திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறித்த ஒரு தங்க நாணயம் ஆங்கிலேயக் கிழக் கிந்தியக் கும்பினி அரசால் 16-ஆம் நூற்றாண்டில் சென்னையிலிருந்து வெளியிடப்பட்டது என்பது இதுவரை எவருக்கும் தெரிந்திராத ஒரு வியப்பான செய்தியாகும்.

கும்பினியார் வெளியிட்ட காசு

கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சி யகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங் களின் பட்டியலில் முதல் தொகுதியில் இந்தத் தங்க நாணயத்தைப் பற்றிய ஒரு சிறுகுறிப்பு முதன் முதலாகக் காணப்படுகிறது.  இரட்டை வராகன் என்று அழைக்கப்பட்ட ஒரு தங்க நாணயத்தின் முன்புறத்தில் அமர்ந்த நிலையில் ‘விஷ்ணு’வின் திருவுருவமும், பின்புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரமும் பொறிக்கப்பட்டுள்ளன என்று இக்குறிப்பு தெரிவிக்கிறது. 

இக்காசு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் சென்னை அரசால் 1819க்கு முன்னர் வெளியிடப் பட்டது என்றும், இது புத்தம் புதியதாகக் காணப் படுவதால் அச்சிடப்பட்டும் புழக்கத்திற்கு வெளியிடப் படாத நாணயமாக இருக்க வேண்டும் என்றும், இதே போன்று நான்கு நாணயங்கள் மட்டுமே கிடைத் துள்ளன என்றும், அவற்றில் இரண்டு லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்திலும், மற்ற இரண்டு கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்திலும் சேகரித்து வைக்கப் பட்டுள்ளன என்றும் இக்குறிப்பிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.

மேற்கண்ட குறிப்பில் இக்காசில் காணப்படும் உருவம் ‘விஷ்ணு’ என்று தவறாக அடையாளம் காட்டப்பட்டதாலும், நாணயத்தின் படம் அந்த நூலில் தரப்படாததாலும், சென்னையி லிருந்து கும்பினி அரசு வெளியிட்ட பல ‘நட்சத்திர பகோடா’ காசுகளில் இதுவுமொன்று என்று கருதி நாணயவியல் அறிஞர்கள் இந்த அரிய நாணயத்தைப் பற்றி மேலும் ஆய்வு செய்யாமலே விட்டுவிட்டனர் என்று தோன்றுகிறது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் கல்கத்தா பல்கலைக்கழகத்து வரலாற்றுப் பேராசிரியர் பி.என். முகர்ஜி கல்கத்தா அருங்காட்சியகத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தங்க நாணயங்களின் பட்டியலை மட்டும் தெளிவான வண்ணப்படங்களுடன் வெளியிட்டுள்ளார்.  இந்நூலில்தான் முதன்முதலாக இங்குக் குறிப்பிடப்படும் தங்க நாணயத்தின் வண்ணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  மேலும் இந்திய நாணய வரலாற்றிலேயே மிகச் சிறந்த தங்க நாணய வெளியீடுகளில் இதுவுமொன்று என்று இந்த நூல் சுட்டிக் காட்டியிருக்கிறது. காசின் முன்புறம் அமர்ந்த நிலையில் காணப்படும் திருவுருவம் ‘முனிவராகவோ அல்லது தெய்வமாகவோ’ இருக்கலாம் என்று முகர்ஜி கருத்துத் தெரிவித்துள்ளார்.

நாணயத்தைப் பற்றிய விவரங்கள்

காசின் முன்புறத்தில், அமர்ந்த நிலையில் ஒரு முனிவரின் திருவுருவம் காணப்படுகிறது.  அவர் ஒரு பீடத்தின்மீது பத்மாசனமிட்டுத் தியான நிலையில் அமர்ந்திருக்கிறார்.  தொடையின் மேல் உள்ள வலது கை விரல்கள் மூடி ஒரு எழுத்தாணியை வைத்துள்ள பாவனையிலும், இடது கை ஒரு சுவடியை ஏந்தி உள்ள பாவனையிலும் உள்ளன.  இடையில் தட்டுச் சுற்றாக வேட்டியும், இடது தோளில் மடித்துப் போட்ட துண்டும் அணிந்துள்ளார்.  மழித்த தலை; தலைக்கு மேலே ஒரு குடை; பீடத்துக்கு முன் ஒரு தீர்த்த பாத்திரம் காணப்படுகிறது.  காசின் பின் புறத்தில் ஐந்துமுனை நட்சத்திரம் புள்ளிகளாலான வட்டத்துக்குள் பொறிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த முனிவர்?

