மனித வாழ்வில் தம்மால் செயலுருப்படுத்த முடியாத அல்லது செயலுருப்படுத்த நினைக்காத சிந்தனைகள் வழிப் பிறக்கும் சொற்கள் சொற்றொடர்களுக்குள்ளேயே சொர்க்கத்தைக் காண்பதில் உவகையும் உளத்திருப்தியும் அடையும் மனிதர்கள் நிரம்பிய சமூகமொன்றில், கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் தாம் வரித்துக் கொண்ட இலட்சியம் ஒன்றிற்காக உயிர் கொடுத்து, உடல் உறுப்புகளைக் கொடுத்து, உள்ளத்து விருப்பங்களைக் கொடுத்து நிறைவேற்றிய மாபெரும் பணியின் ஒரு சிறு பகுதிக்குச் சொல் வடிவம் கொடுக்கும் அரிய முயற்சியின் வெளிப்பாடே விழுதாகி வேருமாகி என்ற இந்தப் போரியல் வரலாற்று ஆவணம்.

“எமது போராட்டத்தின் வரலாற்றை அதன் ஆழத்திலும் அகலத்திலும் அதன் யதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக் கொள்வது கடினம். போர் பற்றிய அறிவு ஞானம் இல்லாத பழமையில் புதைந்து போன வரலாற்றாசிரியர்களால் எமது பெண் போராளிகளின் வரலாற்றைத் துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம், எதிரி மட்டும் அறிந்ததை எல்லோரும் அறியட்டும்’’ என்ற தலைப்பில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் மனப்பதிவுகளைச் சுமந்து நிற்கும் முன்னுரையில் காணப்படும் மேற்கண்ட வாசகம் இந்நூல் தொடர்பான பார்வை ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிறு தயக்கநிலையை ஏற்படுத்தியிருப்பினும் கூட எந்த ஒரு பொருளினதும் மெய்ப்பொருளைக் காண்பதற்குப் பார்த்து, கேட்டு, படித்து, உணர்ந்து, அனுபவித்துப் பெற்ற புலன் வழி அறிவை, புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணை கொண்டு சீர்தூக்கிப் பார்க்கும் உரிமையும் அதற்கான ஆற்றலும் இம் மண்ணில் வாழும், இம் மண்ணை நேசிக்கும் ஒரு பிரகிருதிக்கு இருக்கும், இருக்க முடியும் என்ற உள்ளுணர்வு தந்த தூண்டல் இங்கு உங்கள் முன் நூல் பற்றிய பார்வையாக விரிகிறது.

எந்தவொரு நூலையும் மதிப்பிடும் பணியில் கவனத்தில் கொள்ளப்படும் அம்சங்கள் மூன்று. நூலின் உருவமைப்பு, உள்ளடக்கம், அதன் உயிர்; பாதை திறப்பினால் வேறு பயன் கிடைத்ததோ இல்லையோ மண்ணின் வளத்தையும் மனதின் உரத்தையும் சிறப்பாகப் படம் பிடிக்கும் அட்டைப்படத்துடன், பார்ப்பவர் கண்களுக்குப் படிக்கத் தூண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தும் கணினி அச்சமைப்புடன் எமது கரங்களில் ஒரு நூல் தவழ்கிறது. இது தான் உருவமைப்பு சொல்லும் சேதி.

உள்ளடக்கம் சொல்லும் சேதி சற்று வித்தியாசமானது.

“எதிரி மட்டுமே அறிந்ததை எல்லோரும் அறியட்டும்’’ என்ற தேசியத் தலைவரின் மனப்பதிவைச் சுமந்து,

“கால விரிப்பில் கட்டவிழுந்து கொண்டிருக்கும் ஓர் படையணியின் இராணுவ சாதனைகள் உயிர்த்துடிப்புடன் பசுமையான நினைவுகளுடன் இங்குப் பதிவாக்கப்பட்டுள்ளது.’’ என்ற அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனின் பாராட்டுகளை உள்வாங்கி,

“இது இரத்தத்துளிகளால் எழுதப்பட்ட உண்மை மனிதர்களது கதை. எங்களுக்குள் இருந்தது ஒரு குடும்ப உறவு. இந்த வாழ்விலும் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும்--- போர் அரங்குகளில் அணிகளைக் களமிறக்கும் ஒவ்வொரு தடவையும் என் மனம் இறுகும்’’ என வரலாற்றை ஆக்கியோரின் வரலாற்றை இரைமீட்கும் தளபதி விதூஷாவின் உள்ளத்து உணர்வுகளைத் தாங்கிப் பெண்கள் அணியின் முதல் வித்தான மாலதிக்கு வீரவணக்கம் செய்து,

“போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அது எங்களுக்குப் புரிகிறது. பொருளாதாரப் போர் கருத்தியல் போர் எல்லாமே பாதை திறப்பின் பின்னர் வலுத்து வருகிறது.. தனியார் நிறுவனங்கள் கொட்டுகின்ற சல்லிக் கற்களுக்குள்ளும் படை படையாக ஊற்றுகின்ற தாரின் கீழும் இவர்களின் வியர்வையும் இரத்தமும் தசைத்துணுக்குகளும் புதைந்து போய்க்கொண்டிருக் கின்றன. மாயப்போர்களாலும் காலவெள்ளத்தாலும் அழியாதவர் களாகத் தலைமுறை கடந்தும் வாழ்பவர்களாக இவர்களை நிலைநிறுத்தவே இந்நூலை எழுதினோம் எனக் கதை பிறந்த கதையைத் தமக்கேயுரிய நடையில் பணிவுடன் சமர்ப்பிக்கின்ற புரட்சிகா, காந்தா, மலைமகள் ஆகிய மூன்று போராளிகளதும் உணர்வுகளைத் தாங்கி, 567 பக்கங்களில் 11 அத்தியாயங்களில் படையணி எதிர் கொண்ட வரலாற்றுச் சமர்களின் இராணுவப் புவியியல் வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிச் சமர் புரிந்த அமைவிடங்களின் நிலவுருவப்படங்களுடனும், படையணியின் வரலாற்றை விளக்கும் மூன்று பக்க கவிதையுடனும் வித்தாகிப் போன 1117 மாவீரர்களின் பட்டியலுடனும் உள்ளடக்கம் கச்சிதமாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.

உள்ளடக்கம் சொல்லும் இன்னொரு செய்தி நூலின் ஒழுங்கமைப்பு. பாதை திறப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற நிகழ்கால வினாவொன்றுடன் தொடங்கி மீண்டும் நிகழ்காலத்தைத் தொட்டு நிற்கின்ற உள்ளடக்க அமைப்பு. யாழ் மண்ணை விட்டு முழுதாக வெளியேறிய மக்களைப் பிடித்திருந்த அதே இறுக்கம் எழுத்துநடையிலும்---இராணுவம் வரப்போவதை அறிந்த தளபதி விதூஷாவின் பரபரப்பு படையினரால் இழப்பு படையினருக்கு இழப்பு “கண்ணாடியைச் சிறு கல்லொன்றால் உடைத்துத் தன் வீரப்பிள்ளையின் படத்தை உரித்து எடுத்து சேலைக்குள் மறைத்தவாறு தேம்பி அழுது கொண்டே கிளாலிக் கடற்கரையை விட்டுத் திரும்பும் அந்த மூதாட்டியினைப்போல் மக்களின் துயரங்கள்’’ அனைத்தும் அதற்கேயுரிய இறுக்கமான உணர்வுடன்-- இந்த இறுக்கம் முல்லைத்தள மீட்பில் தளர்ந்து, மீறிண்டும் ஆனையிறவுத் தோல்வியில் துவண்டு, வெற்றி நிச்சயம் நடவடிக்கையைத் தீரமுடன் தாங்கி, மன்னார் போர்முழக்கத்தைப் பம்பலாய் வரவேற்று, ஆனையிறவில் அட்டகாசமாய் நுழைந்து, சாவகச்சேரியை விட்டுத் துயருடன் மீண்டும் பின்வாங்கி, இறுதியில் போர்நிறுத்தத்தின் பின்னரும் கிட்டத்தட்ட காவியா, மதி போன்ற திறமை மிக்க தளபதிகள் உட்பட 100 போராளிகளை விழுங்கிய தீச்சுவாலை நடவடிக்கையின் வலியைத் தாங்கி-- இவை உணர்வின் வரிகள் அதனால் தான் எழுத்துகள் கூட இவர்களைப்போல் இறுக்கங்களையும் வலிகளையும் குதூகலங்களையும் அதற்குரிய ஒழுங்கில் அனுபவிக்கிறதோ--?

