குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் தான் சாரதா சட்டம் என்பது பரவலாக அறியப்பட்டுள்ள செய்தியாகும். எனினும் அதற்குச் சாரதா சட்டம் என்னும் பெயர் எப்படி வந்தது என்பது ஒருபுறமிருக்க, அதனை நிறைவேற்றுவதற்கு வெள்ளையர் அரசு எடுத்த முயற்சிகள் மற்றும் அதற்குத் துணையாக நின்ற திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள், அதனைத் தடுத்து நிறுத்தப் பார்ப்பனர்கள் செய்த பல்வேறு முயற்சிகள் ஆகியன குறித்து, இன்றைய தலைமுறை, குறிப்பாகப் பெண்கள் அறிந்திடல் வேண்டும்.

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர், அரசுக்கு எழுதிய கடிதம் முதல் தூண்டுதலாக இருந்தது. 1880களில் அந்தக் கடிதம் எழுதப்பட்டது. 5 வயது, 6 வயதுப் பெண் குழந்தைகளுக் கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டி ருந்தார். அது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது.

வெகுண்டு எழுந்தார் பாலகங்காதர திலகர். தன்னுடைய கேசரி இதழில் இது குறித்த மிகக் கடுமையான கண்டனங்களையும், கட்டுரைகளையும் வெளியிடத் தொடங்கினார். இந்து மதத்தின் அடிப்படைக் கூறுகளில் எல்லாம் கைவைப்பதற்கு வெள் ளைக்காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று முழங்கினார். அவருடைய எழுத்து களுக்கு, அன்று இந்தியா முழுவதும் இருந்த, இந்துக்களிடையே பேராதரவு கிடைத்தது. இதுபோன்றதொரு சட்டத்தை எக்காரணம் கொண்டும் நிறைவேற்ற விடமாட்டோம் என்றார் திலகர்.

இவ்வளவுக்கும் அந்த சட்டம், ஒரு சாதாரண செய்தியைத் தான் முன் வைத்தது. 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது. இது நியாயமாகத்தான் படுகிறது என்று மராட்டி யத்தைச் சேர்ந்த டாக்டர் பண்டார்க்கர் போன்றவர்கள் கருத்து வெளியிட்டனர். நீதிபதி ராணடே, இந்தச் சட்டமுன்வடிவிற்கு ஆதரவாகத் தன்னுடைய சர்வஜன சபாவில் தீர்மானமே நிறைவேற்றினார். இவர்கள் இருவரும்கூட, பிறப்பால் பார்ப்பனர்களே எனினும், சமூகச் சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களாக இருந்தனர். திலகரின் கடுமையான கண்டனத்திற்கு இவர்களும் தப்பவில்லை.

மலபாரி, பார்சி மதத்தைச் சார்ந்தவர் என்பதால், அவருக்கு இந்துமதப் பண்பாடுகளில் தலையிடுவதற்கு எந்த உரிமையும் இல்லை என்று திலகர் எடுத்துவைத்த வாதம் மக்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றது. ஆதரவு குறைவாகவும், எதிர்ப்பு மிகக் கூடுதலாகவும் ஆகிவிட்ட நிலையில், அச்சட்ட முன்வடிவை அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டது.

மீண்டும் 1913இல் அதே மாதிரியான இன்னொரு சட்ட முன்வடிவை அரசு கொண்டுவந்தது. அப்போதும் ஆச்சார்யா போன்ற பார்ப்பனர்கள் சட்டமன்றத்திலேயே கடுமையாக எதிர்த்தனர். 'பூப்படையாத பெண்களுக்குத் திருமணம் செய்தால் சிறைத் தண்டனை என்கிறது உங்கள் அரசு. பூப்படைவதற்குள் திருமணம் செய்யவில்லை நரகத்திற்குப் போவீர்கள் என்கிறது எங்கள் இந்து மதம். நாங்கள் என்ன செய்வது?’என்றார் ஆச்சார்யா. அச்சட்ட முன்வடிவை, மெய்யறம் என்னும் தன் நூலில் வ.உ.சி. வரவேற்று எழுத, அதே நூலின் முன்னுரையில், சுப்பிரமணிய சிவா அதனைக் கண்டித்து எழுதி உள்ளதை நம்மில் பலர் அறிவோம். இப்படிப் பல்வேறு ஆதரவு எதிர்ப்புகளுக்குப்பின் மீண்டும் அது கிடப்பில் போடப்பட்டது.

1920களில் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. 1926இல் சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பிறகுதான் தமிழ்நாட்டில் பெண்விடுதலை இயக்கங்கள் வீறுகொண்டு எழுந்தன. 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே நீதிபதி மயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற பெரியவர்களும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதியார் போன்ற மாகவிஞர்களும் பெண்விடு தலைக்காக எழுதிக் குவித்தனர் என்றாலும், பெரியாருக்குப் பிறகே அது ஓர் இயக்கக் கோட்பாடாக வளர்ச்சி பெற்றது. அதன் விளைவாகப் பெண்கள் பலரே போராட்டக் களத்திற்கு வந்துசேர்ந்தனர். சிறு வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் கொடுமையைத் தகர்ப்போம் என்று முழங்கினர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போன்றவர்கள் அம்முயற்சியில் முன்னின்று பணியாற்றினர்.

இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு, 1929இல் மீண்டும் ஒரு முயற்சி நடைபெற்றது. இம்முறை அச்சட்ட முன்வடிவை ஹாபிலாஸ் சார்தா என்னும் ஆங்கிலேயர் முன் மொழிந்தார். அதனால்தான் அச்சட்டம் சார்தா சட்டம் என்று அறியப்பட்டு, காலப்போக்கில் சாரதாச் சட்டம் ஆகிவிட்டது. 1929 செப்டம்பர் 28ஆம் நாள் அது சட்டமாக நிறைவேற்றப்பட் டது. 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் நடைமுறையில் குழந்தைத் திருமணங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருந்திருக்கின்றன. எப்படி வரதட்சணை தடைச் சட்டமும், வெளிப்படையாகவே வரதட்சணை வாங்கும் பழக்கமும் இன்று ஒருசேர நடைமுறையில் உள்ளனவோ, அது போலவே அன்றும் நடந்திருக்கிறது. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநாடுதான், பெண் விடுதலையில் பல புதிய மைல் கற்களைத் தொடக்கி வைத்துள்ளது. வெறும் சட்டங்களால் மட்டும் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது என்பதைத் தந்தை பெரியார் அறிந்து வைத்திருந்தார். அதே வேளையில் சட்டத்தின் துணையும் அவசியத் தேவை என்பதையும் அவர் உணர்ந்திருந்தார். அதனால்தான் திராவிட இயக்கம் இரு முனைகளிலும் சமூக மாறுதலுக்காக முனைந்து பணியாற்றியது. சாரதாச் சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் அப்படித்தான் உருப்பெற்றன.

மாற்றம் தேவை, மாற்றம் தேவை என்று பலரும் இன்று கூறிக்கொண்டிருக் கிறார்கள். மாற்றம் என்பது எப்போதும் வளர்ச்சியை நோக்கியதாக இருக்க வேண்டும். இல்லையானால் அது ஏமாற்ற மாகவோ, தடுமாற்றமாகவோதான் ஆகிவிடும். உண்மையான, வளர்ச்சி நோக்கிய பல சமூக மாற்றங்கள் திராவிட இயக்கத்தினால்தான் இம்மண்ணில் ஏற்பட்டன என்பதற்கு இன்னும் பல வரலாற்றுச் சான்றுகள் உண்டு.

Pin It