திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றில், சட்டமன்றம் என்பது கூடிக்கலையும் கேளிக்கைக் கூடமல்ல. மக்கள் பிரச்சினகளை தீர்க்கவும், மாநில உரிமைகளை மீட்டெடுக்கவும், விவாதங்கள் அரங்கேறும் போர்க்களமாக அது இருந்தது. அப்போர்க்களத்தில், இன்று திராவிட இயக்கத்தின் முன்கள வீரனாக நின்று , தமிழ்நாட்டு மக்களின் குரலாக, திராவிட இயக்க முரசமாக எதிரொலித்தது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முழக்கம்!
"எதிர்கட்சித் தலைவர் பதவிக்கு ஏன் இந்த உதயநிதி?" என்று கேட்டவர்களுக்கு, இன்றைய சட்டமன்ற உரை நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் விடையளித்திருக்கிறது.
“மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்படும்” என்று உறுதிபடக் கூறிய அவர் எதற்கும் அஞ்சாத, எவரையும் பணியாத அந்தத் துணிச்சல், கொள்கை வழிநின்ற உறுதி, அவர் ஐயா பெரியாரின் 'Bloodu' என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது .
ஆட்சியிலிருந்தபோது எப்படி "மக்களுக்கான அரசு" என்று திமுக பெயர் பெற்றதோ, அதேபோல் இன்று எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து "மக்களின் பாதுகாப்பு அரணாக" திமுக வீரியத்தோடு செயல்படும் என்ற உதயநிதியின் இன்றைய உரை, அவர் அறிஞர் அண்ணா 'Bloodu' என்பதைப் பறைசாற்றியது.
எங்கள் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்துள்ள புதிய அரசிற்கு வாழ்த்துகள் என்று கூறியதோடு , சட்டமன்றத்தில் "நாங்கள் சீனியர், எங்கள் அனுபவத்தை அறிவை உங்களுக்குப் பகிர்ந்து கொள்கிறோம். நீங்கள் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று ஆளுங்கட்சிக்கு விடுத்த வேண்டுகோள் அவரின் அரசியல் முதிர்வையும், மாநில உரிமையைப் பாதுகாக்கவும், மக்கள் விரோதத் திட்டங்களைச் சட்டமன்றத்தின் வாயிலிலேயே தடுத்து நிறுத்தவும் வல்ல ஆற்றல் மிக்கப் படையாக திமுக செயல்படும் என்ற அறைகூவல் அவர், தலைவர் கலைஞர் 'Bloodu' என்பதை அறுதியிட்டுக் கூறியது.
புதிய அரசின் பதிவியேற்பு விழாவில் வந்தே மாதரம் பாடலுக்கு முதலிடம் தந்து தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றமிடத்துக்கு தள்ளியதை கடுமையாகக் கண்டித்ததோடு இனியும் இது போல் தொடர்ந்தால் நாங்கள் விடமாட்டோம் என அரசுக்கும் முதல்வருக்கும் எச்சரிக்கை விடுத்தும் ஆளும் அரசின் மெத்தனத்தைச் சுட்டிக் காட்டியும், ஆளுங்கட்சியைத் தடுமாறச் செய்த ஆளுமைத் திறன் அவர் தளபதி ஸ்டாலின் 'Bloodu' என்பதை வெளிப்படுத்தியது.
“எதிர்வரிசை என்பது எங்களுக்குப் புதியதல்ல. நெருப்பாற்றில் நீந்திப் பழகியவர்கள் நாங்கள்! கருப்பு சிவப்புக் குருதி எங்கள் உணர்வுகளில் ஓடிக்கொண்டிருக்கும் வரை, தமிழ்நாட்டின் உரிமைகளை எவர் தட்டிப் பறிக்க நினைத்தாலும், அந்த முயற்சியைச் சட்டமன்றத்தில் திமுக சிதறடிக்கும்.” என்ற கர்ஜனை , மொத்தத்தில் சட்டமன்றத்தை அதிரச் செய்யும் வீரியம் மிக்க ஆளுமையாக உதயநிதி ஸ்டாலின் வலம் வருவார் என்பதை உலகுக்கு உணர்த்தியது.
- முனைவர் காந்தி பாபு