உயிரின்றி உடலால் பயனில்லை. எனவே இவை உயிர் சொல்லும் சேதிகள்;.

எந்தவொரு நூலும் அது கொண்டுள்ள கருத்தின் அடிப்படை யில் புத்துயிர் தருவது, தகவலைத் தருவது, உயிர்ப்பூட்டுவது என மூவகைப்படுகிறது. உண்மையோ பொய்யோ நல்லதோ தீயதோ படிப்பவருக்கு ஒரு புதிய உணர்வை, புதுவித எழுச்சியை, புதுவித கிளர்ச்சியை, பொழுதுபோக்கு உணர்வைத் தருபவை புத்துயிர் தரும் நூல்கள் எனப்படும். அப்பட்டமான உண்மையிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ரோல்ஸ்ரோயின் புத்துயிர்ப்பு, மக்சிம் கோர்க்கியின் தாய், லியோன் யூரிஸின் எக்ஸ்சோடஸ் இவ்வகையைச் சார்ந்தது. வரலாறு, அரசியல், புவியியல் போன்று எடுத்துக் கொண்ட பொருட்துறை தொடர்பாகப் பொதுவான தகவலை உள்ளடக்குபவை தகவலைத் தரும் நூல்கள் எனப்படும். இவை இரண்டையும் தவிரப் பொருளாதாரத் தத்துவத்தைப் புகுத்திய அடம்ஸ்மித்தின் தேசங்களின் செல்வம் போன்று, பொதுவுடமைத் தத்துவத்தைத் தந்த கார்ல் மாக்ஸின் மூலதனம் போன்று உயிரின உருவாக்கத்தை விளக்கிய டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு போன்று மனிதனின் அறிவைத் தூண்டுகின்ற சிந்திக்கச் செய்கின்ற மனிதனையும் சமூகத்தையும் முன்னேற்றுகின்ற உயிர்ப்பூட்டும் நூல்கள் எம்மிடம் மிகவும் குறைவே. அதிலும் இந்த மூன்று அம்சங்களும் ஒருங்கு சேர அமைந்திருக்கும் அற்புத வாய்ப்பு ஒரு சில நூல்களுக்கே அமைந்துவிடுகின்றது.

விழுதாகி வேருமாகி என்ற இந்த வரலாற்று நூல் தான் சொல்ல நினைத்ததை ஒளிவு மறைவின்றிச் சொல்லும் பாங்கில் போரியல் வரலாற்றுத் தகவலைத் தரும் ஒரு நூலாகிறது. எப்படி?

“ஆனையிறவில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று தடவைகள் சமர்க்களத்தின் தோல்விகளை ஒப்புக்கொள்வதில் மழை சொரியும் இருளோடும் இருண்ட எம் மனங்களோடும்-- பூநகரி நோக்கி வந்தது எமது படகுகள் மட்டுமே-- எம் மனங்களெல்லாம் அரியாலையில், சாவகச்சேரியில், வண்ணாத்திப் பாலத்தில் இன்னும் இன்னும் எம் உறவுகளின்; உயிர் பிரிந்த களங்களில்--- ஒவ்வொரு சோடி விழிகளாலும் படகுகள் நனைந்தன’’ எனப் பலத்த உயிரிழப்புகளுடனான பின்னடைவைச் சந்தித்ததை நினைவு கூர்வதில் எமது படையணி பங்கு கொண்ட அனேக சமர்களில் தட்சாயினியின் கால்கள் நடந்திருக்கின்றன. களங்களில் அவர் காட்டும் வெஞ்சினம், உடனிருக்கும் போராளிகளில் அவர் வைத்திருக்கும் அன்பு, பராமரிப்பு, வழிகாட்டல், தவறு சிறிதென்றாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் அவர் வழங்கும் ஒறுப்பு, அதன் பின்னரான விளக்கம்--- ஈடு செய்யமுடியாத இழப்பு இது. பொறுப்புகளை ஈடு செய்யலாம் மனிதர்களை ஈடு செய்வது இயலாத காரியம்-- எனச் சக போராளி ஒருவரின் திறமையை வெளிப்படையாக அளவிடுவதில் எங்களுடைய எல்லாப் பொறுப்பாளர்களுமே எமது பொறுப்பிலிருந்து ஒருபடி கீழிறக்கப்பட்டோம்; காற்று இறக்கப்பட்டோம்; எனப் புளியங்குளம் வெற்றிச்சமரில் கூட உயிரிழப்புக்களைக் குறைப்பதில் கூடுதல் கவனம் எடுக்காமைக்காக காத்து இறக்கப்பட்டதைப் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொள்ளுவதில்.

