20.04.2011 ஆனந்த விகடனில்...

tamilaruvi_manian_250மறைமுகமாக அல்ல... நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளயருக்கும் இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர்தான் அரசியல். தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதைவிட மலினமாக ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார். இந்திய அரசியலில், இதுவரை யார் வரக்கூடாது என்றுதான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக்கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள். என் வாக்கு... ஜெயலலிதா வரவேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக்கூடாது என்பதற்காக!

ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!

- தமிழருவி மணியன் 

கவிஞர் தணிகைச் செல்வன்:

thanigaiதமிழருவி மணியன் அவர்கள், இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் கலைஞர் முன்னிலையில், கலைஞர் அரங்கில் நடைபெற்ற ஒரு பெருங்கூட்டத்தில், பேசியவை இன்னும் நம் காதுகளைவிட்டு அகலவில்லை. அவர் பேசியவற்றில் ஒரு வரி இது - “நான் கலைஞரைத் தூற்றி வசைபாடியே அரசியலில் வளர்ந்தவன். அன்று நான் செய்த பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்த மாகத்தான் கலைஞரை இப்போது ஒவ்வொரு நாளும் போற்றிக் கொண்டுள்ளேன். அவர் புகழ் பாடுகிறேன்”

அருவியார் அவர்கள் கலைஞரிடம் இப்போது காண்கிற குறைகள் எல்லாம் அப்போதும் இருந்தன. குடும்ப அரசியல் இருந்தது. ஈழச் சிக்கல் இருந்தது. மின்வெட்டு இருந்தது. இவ்வளவையும் புறந்தள்ளி, அருவியார் கலைஞரை, அவருடைய சாதனைகளுக்காகப் பாராட்டினார்.

அவர் எப்போது மீண்டும் கலைஞரைச் சாடத் தொடங்கினார் தெரியுமா? இராயப்பேட்டை, பீட்டர்ஸ் காலனியில், அருவியார் குடியிருந்த அரசாங்க வீடு அவருக்கு மீண்டும் வழங்கப்படவில்லை என்பதாலேயே, அன்று முதல், அவர் மீண்டும் கலைஞரைத் தாக்கும் சொல்லடி நாயனார் ஆனார். தமிழ்ச் சமூகத்திற்கு ஆற்றிய அருவியாரின் மேற்படி நிகழ்வில், எந்த அளவு பொதுநலம் பொதிந்திருக்கிறது, எந்த அளவு தமிழ் நலம் சார்ந்திருக்கிறது, எந்த அளவு அவர் உரைகள் நம்பகமானவை என்பதைத் தமிழர்கள் அறிந்து கொள்ள முடியும்.

‘ஜெயலலிதா திருந்த மாட்டார். ஆனாலும் அவரை நான் ஆதரிக்கிறேன்’ என்கிறார் அருவியார். ‘  ’ஜெயலலிதா தமிழர்களின் எதிரிதான். ஆனாலும் கருணாநிதி ஒழிய வேண்டும் என்கிறார் நெடுமாறன். சாமானியர்களின் ஈழத் தேசியத்திற்காக, சீமானியர்கள் ஜெயலலிதாவுக்கு வாக்களிக்கிறார்கள். இது என்ன வரலாற்று விபத்து !

தமிழனின் தேசியப் பகைமை என்பது இந்தியத் தேசியம். அதன் தத்துவத் திரட்சிதான் பார்ப்பனீயம். அதன் பாசிச வடிவம்தான் ஜெயலலிதா. ஜெயலலிதாவை வீழ்த்தாமல் பார்ப்பனீயத்தை வீழ்த்த முடியாது ; பார்ப்பனீயத்தை வீழ்த்தாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது. பாசிசத்தை வீழ்த்தாமல் இந்தியத்தை வீழ்த்த முடியாது. இதுதான் தமிழ்த் தேசியத்தின் அடித்தளக் கோட்பாடு.

இதனுடன் முற்றும் பொருந்துவதன்று, கலைஞரின் செயல்பாடு. ஆனாலும், இதில் முரண்பாடு கொள்பவரல்லர் கலைஞர் என்பதை நாடறியும். இங்கேதான், கலைஞரின் தராசுத்தட்டு தாழ்ந்து நிற்கிறது.

