கவிதையின் எழுத்துக்களுக்குள் காலத்திற்கான வழித்தடங்கள் ஒளித்து வைக்கப் பட்டிருக்கிறது. கவிதையின் சொற்களுக்குள் திறக்காத கதவுகளை உடைப்பதற்கான ஆயுதங்கள் காத்திருக்கின்றன.

கவிதையின் தோள்களில் பயணிக்கிறது முக்காலமும். இறந்தகாலத்தின் உதிர்ந்த இறகுகள் பறந்து திரிந்த சுவடுகளை அடையாளப்படுத்துகிறது. நிகழ்காலம் தனக்கான பாதைகளைத் தேடித்தேடி பயணிக்கிறது. கவிதை தன் கரம் பிடித்து ஏதோ ஒரு மாய உலகத்திற்கு தன்னை அழைத்துச் செல்லுமென கனவு காண்கிறது.

கவிதைகளை ஏந்திக் கொண்டு அலையும், காற்றின் வழியே இழந்த அன்பின் தீய்ந்த வாசனையும், வஞ்சிக்கப்பட்ட உலகின் மனசாட்சியும் உலாவிக் கொண்டே இருக்கிறது.

எழுதப்படாத கவிதைகள் அன்பைத் தொலைத்த விழிகளைப் போல திக்கெட்டும் அலைந்து திரிகின்றன.

ஒவ்வொருவருக்கள்ளும் ஒரு எழுதப்பட்ட கவிதையும், எழுதப்படாத கவிதையுமாக காலம் வலமாகிறது.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.