குறுஞ்சி என்ற மருத்துவப் போராளியின் புதிய கள அனுபவத்துடன் தளபதி விதூஷா மல்லுக்கட்டியதை வெளிப்படுத்துவதில்--- வெடிபொருட்களை இழந்ததை, கஞ்சியே களவாழ்க்கையாக மாறிய பொருளாதாரப் பின்னடைவைச் சொல்வதில்- என்று பல இடங்களில் இந்த ஒளிவுமறைவற்ற தன்மை பேணப்படுகிறது. சொல்லப்படும் தகவல்கள் சமர்க்களங் களை வழிநடத்தியவர்களின் நேர்காணல்கள் மூலம் மேலும் வலுவூட்டப்பட்டிருப்பது நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. வெறுமனே பொதுத் தகவலைத் தரும் பணியுடன் நின்று விடாமல் களமுனைகள் இராணுவத் தள அமைப்புகள் வீதிகள் வெட்டைகள் காடுகளின் தன்மைகள் அமைவிடங்கள் என இம் மண்ணில் நடந்தேறிய வரலாற்றுச் சமர்களின் வழித்தடங்கள் பற்றி அறிய விழைபவருக்கு மிகச் சிறந்த ஒரு குறிப்புதவு நூலாக இது கருதப்படக்கூடியது. அதுமட்டுமன்றி வரலாற்றுச் சமர்களில் பங்கெடுத்தவர்களின் விபரங்களைத் தருவதில் வாழ்க்கை வரலாற்று நூலின் பண்புகளை ஓரளவிற்கு இது கொண்டுள்ளது.

நெருக்கடியான கட்டம் வந்த பின்னர் மைதிலியைக் களம் இறக்கித் தான் அந்தச் சண்டையை முடிவுக்கு கொண்டு வந்தோம். மைதிலியால் தான் அது முடியும் என சமருக்குப் பொறுப்பான தளபதி தீபனால் ஒத்துக்கொள்ளப்படும் அளவிற்குத் தனித்துவம் வாய்ந்த, யாழ் பின்னடைவின் போது தாடை உடைந்து குற்றுயிரும் குலையுயிருமாய்த் தப்பிப் பரந்தனில் கண்மூடிய அந்த அற்புதமான வேவுப்புலி போராளி லெப். கேணல் மைதிலி.---

எந்த இருளிலும் தடுமாற்றம் இல்லாத நிதானம் மிக்க காவியா, நிர்வாகத் திறன் மிக்க மதி, அமைதியான, உறுதியான, அப்பழுக்கில்லாத அந்த வீரமகள் நிஸ்மியா-- கிளாலி நடவடிக்கையில் துணிவுடன் போரிட்ட கப்டன் துளசிராம், லெப். அறிவரசி, வெற்றி நிச்சயம் படைநடவடிக்கையில் ,தனது முதல் கள அனுபவத்திலேயே அகழியில் தேங்கிவிட்ட இரத்தம் தன பாதங்களை நனைத்ததையும் பொருட்படுத்தாமல் மன உறுதியை வெளிப்படுத்திய இந்நூலின் ஆசிரியர்களால் பெயர் குறிப்பிட மறந்துவிட்ட? அந்தப் புதிய போராளி எத்தனையோ சண்டைகளுக்கு ஈடு கொடுத்துத் தமிழ் மண்ணை முத்தமிட்ட அந்த வீரமகள் லெப். திருக்கோதை.--- இப்படி நூலுக்குள் உச்சரிக்கப்படும் ஒவ்வொரு பெயருமே தளபதி விதூஷாவின் வார்த்தைகளில் சொல்வதானால் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு கதாநாயகி. சிலசமயம் ஒரு அத்தியாயத்துக்குள்ளேயே பல கதாநாயகியர்.

சொல்லப்பட்டவற்றை இலகுவான மொழிநடையில் எவரையும் ஈர்க்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதில் இது ஒரு புத்துயிர் தரும் நூலாகிறது. எப்படி---?