காசின் முன்புறம் காணப்படும் உருவத்தின் மேனியில் எந்தவிதமான ஆபரணங்களும் இல்லாத தாலும், சுற்றிலும் கொடி, ஆயுதம் போன்ற எந்த விதமான சின்னங்களும் காணப்படாததாலும் இவ் வுருவம் எந்த ஒரு தெய்வத்தையோ அல்லது அரசனையோ குறிக்கவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது. மேலே உள்ள குடை, அமர்ந்துள்ள பீடம், தீர்த்த பாத்திரம், பத்மாசனத்தில் தியான நிலை, எளிய உடை ஆகியவற்றிலிருந்து இத்திருவுருவம் ஒரு முனிவரைக் குறிக்கிறது என்று நிச்சயமாகக் கூறலாம்.  மேலும் அவருடைய இடையில் உள்ள வேட்டி தட்டுச் சுற்றாக இருப்பதினாலும், தோளில் துண்டை மடித்துப் போட்டுள்ள பாங்கிலிருந்தும் இவர் ஒரு தமிழ் முனிவர் என்று அடையாம் காண முடிகிறது.  இவர் சுவடியை ஏந்தியுள்ள பாவனையில் சித்திரிக்கப் பட்டுள்ளது. இவர் ஒரு ஆசானாகவோ பெரும் புலவராகவோ இருக்க வேண்டும் என்று உணர்த்துகிறது.  யார் இந்த முனிவர்? இவருடைய திருவுருவம் கும்பினியார் போட்ட தங்கக் காசில் எப்படி இடம் பெற்றது? காசில் எழுத்துக்கள் இல்லாத நிலையில் இக்கேள்விகளுக்குப் பலதரப்பட்ட அகச்சான்று களையும் புறச்சான்றுகளையும் கொண்டுதான் விடை காண முடியும்.

எளிய உடையுடன் தியான நிலையில் ஒரு குடையின் கீழ் அமர்ந்து ஒரு நூலை ஏந்தியுள்ள பாவனையில் சித்திரிக்கப்பட்டுள்ள இத் திருவுருவம் திருவள்ளுவப் பெருமானுடையதாக இருக்கலாமோ என்ற ஓர் எண்ணம் என் மனதில் பளிச்சிட்டது.  இந்த யூகத்தை உறுதிப்படுத்திக் கொள்ளச் சென்னை ஆவணக் காப்பகத்தில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வரும் கும்பினி அரசாணைகளையும், அக்கால நாணய சாலையின் அறிக்கைகளையும் பார்வையிட்டதில் சில முக்கியமான தடயங்கள் கிடைத்துள்ளன.  இவ் வாய்வுக்கு எல்லா வசதிகளையும் செய்து உதவிய ஆவணக் காப்பகத்தின் ஆணையர் திரு. எம்.பரமசிவம் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்.

காசின் காலம்

இக்காசின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள ஐந்து முனை நட்சத்திரச் சின்னத்திலிருந்து, ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினி அரசு சென்னையிலிருந்து 19-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் வெளி யிட்ட “நட்சத்திரப் பகோடா” அல்லது “வராகன் என்று அழைக்கப்பட்ட பல தங்க நாணயங்களில் இதுவும் ஒன்று என்று தெரிகிறது.  மேலும் இக்காசு இயந்திரத்தின் மூலம் மிகவும் நேர்த்தியாக அச்சடிக்கப்பட்டுள்ளது.  கும்பினி அரசு சென்னை ஜார்ஜ் கோட்டையில் முதன் முதலாக 1807-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இயந்திர நாணய சாலையை நிறுவித் தங்கம், வெள்ளி மற்றும் செப்புக் காசுகளை வெளியிடத் தொடங்கியது. 

1817-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தங்க வராகன்கள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது.  ஆகையால் இக்காசு 1807-ஆம் ஆண்டு முதல் 1817-ஆம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்துக்குள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகச் சொல்ல முடியும்.  மேலும், 1616-ஆம் ஆண்டு ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியார் கல்கத்தாவில் வணிக மையம் நிறுவி 200 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாட 1816-ஆம் ஆண்டு சில சிறப்பு நாணயங்களை வெளியிட்டார்கள்.  அவற்றுள் இதுவும் ஒன்றாக இருக்கலாம்.