தேர்தலில், தமிழர்களின் எதிரியான ஜெயலலிதாவை முறியடிக்காமல், கலைஞரை நோக்கிக் கணை வீசுகிறவர்கள் அத்தனை பேரும், தெரிந்தே தமிழ்த் தேசியத்திற்குத் துரோகம் செய்பவர்கள் ஆவார்கள்.

எனவே, அருவியின் கூற்றை, அறிவின் கூற்றாக ஏற்க வேண்டிய அவசியமில்லை. நமக்குள்ள கவலையயல்லாம், தமிழருவி மணியன் மீண்டும் தன் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் தேடிக் கலைஞரை அணுக நேர்ந்தால், கலைஞர் அதை ஏற்றுக் கொள்ளாமல் இருக்க வேண்டுமே என்பதுதான்.

 ஆ.கோபண்ணா, ஆசிரியர், தேசிய முரசு:

சமீபகாலமாகத் தமிழருவி மணியனின் பிதற்றல்கள் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கின்றன. கடந்த காலத்தில் என்ன பேசினோம், இப்போது என்ன பேசுகிறோம் என்பதைப் பற்றியயல்லாம் கிஞ்சித்தும் கவலையற்று, வாய்க்கு வந்தபடி வசைமாறிப் பொழிந்து வருகிறார். எந்த அரசியல் பின்னணியோ, வாக்கு வங்கியோ இல்லாத இவரைப் போன்றவர்கள், கருத்து என்ற போர்வையில் சர்ச்சைக்கு உரிய வி­யங்களைத் தனிமனிதராகக் கூறுவதால், ஏடுகளும் இவர்களது பேட்டிகளை வெளியிட்டுப் பக்கங்களை நிரப்பி வருகின்றன. இதைக் கூறுகிறவர்களுக்கும் கொள்கையில்லை, வெளியிடுபவர்களுக்கும் கொள்கையில்லை. இதுதான் இவர்களிடையே நிலவுகிற ஒற்றுமை !

gopanna_30020.04.2011 நாளிட்ட ‘ஆனந்த விகடன்’ இதழில், விகடன் மேடை என்ற பகுதியில் வாசகர் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த தமிழருவி மணியன்,  “மறைமுகமாக அல்ல; நேர்முகமாகவே இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை நான் ஆதரிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

நம்மைப் பொருத்தவரை, இவர் யாரை ஆதரிக்கிறார், யாரை எதிர்க்கிறார் என்பதைப் பற்றியயல்லாம் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. தனிமரம் தோப்பாகாது என்பது நமக்குத் தெரியும் !

இத்தகையை கருத்துகளைத் தமிழருவி மணியன் கூறுவதற்கு என்ன காரணம்? இதே தமிழருவி மணியன், முதல்வர் கலைஞர் அவர்களைப் பற்றி என்ன பேசினார் என்பதை நாடறியும். இப்பேட்டியை வெளியிட்ட ஏடும் அறியும் !

ஒருமுறை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் கலைஞர் முன்னிலையில், தமிழருவி மணியனுக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாகப் பேசியதால், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் துண்டுக் காகிதம் கொடுக்க முற்பட்டபோது, “ கலைஞரை நான் நிறைய விமர்சனம் செய்திருக்கிறேன். எனவே, அவரைப் புகழ்ந்து பேச எனக்கு நிறைய நேரம் கொடுப்பதுதான் நியாயம் ” என்று பேசிய உத்தம சிகாமணிதான் இவர் !

காலமெல்லாம் இந்திரா, ராஜீவ், சோனியா ஆகியோரை எதிர்த்து வசைமாறி பொழிந்து அரசியல் நடத்திய தமிழருவி மணியன், எல்லாவற்றையும் இழந்து, சோர்ந்து தனிமனிதராக நின்ற நிலையில்தான் பதவி சுகத்திற்காகக் காங்கிரசில் இணைந்தார். முதலில் புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்று கனவு கண்டார்; பிறகு மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகலாம் என்று கனவு கண்டார். ஆனால், கனவுகள் நொறுங்கிய பிறகு, காங்கிரஸ் தலைவர்கள் குறித்து இழிவான விமர்சனங்களை மேற்கொண்டவர்தான் தமிழருவி மணியன்.