சில்வண்டுகளின் பின்னணி இசைக்கேற்ப நடைபெற்றுக் கொண்டிருந்த மின்மினிகளின் குழு நடனம் காவற் கடமையில் நின்றவர்களின் தனிமையைப் போக்கியது என இயற்கை மீதான நேசிப்பில்--.

அட அநியாயமே! இதுவா காஞ்சோண்டி--? முன்னே போய்க் கொண்டிருக்கும் வழிகாட்டிகள் அவற்றிலே முட்டாமல் மோதாமல் இலாவகமாக வளைந்து நெளிந்து போக நாங்களோ அதைப் புரிந்து கொள்ளாமல் ஒரு காஞ்சோண்டியையும் மிச்சம் விடாமல் உரசி உரசிக் கைகளால் தொட்டு விலக்கி இயற்கை மீது எமக்கிருக்கும் பேரன்பை வெளிப்படுத்தியவாறு சென்றால் கடிக்காமல் வேறென்ன செய்யும்? என்றும் இது என்னடா கரைச்சலாகக் கிடக்கு.ஏற்கனவே இசைக்குழு மாதிரி நகர்ந்து கொண்டிருக்கிறம். அதுக்குள்ள இதுகள் (மின்மினிகள்) லைற் போட்டுக் காட்டிக் கொண்டிருக்குதுகள்-- என இயற்கையின் இடைஞ்சலையும் சுவைபடக் கூறும் தன்மையில்.

நல்ல நிலையிலிருந்த 113 இராணுவ சடலங்களைச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டோம். ஆனால் மன்னகுளத்தின் நீண்ட அடர்ந்த காட்டு மரங்களிடையே இழக்கப் பட்ட சிறப்பு அணியினரின் மானம் மரியாதை கௌரவத்தை எடுத்து ஒப்படைக்க எந்தச் சங்கமும் முன்வரவில்லை என இராணுவத்தின் படுதோல்வியை எள்ளல் தொனியில் வெளியிடுவதில்... மீனைக் கொட்டி நீங்கள் கடற்கரையைக் குப்பையாக்குறீங்கள் எண்டு தான் நாங்கள் வாங்கிச் சமைச்சுச் சாப்பிடுறம் என்று யாருமே சாப்பிடாத நெத்தலியைவிடவும் பெரிய, சூடையைவிடவும் சிறிய அந்த மீனைச் சாப்பிட வேண்டிய இல்லாமையை வெளியிடாமல் சப்பைக் கட்டு கட்டுவதில்... இப்படி நூல் முழுவதும் ஆங்காங்கே புத்துயிர் கொடுக்கும் இத்தகைய எழுத்துகள் இந்நூலை உருவாக்கிய கரங்கள் துப்பாக்கிக்கு மட்டுமல்ல எழுதுகோலுக்கும் பழக்கப்பட்டு நாட்கள் பல என்பதை அறுதியிட்டுக் கூறுகின்றன. அன்றைய களமுனை ஏடான சுதந்திரக்காற்று தாங்கிவந்த தரமான ஆக்கங்கள் அனேகமானவற்றுக்கு அவர்களே சொந்தக்காரர்களாக இருந்தனர் என்ற தளபதி கருணாவின் கூற்று இங்குக் கருத்தில் கொள்ளப்படக்கூடியது. எழுதப்பட்ட மொழிநடையில், கதை சொல்லும் பாங்கில் இது இலக்கிய அந்தஸ்துக்குள் நுழையக் கூடியதோ என்ற பிரமை இருப்பினும் கற்பனையின் சாரம் கடுகளவும் இல்லாத இந்நூல் கதை சொல்லும் பாங்கில் மட்டுமே புத்துயிர் தரும் நூலின் வகைக்குள் அடங்குகிறது.

சொல்ல நினைக்காத எத்தனையோ செய்திகளைப் படிப்பவரின் சிந்தனையில் புதிதாக உருவாக்கும் பாங்கில் இது ஒரு உயிர்ப்பூட்டும் நூலாகிறது. எப்படி--?