எல்லிஸ் துரையும் திருக்குறளும்

அக்கால கட்டத்தில் ப்ரான்சிஸ் வைட் எல்லிஸ் என்னும் ஆங்கிலேய அதிகாரி சென்னை மாவட்டக் கலெக்டராகப் பணியாற்றி வந்தார்.  1796-ஆம் ஆண்டு ஆட்சிப் பணியில் சேர்ந்த அவர் சில ஆண்டுகளிலேயே தமிழ் முதலிய தென்னிந்திய மொழிகளிலும் வட மொழியிலும் பெரும் புலமை பெற்றுவிட்டார்.  தமிழ் நூல்கள் அச்சேறியிராத அக்காலத்திலேயே அவர் ஏட்டுச் சுவடிகளிலிருந்து முறையாகத் தமிழைக் கற்றுத் தேர்ந்தார்.  தமிழ் முதலிய திராவிட மொழிகள், சம்ஸ்கிருதம் போன்ற இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்ற உண்மையை முதன்முதலாக உலகுக்கு அறிவித்த பெருமை இவரையே சாரும்.

எல்லிஸ் துரைக்குத் திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் அளப்பரிய பற்று இருந்தது.  திருக்குறளிலிருந்து பல குறள்களைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தெளிவான உரையுடன் ஓர் அரிய நூலை இவர் எழுதினார்.  இதுவே திருக்குறளின் முதல் ஆங்கில மொழி பெயர்ப்பாகும்.  துரதிருஷ்டவசமாக அந்நூல் முற்றுப் பெறும் முன்னரே எல்லிஸ் துரை இராமநாதபுரத்தின் அருகே முகாமிட்டு இருந்த போது தற்செயலாக விஷ உணவை அருந்தி அகால மரணமடைந்தார்.  அவர் இறந்த பின் வெளிவந்த அந்த நூலை மீண்டும் சிறந்த முறையில் ரா.பி. சேதுப்பிள்ளை பதிப்பித்துள்ளார்.  இந்நூலில் எல்லிஸ் துரை முந்நூறுக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களிலிருந்து காட்டியுள்ள மேற்கோள் களிலிருந்து அவருடைய ஆழ்ந்த புலமை வெளிப் படுகிறது.  இன்று காணாமற் போய்விட்ட வளையாபதி போன்ற சங்க நூல்களிலிருந்தும் இவர் மேற்கோள் களைக் கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கல்வெட்டில் திருக்குறள்

எல்லிஸ் துரை திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீதும் கொண்டிருந்த பற்றுக்கு எடுத்துக்காட்டாக இரு அரிய கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. சென்னை நகரில் 1818-இல் கடும் குடிநீர்ப் பஞ்சம் ஏற்பட்டது.  அப்போது சென்னைக் கலெக்டராகப் பணியாற்றிய எல்லிஸ் துரை பெரு முயற்சி செய்து நகரில் 27 இடங்களில் குடிநீர்க் கிணறுகளைத் தோண்ட ஏற்பாடுகள் செய்தார்.  அக்கிணறுகளில் ஒன்று இராயப் பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளது.  இக்கிணற்றின் கைப்பிடிச் சுவரில் பதிக்கப்பட்டிருந்த ஒரு கல்லில் எல்லிஸ் துரை 1818-ஆம் ஆண்டில் ஒரு நீண்ட கல்வெட்டை வெட்டி வைத்தார் (இக் கல்வெட்டு இப்பொழுது தமிழ்நாடு தொல்லியல் துறையின் மதுரை அருங்காட்சி யகத்தில் உள்ளது). அதில்,

... சயங்கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்

ஆழியிலிழைத்த வழகுறு மாமணி

குணகடல் முதலாக குடகட லளவு

நெடுநிலந் தாழ நிமிர்ந்திடு சென்னப்

பட்டணத் தெல்லீச னென்பவன் யானே

பண்டார காரிய பாரஞ் சுமக்கையிற்

புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்

தெய்வப் புலமை திருவள் ளுவனார்

திருக்குற டன்னிற் றிருவுளம் பற்றிய

“இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணு நாட்டிற் குறுப்பு”

என்பதின் பொருளை யென்னுளாய்ந்து...

என்ற வரிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார் (குறள் 737).  மேலும் எல்லிஸ் துரை அக்காலத்தில் சென்னப்பட்டணத்துப் பண்டார காரிய பாரம் சுமந்திருந்ததையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.  அக்காலத்தில் நாணய சாலை (tக்ஷீமீணீsuக்ஷீஹ்) பண்டாரத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வந்தது என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டும்.

மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரில் உள்ள எல்லிஸ் துரையின் கல்லறையின் மீது பொறிக்கப் பட்டுள்ளது. இதில் ‘எல்லீசன் என்னும் இயற் பெயருடையோன்’

...திருவள்ளுவப்பெயர்த் தெய்வஞ் செப்பி

யருள்குற ணூலு ளறப்பா லினுக்குத்

தங்கு பலநூததாரண கடலைப்பெய்

திங்கி லீசுதனி லிணங்கமொழி பெயர்த்தோன்...

என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லிஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அவருக்குத் திருவள்ளுவர் மீதும், திருக்குறள் மீதும் இருந்த மிகுந்த ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றது.

எனவே எல்லிஸ் துரை 1810-19 ஆம் ஆண்டு களில் சென்னைக் கலெக்டராகப் பணியாற்றி வந்த போது பண்டார காரியத்தையும் செய்து வந்தார் என்றும், அதே சமயத்தில் திருக்குறளை முற்றிலும் ஓதி உணர்ந்து அதன் அருமை பெருமைகளை அறிந்து அதற்கு ஆங்கிலத்தில் ஓர் உரை எழுதினார் என்றும் மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் சான்றுகள் மூலம் தெரிய வருகின்றது.  எல்லிஸ் துரை தமது அரசுப் பணியில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தாம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த திருக்குறளை இயற்றிய திருவள்ளுவப் பெருமானின் திருவுருவத்தைக் கும்பினி அரசின் பெரிய தங்க நாணயமான இரட்டை வராகனில் பதிப்பிக்க ஏற்பாடுகள் செய்தார் என்று நம்ப இடமிருக்கிறது.

சென்னையில் உள்ள ஆவணக் காப்பகத்தில் நான் ஆய்வு செய்த போது, சென்னை நாணய சாலையில் அச்சடிக்கப்பட்ட தங்க நாணயங்களின் மாதிரிகள் பெட்டிகளில் வைக்கப்பட்டு, சென்னை அரசு மூலமாகக் கல்கத்தாவிலிருந்த மத்திய அரசுக்கும் லண்டனில் செயல்பட்ட கும்பினி டைரக்டர்களின் ஆணையத்திற்கும் அனுப்பப்பட்ட குறிப்புகள் கிடைத்தன.  ஆயினும் அக்கடிதங்களுடன் இணைக்கப் பட்டிருந்த பட்டியல்களின் நகல்களோ, காசுகளின் வரைபடங்களோ கிடைக்காததால் இவ்வாண்டு களில் அச்சிட்ட இரட்டை வராகன்களில் இதுவும் ஒன்றா என்று கண்டுபிடிக்க முடியவில்லை.  என்றாலும் இக்காசுகள் லண்டனிலும் கல்கத்தா விலும் உள்ள அருங்காட்சியகங்களில் மட்டுமே கிடைப்பதால் அவை மேற்கூறியவாறே அந்த இடங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.

அச்சிடப்பட்டும் இந்தத் தங்க நாணயம் புழக்கத்திற்காக ஏன் வெளியிடப்படவில்லை என்ற கேள்விக்கு இப்பொழுது விடை காண்பது கடினமே.  ஒருக்கால் இக்காசின் மாதிரிகள் கல்கத்தாவில் இருந்த மத்திய அரசுக்கும், லண்டனில் இருந்த கும்பினி ஆணையத்துக்கும் போய்ச் சேரும் முன்னர், இனிமேல் வராகன்களை அச்சடிப்பது இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம்; அல்லது திருவள்ளுவப் பெருமானின் அருமை பெருமைகளை உணராது, மத்திய அரசும் கும்பினி நிர்வாகமும் இக்காசை வெளியிடும் திட்டத்தை நிராகரித்திருக்கலாம்.  மேலும் ஆவணங்கள் கிடைத்தால்தான் இப்பிரச்சினைக்குத் தெளிவான விடை கிடைக்கக் கூடும்.

