கல் அமிழ்தம்’ என்றும் உப்பைப் புகழ்ந்து பாடியுள்ளனர். உப்பை அமிழ்தமாகத் தமிழர்கள் கருதியுள்ளனர். தமிழர் பார்வையில் உப்புதான் அமுதம். புராணங்கள் கூறும் அமுதம் பொய்யானது என்று சங்கப் புலவர்கள் சாட்சி சொல்லியிருக்கின்றனர். உப்பை அமிழ்தம் என்று சுட்டும் இரு பாடல்கள் நற்றிணையிலும் அகநானூற்றிலும் இடம்பெற்றுள்ளன.

திருமணம் செய்துகொள்ளாமல் களவொழுக்கத்தில் பல காலம் ஆடவனொருவன் ஈடுபட்டு இன்பம்கண்டு வருகிறான். ஒருநாள் காதலி வீட்டு வேலி ஓரமாக வந்து காதலியைக் காண்பதற்காகக் காத்திருக்கிறான். அப்பொழுது காதலிபடும் துன்பம் அனைத்தும் கேட்டு விரைந்து மணம் முடிக்கத்தக்க வகையில் காதலியின்

தோழி காதலிக்குக் கூறுவதுபோல அந்த ஆடவன் கேட்கச் சொல்லுகிறாள். நல்லந்துவனார் பாடிய

அந்தப் பாடல் நற்றிணையில் இடம்பெற்றுள்ளது. அப்பாடலில் உப்பைக் ‘கடல்விளை அமுதம்’ என்று அழைத்து மகிழ்ந்துள்ளார் சங்கப் புலவர். அப்பாடலடிகள்

யாம்செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை
வருந்தல் வாழி தோழி யாம் சென்று
உரைத்தனம் வருகம் எழுமதி புணர்திரைக்
கடல்விளை அமுதம் பெயற்கு ஏற்றாஅங்கு
உருகி உகுதல் அஞ்சுவல் உதுக்காண் (நற். 88: 1-5)

என வருகின்றன.

‘தோழி! நாம் முன்னர்ச் செய்த வினை காரணமாக நீ துன்பப்படுகிறாய். இதனால் வருந்த வேண்டாம். நாம் படும் துன்பத்தைக் காதலனிடம் சென்று உரைப்போம். என் உடன் வா. கடலிலே விளைந்த அமுதம் (உப்பு) மழை பெய்வதால் கரைந்து போவதுபோல உள்ளம் உருகி வருந்துகிறாய்’ என்று அந்தத் தோழி உரைப்பதாக அப்பாடல் நீண்டு செல்லும். நெய்தல் நிலத்தில் உப்பளங்களில் பாத்திகள் அமைத்துக் கடல் நீரைப் பாய்ச்சி விளைவித்துக் குவித்து வைத்திருக்கும் உப்புக் குவியலில் மழைபெய்தால் எப்படி கரைந்து உருகுமோ அப்படி உருகியதாம் தலைவி உள்ளம். உப்பு விளையும் நெய்தல் நிலப் பகுதியில் நல்லந்துவனார் வாழ்ந்திருக்கக் கூடும். அதனால்தான் உப்புக் குவியல் மழையில் உருகும் காட்சியைக் காதலி உள்ளம் உருகுதலுக்கு உவமிக்க முடிந்திருக்கிறது. உப்பை அமுதம் என்று அழைத்து மகிழ்ந்திருக்கிறார்.

களவொழுக்கத்துக்கு இடையூறு உண்டானதைக் கண்ட காதலியருத்திச் சுற்றத்தார் அறியாமல் இரவுப் பொழுதில் தாம் விரும்பும் காதலனோடு சென்று விடுகிறாள். அவள் சென்ற பாலை நில வழியை நினைத்து வளர்ப்புத்தாய் வருந்திப் புலம்புவதாய் அமைந்த சேந்தன் பூதனார் பாடலொன்று அக நானூற்றில் இடம்பெற்றுள்ளது. இப்பாடலில் ‘வெண்கல் அமிழ்தம்’ என்று உப்பு உரைக்கப் பட்டுள்ளது.