தமக்குச் சென்னையில் சொந்த வீடு இல்லை என்று புலம்பிக் கொண்டிருந்த தமிழருவி மணியன், முதல்வர் கலைஞரைப் பார்த்து

“எனக்கு நிரந்தர முகவரி இல்லை. எனவே, எனக்கு அரசுக் குடியிருப்பில் அதுவும் கீழ்ப்பாக்கம் டெய்லர் சாலையிலுள்ள உயரதிகாரிகள் வசிக்கும் அடுக்குமாடி சொகுசுக் குடியிருப்பில், மூன்று படுக்கையறை கொண்ட வீட்டை ஒதுக்கி, நிரந்தர முகவரி வழங்குங்கள்” என்று  கேட்டதற்கு இன்னும் சாட்சியங்கள் இருக்கின்றன. இவர் தம் கைப்பட எழுதிக் கொடுத்த கடிதம் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடத்தில் இருப்பதைத் தமிழருவி மணியன் அறியாதவரல்லர் !

கடந்த காலங்களில் இவரைப் போல ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள் எவரும் இருக்கமுடியாது. 26.02.2006 இல் வெளிவந்த ‘குங்குமம்’ இதழில், “அகராதியில் ஆணவத்திற்கு நேர் விளக்கம்தான் ஜெயலலிதா! தான் சொல்வதற்கு உலகமே தலையாட்ட வேண்டும் என்று ஆணவம்  எதிர்பார்க்கும். நினைப்பது நிறைவேறாதபோது, ஆணவம் கோப நெருப்பினைக் கக்கும். ஆணவமும் கோபமும் பிரிக்கமுடியாத இரட்டைப் பிசாசுகள்! 6 கோடித் தமிழரையும் ஒற்றைப் பெண்மணியாய், தன் கொற்றக்கொடையின்கீழ் பரிபாலனம் செய்வதற்காகவே மண்ணில் அவதாரம் எடுத்தவர் போல் காட்சி தருபவர்தான் ஜெயலலிதா” என்று பேட்டியில் கூறி, ஜெயலலிதாவை அன்று தோலுரித்தவர்தான் தமிழருவி மணியன்.

‘கலைஞரைவிட ஜெயலலிதா நல்லாட்சியை வழங்குவார்’ என்று கூறியதன் மூலம், தமிழருவி மணியனின் காழ்ப்புணர்ச்சியும், வயிற்றெரிச்சலும் யாருக்குப் புரிகிறதோ இல்லையோ, நமக்கு நன்றாகவே புரிகிறது.

‘நெஞ்சில் பட்டதை நேர்படச் சொல்பவர், அறத்துக்கும், புறத்துக்கும் மாறாகச் சல்லிகாசு சம்பாதித்ததில்லை, முகமூடி மனிதர்களின் சுயமுகம்’ என்று சில வார்த்தை ஜாலங்களை வைத்துக்கொண்டு, கடந்த கால நிகழ்வுகளை மட்டுமே பேசுபவர்களால் சமூகத்திற்குக் கடுகளவு பயனும் ஏற்படாது.

நிறையக் கனவுகளோடு அரசியலுக்கு வந்தவர் தமிழருவி மணியன். பாவம்! கனவுகள் மெய்ப்படாத காரணத்தால், சகிப்புத்தன்மையை இழந்து விரக்தியின் விளிம்பில் நின்றுகொண்டு நிதானமிழந்து, நாள்தோறும் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

தமிழருவி மணியன் அரசியலில், ஆன்மீகத்தில், சமூகத்தில் என அனைத்துத் தளங்களிலும் தோல்வி கண்டவர். அவர் வெற்றிபெறாமல் போனதற்குக் காரணம், அவரது பேச்சுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தமே இருந்ததில்லை. தாம் ஒரு ‘போலி மனிதர்’ என்பதை மறைப்பதற்கு அவர் அணிந்திருக்கும் முகமூடிகள் ஒன்றன்பின் ஒன்றாக கழற்றப்படுவதற்கு யாருக்கு நன்றி சொல்கிறோமோ இல்லையோ, ஆனந்த விகடனுக்கு நன்றி சொல்லியே ஆகவேண்டும்! ஏனெனில், ஆனந்த விகடன் கேள்வி பதில் மூலம் தமிழருவி மணியனின் முகமூடி முற்றிலும் கழற்றப்பட்டு அம்பலப்படுத்தப் பட்டுள்ளார்.

Pin It