அக்காலத்திய நாணய சாலை ஆவணங்கள் இப்பொழுதும் மிகவும் சிதிலமாகவும் இன்னும் சீர்படுத்தப்படாமலும் இருப்பதால் அவற்றை முற்றிலும் ஆய்வு செய்ய இயலவில்லை.  எனினும் கிடைத்துள்ள எல்லாச் சான்றுகளையும் தொகுத்து ஒருங்கே நோக்கினால் திருக்குறளுக்கு உரை கண்ட எல்லிஸ் துரையின் செல்வாக்கால் திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் இத்தங்க நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  சென்னை ஆவணக் காப்பகத்தில் மேலும் தேடினால் இம்முடிவுகளை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இக்காசில் காணப்படும் திருவுருவத்தையும் சென்னை மயிலையில் உள்ள திருவள்ளுவர் கோயிலில் அண்மையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். சுமார் 14-15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்படும் இக் கற்சிலையைப் பற்றித் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர் ச. கிருஷ்ணமூர்த்தி பின்வருமாறு கூறுகின்றார்:

'இச்சிலையின் உருவம் பீடத்தின் இரு கால் களையும் மடக்கி அமர்ந்த நிலையில் காணப் படுகிறது.  தியான நிலையில் வலக்கை சின்முத்திரை யுடன் அக்கமாலை ஏந்தியும், இடக்கை ஓலைச்சுவடி ஏந்தியும், இச்சிலை காணப்படுகிறது. இவ்வுருவத்தின் தலையை முடிந்த கொண்டையும், முகத்தில் நீண்ட தாடியும் உடலில் ஓடும், பட்டையான அங்கியும், இடையில் ஆடையும் அணி செய்கின்றன.'

இன்று தமிழக அரசின் மூலம் பிரபலமாகி இருக்கும் திருவள்ளுவரின் திருவுருவப் படமும் ஏறத்தாழ இக்கற்சிலையின் அமைப்பை ஒத்துள்ளது எனலாம்.

இக்காசில் காணப்படும் திருவுருவத்திற்கும் மற்ற இரு உருவங்களுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் கண்கூடாகத் தெரிகின்றன.  ஆயினும் ஒரு முக்கிய வேறுபாடும் பளிச்சென்று தெரிகிறது.  காசில் உள்ள முனிவரின் திருவுருவத்தில் தலை மழித்தும், முகத்தில் தாடி மீசை இன்றியும் இருப்பது குறிப்பிடத்தக்க வேறுபாடாகும்.

திருவள்ளுவர் சமணரா?

இக்காசில் முனிவரின் தலை மீதுள்ள குடையையும், மழித்த தலையையும், முகத்தையும் காணும் போது இவரை உருவகப்படுத்தியவர்கள் இவர் ஒரு சமண முனிவர் என்று கருதியுள்ளார்கள் எனத் தெளிவாகத் தெரிகிறது.  திருக்குறளில் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ போன்று வரும் சொல் தொடர்கள் வள்ளுவப் பெருமான் சமண சமயத்தினர் என்று கொள்ளுவதற்கு வலுவான சான்றுகள் ஆகும்.

வேண்டுகோள்

வள்ளுவப் பெருந்தகையின் திருவுருவத்தைத் தாங்கி நிற்கும் பொற்காசு ஓர் அரிய கலைப் பொக்கிஷம் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.  திருவள்ளுவப் பெருமானின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருக்கும் நான்கு தங்க நாணயங்களில் இரண்டு லண்டன் பிரிட்டிஷ் மியூசியத்தில் நமக்கு எட்டாக்கையில் உள்ளன.  நம் நாட்டிலேயே கல்கத்தாவில் இந்திய அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற இரு காசுகளில் ஒன்றையாவது நிரந்தரக் கடனாகப் பெற்று அக்காசை திருவள்ளுவப் பெருமான் வாழ்ந்த சென்னையிலுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டுமெனக் கோருகின்றேன்.

துணை நூல்கள்

  • Mukherjee B.N. The Indian Gold: An Introduction to the Cabinet of Gold Coins in the Indian Museum, Calcutta, 1990. p. 85, No. 195, Pl. IXA & B: No. 195 Pl. X, n.
  • Sethupillai, R.P. (ed.) Tirukkural: Elli’s Commentary, University of Madras, 1955.
  • Vincent A. Smith, Catalogue of Coins in the Indian Museum, Calcutta, Vol. Oxford, 1906, p. 319, Nos.: I. M.2 & 3.
  • கிருஷ்ணமூர்த்தி, ச. திருக்குறள் பழைய உரை, 1993 (ஆராய்ச்சி முன்னுரை), தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை.

நன்றி : தமிழியல் / ஜூன், 2008

Pin It