அணங்குடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம்
குடபுல மருங்கின் உய்ம்மார், புள்ஓர்த்துப்
படை அமைத்து எழுந்த பெருஞ்செல் ஆடவர்
நிரைப்பரப் பொறைய நரைப்புறக் கழுதைக்
குறைக்குளம்பு உதைத்த கல்பிறழ் இயவு (அகம். 207: 1-6)

‘கடலினது நீர் பரவிய உப்பளத்தில் விளைந்து நன்கு காய்ந்த அமிழ்தமாகிய வெண்ணிற உப்பினை மேற்குத் திசையில் உள்ள நாடுகளுக்குக் கொண்டு சென்று விற்பதற்காக, வீரம் மிக்க ஆடவர் நல் நிமித்தம் (நல்ல நேரம்) பார்ப்பர். அது தெரிந்தவுடன் படைகளை ஆயத்தம் செய்து உப்பு மூட்டைகளை வெண்மையான முதுகை உடைய கழுதைகளின் மீது ஏற்றிக்கொண்டு செல்வர். மலைச் சாரலில் அவை செல்லும் போது குளம்புகள் உதைப்பதால் கற்கள் பிறழ்ந்து கிடக்கும். அப்படிப்பட்ட கொடுமையான பாலைநில வழியில் எம் மகளை அழைத்துக்கொண்டு போயிருக்கிறானே கொடுமைக்காரன்’ என்று வளர்ப்புத்தாய் புலம்புவதாக அந்தப் பாடல் நீண்டு செல்லும்.

இப்பாடல், நெய்தல் நிலப் பகுதியில் விளைந்த உப்பைப் பிற நிலப் பகுதிகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்யக்கூடிய வரலாற்றுக் குறிப்பை வெளிப்படுத்துகின்றது. சங்க காலத்தில் உப்பு வணிகத் தொழில் நடைபெற்றுள்ளதை இதன்வழி அறிய முடிகின்றது. நெய்தல் நிலமாகிய கடற்கரைப் பகுதிகள் தமிழ்நாட்டைச் சூழ்ந்திருந்த காரணத்தால் பரவலாக உப்பளங்கள் இருந்துள்ளன. தமிழ்நாட்டில் இன்றைக்கும் இத்தொழில் சார்ந்த வாணிபம் சிறப்பாக உள்ளதைக் காணமுடியும்.

உப்பு தமிழர் வாழ்க்கையில் நீண்ட பாரம்பரியம் மிக்கதாகவும் ஆழமான பண்பாட்டுக் குறியீடாகவும் இருந்துவந்துள்ளது. இன்றைய தமிழர்கள், பாரம்பரியம் அறியாமல் உப்பைச் ‘சால்ட்’ ((Salt)) என்று அழைத்து மகிழ்கின்றனர்; கல் உப்பு, தூள் உப்பு இரண்டையுமே ‘சால்ட்’ என்று அழைப்பதைத் தமிழர்கள் பெருமையாகக் கருதுகின்றனர். பண்பாட்டுத் தாக்கத்தால் வந்த பாதகம் இது. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்று பாடிய தமிழன் ‘உப்பு’ என்ற சொல்லை மறந்துவருகிறான்.

துணைநின்ற நூல்கள்

1. பரிமணம், அ.ம. & பாலசுப்பிரமணியன், கு. வெ. (ப.ஆ.); செயபால், இரா. (உ.ஆ.). 2011 (4ஆம் பதிப்பு). சங்க இலக்கியம் அகநானூறு (தொகுதி -1, 2) சென்னை: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.

2. நாராயணசாமி ஐயர், அ. (பதிப்பும் உரையும்). 1915. எட்டுத்தொகையுளன்றாகிய நற்றிணை, சென்ன பட்டணம்: சைவ வித்தியானுபாலனயந்திர சாலை.

(குறிப்பு: இதன் சுருங்கிய வடிவம் 14.12.2014 அன்று ‘தி இந்து’ இதழில் வெளியாகியிருந்தது)

Pin It