பெறுமதி மிக்க வீராங்கனைகளின் உயிர்கள், ஐநூற்று அறுபத்தாறு தூக்கமற்ற இரவுகள், மழைக்காலங்களில் நனைந்தவாறும் நீர் நிறைந்த பதுங்கு குழிகளோடும் கழிந்த நாட்கள் வெய்யில் காலங்களில் நா வறண்டு மர இலைகளில் வழியும் பனி நீரையும் விடாது பொலித்தீன் பைகளில் சேகரித்துக் குடித்த நாட்கள், இராணுவம் நகரும் திசைகளில் எல்லாம் பதுங்குகுழிகளை அமைத்தவாறே நகர்ந்த நாட்கள், நீண்ட தொலைதூரச் சுமை தாங்கிய நடைப்பயணங்கள், ஓயாத சண்டைகளால் உண்டான உடல் களைப்பு, எல்லாவற்றையும் கடந்து ஓயாத விழிப்புடன் மாலதி படையணி போரிட்டது’ என்ற இந்தச் செய்தி சொல்லும் சொல்லாத செய்தி என்ன?

கிடுகுவேலிக் கலாச்சாரத்துக்குப் பழக்கப்பட்டுப்போன பெண்கள் சமூகம் ஒன்றில்--- குடும்ப கௌரவம், சாதிக்கெடுபிடி, அந்தஸ்து போன்ற வேலிகளுக்குள் நின்று கொண்டே உணர்வுகளுக்குத் தீனி போடும் சமூகம் ஒன்றில்-- சமர்க்களங்களில் நின்றுபிடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு எப்படி வந்தது? அணிகலன்கள்; மற்றும் பூக்கள் பொட்டுகளிலிருந்தும் சீதனக் கொடுமைகளிலிருந்தும் தப்பிக்கும் பொருட்டு புலிகளாக மாறியவர்கள் என முற்போக்குப்(?) பெண்ணியவாதிகளின் சாட்டையடிகளுக்குள் அகப்பட்ட புலிப் பெண்களுக்கு மரணம் அருகில் இருந்தபோதும் இயற்கை மீதான நேசிப்பு, இல்லாமையைக் கூடச் சுவைபடக் கூறும் உணர்வு எப்படி வந்திருக்க முடியும்? இயக்கத்துக்குப் போனவர்களைச் சமூகம் தீண்டத்தகாதவர் களாகத் தள்ளி வைக்கும் என்ற இவர்களின் தீர்க்க தரிசனங்களின்முன்னே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் குழந்தை குட்டிகளுடன் வாழவும், தேவையேற்படும் போது போரில் முகம் காட்டவும் புலிப் பெண்ணால் எப்படி முடிந்தது?. அவர்கள் நினைப்பது போல் இதற்கும் பயிற்சியளித்தார்களோ ஆண் புலிகள்?

இது பெண்ணின் மொழி. இக்கட்டான நிலையிலும் இயற்கையை நேசிக்கும் ஆற்றல், இல்லாமையிலும் இதயத்தை விட்டுவிடாத ஆற்றல், தோல்வியையும் பெருமனத்துடன் ஒப்புக்கொள்ளும் ஆற்றல், பெரு வலியையும் தாங்கிக் கொள்ளும் ஆற்றல் புலிப்பெண்ணுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள எந்தப் பெண்ணுக்கும் இயல்பானதொன்று. எனவே, இங்கு இட்டுக் கட்டவேண்டிய அவசியம் யாருக்கும் இருக்காது என்றே தோன்றுகிறது. எத்தனையோ வாதப்பிரதிவாதங்கள், கண்டனங்கள், கேலிகள் மத்தியிலும் தமிழீழப் பெண்ணியத்தின் புதிய செல்நெறியைக் காட்டும் சிறந்த குறியீடாக இந்நூல் பரிணமிக்கப் போவதைக் காலம் எடுத்துச் சொல்லும். அதுமட்டுமன்றித் தாயக விடுதலையில் விளக்கு ஏந்திய பெருமாட்டிகளாக மட்டும் தமிழ்ப் பெண் பயன்படுத்தப்படவில்லை. ஆண் பெண் என்ற அடையாளத் துக்கும் அப்பால் சென்று சமர்க்களங்களில் சரித்திரமாகி உறங்கு பவர்களையும் சரித்திரமாக இன்றும் உலா வருபவர்களையும் சுமந்திருக்கும் இந்நூல், தமிழீழப் போராட்ட வரலாற்றில் மறைக்க முடியாத மறக்க முடியாத உண்மைகளை வெளிக்கொணரும் அரிய நூலாக.

வருங்காலத்துக்கான பாதையைத் தேடுவதில் கடந்த காலம் பற்றிய கண்ணோட்டம் அவசியமானது. துரதிருஷ்டவசமாகக் கடந்த கால வரலாறு என்பது பெண்களின் வரலாற்றைப் புறக்கணித்த இருட்டடிப்புச் செய்த ஒருபக்கச் சார்பான வரலாறாக இருக்கும் வரை இது எப்படிச் சாத்தியப்படும்.-- பெண்களது பங்கு மறுக்கப்பட்ட வரலாறு கி.பி 3000 வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டது. ஆனால் பெண்களது வரலாறோ 19ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் தான் ஆரம்பித்தது. பெண்கள் இறுதியில் ஆண்களுக்கோ வரலாற்றுக்கோ இரையாகிவிடாது வலிமை வாய்ந்தவர்களாக வெல்லற்கரியவர் களாக மீண்டெழுந்தனர் என்ற றோசலின் மைல்ஸ் என்ற பெண் எழுத்தாளரின் வார்த்தைகளின் சாட்சியாக என்றும் வலம் வரும்.

முழுமை என்பது எதற்குமே சாத்தியமற்றது என்பதற்கு இந்நூலும் விதிவிலக்காக இருக்க முடியாது.

எத்தனையோ இராணுவ அம்சங்களை, போரியல் வியூகங்களை, தோல்விகளை வெளிப்படையாக எல்லோருக்கும் அறியச் செய்த இந்நூல் தென்மராச்சிக்குள் இராணுவம் திடீரென நுழைந்ததை அதைப் புரிந்து படை நகர்வைத் தடுக்கத் தளபதி ஒருவர் பதைபதைத்ததை மண்வெட்டியால் ஒருமுறை தானும் கொத்தும் முன்னரே இராணுவத்தை நாம் எதிர்கொண்டோம் என உயிரிழப்புகள் உடமை இழப்புகள் பற்றி வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் நூல்... அந்த மாபெரும் பின்னடைவின் காரணம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஏதோ காரணங்களுக்காக அன்று அவ்விடத்துக்கு வந்திருக்கவில்லை என்ற ஒற்றை வாக்கியத்தில் தொங்கிக்கொண்டிருப்பது இதன் கனதியைக் குறைக்கிறது.

எழுதியவர்களும் எழுதப்பட்டவர்களும் ஒரே குடும்பத்தவர்கள் என்பதனால் அன்னியோன்னியம் கூடிப் போராளியின் பெயருக்கு முன்னால் கொடுக்கப்படும் அந்தப் பதவிநிலை அடிக்கடி மாயமாய் மறைந்து விடுகிறது போலும். ஆட்டைக்கடித்து மாட்டைக் கடித்து இறுதியில் சிறப்புத் தளபதி கேணல் விதூஷா கூட வெறும் விதூஷாவாய்--- இராணுவக் கட்டமைப்பில் இந்தப் பதவிநிலைகள் மிக முக்கியமானவை என்பது அடுத்தவர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.

5.0 படையணியை உருவாக்குவதில் வெற்றிபெற்ற ஒரு படையணிக்கு இறுதிக்காலங்களில் எல்லைப்படைகளாய் உதவிய மக்களின் பங்களிப்பை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லையோ என்ற வினா மனதில் எழுவதைத் தடுக்கமுடியவில்லை.

களமுனைகள் இருந்த இடங்களைச் சுலபமாக எவரும் அறிவதற்கும் ஒன்றுக்கு மேற்பட்ட சமர்களில் கலந்து கொண்ட போராளிகளின் விபரங்களை அறிவதற்கும் ஏதுவாய் நூலின் இறுதியில் இடப்பெயர்கள் ஆட்களின் பெயர்கள் சமர்களின் பெயர்களும் அவற்றிற்கான பக்க எண்களும் உள்ளங்கிய ஒரு சொல்லடைவு கொடுக்கப்பட்டிருந்தால்--- கனதி இன்னும் கூடியிருக்கும்.

சமர்க்களம் தொடர்பான சர்வதேச ஊடகங்களின் அபிப்பிராயங்களை ஒன்றிரண்டுடன் விட்டுவிடாமல் நூலின் இடையிடையே அவற்றிற்குரிய காலக் குறிப்புகளுடன் இணைத்திருப்பின் கனதி இன்னும் கூடியிருக்கும்.

Pin It